Wednesday, April 26, 2023

குறும்பு by Veena Shankar



 குறும்பு 


                                  சிறு வயதிலிருந்தே குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமான பேச்சும் வருணுடைய அடையாளம். பள்ளியிலும் கல்லூரியிலும் அவன் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று கூட சொல்லலாம். எல்லோரையும் போல் சாதாரணமாக சிந்திக்காமல் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி நிகழ்ச்சியை ரணகளப்படுத்தி விடுவான் வருண்.  


                                       இப்போது யாருக்கும் தாங்கள் படித்த துறையில் வேலை அமையும் என்பதெல்லாம் சொல்ல முடியாது. அதுபோலவே வருணுக்கும் இருந்தது. ஆனால் பொழுது போக்கிற்காக தன் குறும்புத்தனத்தை மூலதனமாக வைத்து தன்னை யார் என்று காட்ட நினைத்த வருண் , யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தான். ,அதில் தன் திறமையையும் புதுமையையும் புகுத்த, அவன் திறமைக்கு மக்களும் ஆதரவு தந்தனர். .சேனலில் ஒவ்வொரு பகுதியையும் பயனுள்ளதாகவும் தரமுள்ளதாகவும் கொடுக்க தன் அலுவலக வேலையின் ஊடே மிகுந்த பிரயத்தனப்பட்டான்.   


                                         தன் சேனலில் பிரபலமான ஒரு கோயிலை பற்றி சொல்வதாகக் கூறிய அவன், அந்த கோயிலை சுற்றிக் காட்டினான். அந்த பகுதியில் சுமார் பத்து வருடங்களாக அந்த கோயில் அமைந்திருப்பதாகவும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் கோயில்களில் ஒன்றாக திகழ்வதால் அந்த கோயிலை பற்றி பகிர்வதாகவும் சொல்லியிருந்தான். மேலும் அந்த கோயிலின் வரலாற்றையும் சொல்ல தான் ஆசைப்படுவதாக சொல்லும் பொழுதே அவனுக்கு சிரிப்பும் மேலோங்கியது. இருந்தாலும் கோயிலை சுற்றி காட்டிய பின்னரே தன் சிரிப்பிற்கான காரணத்தை வருண் சொல்ல ஆரம்பித்தான்.   


                            பிரபலமான அந்த பிள்ளையார் கோயில் தன் குறும்புத்தனத்தால் தோன்றியது என்றும் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலையை தான் தன் வீட்டிலிருந்து இருந்து எடுத்து வந்து, ஆள் நடமாட்டம் உள்ள ஒரு இடத்தில் பூஜை பாத்திரங்கள் சகிதமாய் வைத்ததாகவும், அங்கே வந்து வழிபடுபவர்களை கேமரா மூலம் படம் பிடித்ததாகவும். சிலையை வைத்த சில நிமிடங்களிலேயே அவ்வழியில் வந்தவர்கள் பிள்ளையாரை கும்பிட்டு விபூதியை பூசிக்கொண்டு சென்றனர் என்றும் அதிலும் அங்கே வந்த ஒருவன், ஒரு படி மேலே போய் தன் நேர்காணலுக்கு வந்த கடிதத்தை சிலையின் முன் வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அதை பார்த்த வண்ணம் அந்த வழியே நடந்து வந்த பெண் பக்தை ஒருவர், அந்த சாதாரண சிலையை பூஜித்தால் தெய்வம் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்று சொல்லி கோயிலாய் மாற்றி ஊரறிய செய்து விட்டாள் என்ற நீண்ட கதையை சுருக்கமாக சொல்லி படம் பிடித்து ஒளிபரப்பினான்.  


                            இதனால் யூ ட்யூப் சேனலில் வந்த அந்த பிள்ளையார் கோயிலில் மேலும் கூட்டம் நிரம்பியது. வருணுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து கமெண்ட்ஸ்சும் லைக்சும் சப்ஸ்கிரைபரும் எகிறி போனது. பிறகு என்ன யூ டியூப் சேனலிலிருந்து வருணுக்கு கோல்ட் பிளேட் சில மாதங்களில் வீடு தேடி வந்தது.


நம்பிக்கைக்கு பாத்திரமாவது சிறப்பே. கடவுளும் இதற்கு விதி விலக்கல்ல போல.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...