Tuesday, February 28, 2023

அவசியமா அவசரமா by Vidhya Nivash



 நாக்கில் பட்டவுடன் சுர் என்றது

உணர்ச்சிமிக்க நாக்கு சுரணையற்றது

 நொடி பொழுதில் உன்னை பருகியுடன்

ஒவ்வொரு முறை நினைத்தாலும்

உனை கண்ட உற்சாகத்தில் 

தன்நிலை மறந்து நாக்கை சுட்டதே 

மிச்சம் 

அவசரம் சில சமயங்களில் அது 

அவசியமா 

அவ்வளவு நேரம் இல்லாத பசி

 எங்கிருந்து வந்தது ஹோட்டலில்

 காத்திருக்கும் போது

அவ்வளவு நேரம் வீணாக்கிவிட்டு

 கடைசி வினாடியில் வரும் அவசரம் 

 தலைக்கு மேல்தினமும் காலையில்

 உணவு உண்ணும் போது

அவசரத்தில் கொட்டிய வார்த்தை,

தண்ணீர்..

அவசியமான அவசரத்தை தவிர 

சிலபலநேரத்தில்  அவசரத்தை  துறந்து

 அவசியமான பொறுமையை அணிவோமா

குறிப்பாக சூப் குடிக்கும் போது..





குறை ஒன்றும் இல்லை எனக்கு by Veena Shankar

 


குறை ஒன்றும் இல்லை எனக்கு



குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ என்னை எழுப்பும் முயற்சியை கைவிடாத வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ என்னை பக்திபயமாய் மாற்ற நினைக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ எனக்கு செய்திகளை அனுப்பும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ பாடல்களை நிதமும் ஒலிக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு 

நீ படங்களை அழகாய் காண்பிக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ பாடங்களை அறிவாய் பகிரும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ என்னை காட்சியாய் உன் கண்ணில் படம் பிடிக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ காட்சிகளை உடனே பிறருக்கு கொடுக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ பதற வைக்கும் காட்சிகளை காட்டாத வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ பொய்யை புகட்டாத வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ அருமையான கைவினைகளை கற்று கொடுக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ அருமையான சமையல் நிபுணராய் என்னை மாற்ற துடிக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ என் பொழுதுபோக்கிற்காக இருக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ எப்போதும் உடனிருக்கும் வரை


குறை ஒன்றும் இல்லை எனக்கு

நீ பெரிய பாரமாக தோன்றாதவரை

ஆனால் குறையே எனக்கு 

நீ உன் உயிரை இழக்கும் நேரத்தில் உன்னை உயிர்ப்பிக்க நான் படும் பாடும், அந்த நேரத்தில் உன் துணையை 

நான் இழப்பதும் 

பொறுமையை காப்பதும்

வெறுமையை சம்பாதிப்பதும்

 பூலோகத்தில் இல்லாமல் போனால் நல்லது தானே அலைபேசியே?

Monday, February 27, 2023

கண்டு நின்றது by Vidhya Nivash

  


பல்லின் வரிசை போல் மேலே கீழே

 ஒன்றில்லை மற்றொன்று செயலற்றது

கண்ணுக்குள் இருக்கும் மணி போல் உன்னுள் நான்

 உள்ளே வெளியே செல்லாமல் ஓரிடத்தில்

 மேலே கீழே ஆடும் நாக்கு

உள்ளே வெளியே சென்று வரும் மூச்சு

மூச்சு விடாமல் அடக்கிய பேச்சு

பேச்சிற்கு மயங்கிய மனம்

மனத்திற்குள் எத்தனை ரணம்

மேலே கீழே உள்ளே வெளியே ஓடும் 

நிலையற்ற எண்ணம் வானின்

 வண்ணக்கலவையை கண்டு நின்றது



விடையறியா கேள்விகள் by Veena Shankar

 


விடையறியா கேள்விகள்



நமக்கு தெரியாமலே நம் உடலின் அமைப்பு மாறுவதும் 

(அதனால் நம் ஆடையின் அளவுகள் மாறுவதும்)



மண்ணில் விதைத்த விதைகள் வெளிப்படுவதும்

(அதனின்று விருட்சமாய் உருவெடுப்பதும்)



பல வண்ண சேலைகள் இருந்தாலும் புது ரகங்கள் வந்தவுடன் வாங்க முனைவதும்

(பின்னர் காசு செலவழிந்ததை எண்ணி வருத்தப்படுவதும்)



விடுமுறைக்கு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து அந்த நாளையும் பரபரப்பாக மாற்றுவதும்

(மற்ற நாட்களில் வேலையின் நிமித்தமாகவும்) 



தினமும் படிக்கும் புத்தகத்தின் ஓரங்கள் மடிவதும் 

(அதை நினைத்து நம்மை நாம் கடிந்து கொள்வதும்)



சரியான நேரத்தில் வரும் பால்காரர் ஒருசில தினங்கள் தாமதமாக வருவதும்

(அதுவரை பொறுக்காத நாம் அவரை வசைபாடுவதும்)



சுற்றத்தார் உதவுவதில்லை என்று அவர்களை தவறாக நினைப்பதும்

(நாமும் அப்படித்தான் உள்ளோம் என்பதை மறந்து விடுவதும்)



அடிக்கடி மருத்தவ செலவு ஏற்படுகிறது என்று அமைதியில்லாமல் தவிப்பதும்

(ஆனால் நம் ஆரோக்கியம் மேம்படவே என்று நினைக்க தவறுவதும்)



கையில் காசு நிற்பதில்லை என்று புலம்புவதும்

(பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது என்பதை உணர முடிந்தும்)



என்னை கவனிக்க யாருமில்லை, உடலில் தெம்பில்லை என்று சொல்வதும்

(இருந்தாலும் வாழ்க்கையை கடக்க பாடுபடுவதும்)



தனக்கு தைரியமில்லை என்று சொல்வதும்

(அடுத்தவர் தன்னை வீரன் என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பதும்)



விடை தெரியா கேள்விகளே பதில் நம்மிடமே இருந்தும்

Sunday, February 26, 2023

ஆடி நின்றேன் by Vidhya Nivash

 


தேடி தேடி கிடைக்கும் சுகம்

தேடாமல் வருவதில் கிடைக்குமா 

நாடி நாடி வரும் சொந்தம்

நாடாமல் வரும் நட்பு

வாடி வாடி போன முகம்

வாடாமல் மலர்ந்ததென்ன

பாடி பாடி வரும் இன்பம் 

பாடாமல் வரும் துன்பம்

ஆடி ஆடி ஓய்ந்த கால்கள்

ஆடாமல் நிக்குமா

தேடி நாடி வாடி பாடி ஆடி நின்றேன்!




Saturday, February 25, 2023

" ம. ன " வரிசைக்கு " தெரியாது " by Veena Shankar



 " ம. ன " வரிசைக்கு " தெரியாது "


மங்கைக்கு ரகசியத்தை காக்க தெரியாது


மலருக்கு அழகை பூட்ட தெரியாது


மதியுள்ளோருக்கு அறிவை உதற தெரியாது


மத்தளத்திற்கு இடியை உதிர்க்க தெரியாது


மாவீரனுக்கு வீரத்தை இழக்க தெரியாது


மாலைக்கு சூரியனை தக்க வைக்க தெரியாது


மிதவைக்கு தண்ணீரை ஏந்த தெரியாது


மீனுக்கு மண்ணில் வாழ்ந்து காட்ட தெரியாது


முகத்திற்கு வசீகரத்தை மறைக்க தெரியாது


மூளைக்கு நுட்பமன்றி வேறு ஏதும் தெரியாது


மெல்லிய காற்றுக்கு உஷ்ணம் கொடுக்க தெரியாது


மேகத்திற்கு மழையை தடுக்க தெரியாது


மையலுக்கு சூது கொள்ள தெரியாது


மொத்தத்தில் மனிதநேயத்தின் அருமை தெரியாது


மோட்சத்திற்கு வழியும் தெரியாது


மௌனத்திற்கு விடையும் சொல்ல தெரியாது

Friday, February 24, 2023

என்ன சந்தம் by Vidhya Nivash

 


மெல்லிய நூலிழையில் அதிகாலை குளிர்ந்த காற்று மெதுவாக ஜன்னல் வழி உள்ளே வந்து இரும்புச்சட்டியை எட்டிப்பார்க்க..

என்ன சந்தம் .. 

என்ன சமைப்பது என்று தெரியாமல் குழம்பிய கையில் கிடைத்ததை சமைக்க ..

விடிந்தும் விடியாத அழகை கடற்கரையில் நின்று ரசிக்க நினைத்த மனம் இங்கு சட்டியில் வதக்க ஆதரவு தந்த காற்று பிள்ளைகள் சொல் போல்..  பார்த்த நொடியில் இது தானா என்று பட்டென்று மூடியது ஜன்னலை...

சூடான காப்பி ஆறுதல் தந்தது...

நீ நான் அம்புலி by Vidhya Nivash

 




சொல்லாமல் என்னை வந்து தழுவினாய்

ஜிவ்வென்று சிலிர்க்க சட்டென்று பூத்தேன்

நடை உற்சாகமாக உடல் லேசாக மனம் 

கும்மாளமடிக்க நெடுந்தூரம் நடக்க துணை தேடியது 

நான் வரேன் என்று அம்புலி தொடர

கூடவே மேகங்கள் கலைந்து வழிவிட 

உள்ளுக்குள் இசை மழையில் நனைய 

பள்ளம் மேடில்லா சமதரையும் 

சொர்க்கமாக உயர்ந்ததே..



கிடையாது by Veena Shankar



 கிடையாது


தவிக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் கிடையாது


தாங்கும் தாய்க்கு வெகுமதி கிடையாது


திருந்திய வாழ்விற்கு அங்கீகாரம் கிடையாது


தீரன் வாழ்வில் அமைதி கிடையாது


துடிக்கும் நெஞ்சங்களுக்கு பின்னடைவு கிடையாது


தூங்கும் மனிதனுக்கு வாழ்வு கிடையாது


தெளிந்த நீரோடைக்கு மாசு கிடையாது


தேடுதலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது


தைரியம் சொல்ல தோல்வி கிடையாது


தொண்டனுக்கு விடியல் கிடையாது


தோற்பதில் மட்டுமே துன்பம் கிடையாது

Thursday, February 23, 2023

படிகள் by Vidhya Nivash

 


படிகள் பளபளத்தால் வழுக்கும்

படிகள் சொரச்சொரப்பாகவும் ,

பார்க்க  கடுமையாகவும் இருக்கும்

 கரடுமுரடான படிகள் அனுப்பமிக்கவை

வெற்றிபடிகள்,

படிகள் ஏறவும் இறங்கவும் காத்திருக்கிறது,

அதில் ஏற வேண்டிய இடத்தில் ஏறி

இறங்க வேண்டிய இடத்தில் இறங்க 

வேண்டியது நம் பொறுப்பு..

படிகள் இல்லையேல் தடுமாற்றம்  ஒவ்வொரு

 காலத்திலும் ஒரு படி தேவை

பயணிப்போர் முடிந்தால் படியாக பிறருக்கு

 கைக்கொடுக்கலாம்

முடியாவிட்டால் படிகளை நசுக்காமல்

 விலகினாலே ஏறிய படிக்கு செய்யும் கைமாறு

இப்போது படிகள் நிறைய உள்ளது அது நகரும்

 படியா..  நகரா படியா.. என்பது உங்கள்

 ஆரோக்கியத்தை பொருத்தே...



படிகள் by Veena Shankar

 

 

வாழ்க்கையில் முன்னேறும் போது படிகளிலும் பின்னடைவு கொள்ளும் போது படிகளின் கைப்பிடி சுவர் போல சறுக்காமல் இருக்க முதல் படியில் கால் வைக்கும் போதே முயற்சியையும் நம்பிக்கையையும் மனதில் கொண்டு ஏறவேண்டும்

படிகள் நம்மை ஏற்றி விட மட்டுமே அமைந்ததல்ல. பின்னோக்கி திரும்பி நாம் ஏறிய பாதையை பார்க்கவும் கற்று தருகிறது

முதல் படியில் ஏறும் போதே கடைசி படியை பற்றி நினைப்பதை விட நம் முன் இருக்கும் அடுத்த படியில் ஏற நம்பிக்கை பிறப்பதோடு மட்டுமல்லாமல் நம் இலக்கை எளிதாக்க உதவும்

படிகள் by Akhiladevi Kumaran

 





Wednesday, February 22, 2023

இன்றைய சிந்தனை by Veena Shankar



 இன்றைய சிந்தனை


தனிமையை விரும்புபவர்களானாலும் பிறப்பிலும் இறப்பிலும் தேவை மனிதர்கள் துணை

அரிதாரம் பூசிய பெண்ணின் முகத்தை விட அவள் வேர்வை தோய்ந்த முகமே அழகு


மண்ணில் பொதிந்துள்ளதும் பெண்ணின் மனமும் அறியப்படாத பொக்கிஷங்கள்


காத்திருப்பதும் சுகமே! அது நாம் அடைய போகும் பொருளின் கவர்ச்சியை பொறுத்து.


செய்த குற்றத்திற்கு அழகு குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல்


கவலை மறக்க மனதை திறக்க வேண்டும்


பரிவு கொள்ளவும் பாசம் கொள்ளவும் உயிரும் உணர்ச்சியும் இருந்தால் போதும்.


பசி என்பதிலிருந்து வயிறு விடுமுறை எடுத்தால் சிந்தையும் விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு, அடுத்த வேளை என்ன சமைக்கலாம் என்பதிலிருந்து


இன்றைய உண்மையான தனிமை அலைபேசியை விலக்கி வைத்தால் புரியும்


செய்யும் செயலில் கிடைக்கும் திருப்தி ஒன்றே மனதிற்கு கிடைக்கும் அருமருந்து


தேடுதல் இல்லையென்றால் வாழ்க்கையில் சுகமுமில்லை துக்கமுமில்லை


மௌனம் விவாதத்திற்கு தோல்வி கொடுக்கும்

மௌனம் விவாதத்திற்கு முற்று புள்ளியும் வைக்கும்

வாய்ப்பு வந்தால் அதனை தவிர்க்க கூடாது. அதுவே கிட்டாமல் தட்டி போகுமேயானால் இன்னும் ஒரு நல்ல வாய்ப்பு நமக்காக காத்திருக்கிறது என கொள்ள வேண்டும்


திருமண புதிதில் வரும் கணவனின் அன்பும் எதிர்பார்ப்பும் இடையில் காணாமற் போனாலும் வயதான பின் மீண்டும் துளிர்விட்டு வளர துடிக்கிறது


செல்வாக்கு மிக்கவரிடம் உதவி என்று கேட்கும் வரை மட்டுமே நாம் அவர் மனதில் செல்வாக்குடன் இருப்போம்


நம் ரகசியம் பிறருக்கு தெரிய கூடாது என்று நினைத்தால் அடுத்தவர் விசயத்தில் நம் தலையீடும் கூடாது.


ஒருவரிடத்தில் நாம் காட்டும் எல்லையற்ற அன்பும் அந்த அன்பை பெறுபவருக்கு வெறுப்பை கொடுக்கும்

 

அமைதிக்கும் அனுமதி வேண்டும் நம் மதியிடமிருந்து

மனமார்ந்த மணவாளனுக்கு என் கவிதை மடல் by Veena Shankar

 


மனமார்ந்த மணவாளனுக்கு என் கவிதை மடல்


மணநாளன்று கரம் பிடித்து மணையாளி ஆக்கினாய் 

மங்கையின் பூரணம் தாய்மை எனும் அங்கீகாரம் கொடுத்தாய் 

மனக்கசப்பை விரட்டி சரி பாதி இடம் அளித்தாய் 

மனம் உவந்து நான் படிக்க உறுதுணையாய் நின்றாய் 

மன திருப்தி இல்லாத சமயத்தில் அன்பால் ஆறுதல் சொன்னாய் 

மத்தாப்பு புன்னகை பூத்து என் உறவுகளிடம் ஐக்கியமானாய் 

மந்தாரை பூ நிறத்தில் சேலை கட்டியதை ரசித்து படம் பிடித்தாய் 

மல்லிகை பூ சூடி விட்டு தினம் பூச்சூட்டல் விழா செய்தாய் 

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் கொண்டாய்

மழுங்கிய என் சிந்தனையை தூண்டும் கருவியாக இருந்தாய்


மற்ற நாட்களையும் இப்படியே கழித்து விட எனக்கு ஆசை

இவை இருந்தால் by Vidhya Nivash

 


பறக்க தேவை சிறகுகளா ஆசைகளா

ஆசைக்கு தேவை பணமா கனவா

கனவுக்கு தேவை ஏக்கமா தூக்கமா

தூக்கத்திற்கு தேவை அமைதியா அலுப்பா 

அலுப்புவிற்கு தேவை வெறுப்பா உழைப்பா

உழைப்பிற்கு தேவை வறுமையா முயற்சியா 

முயற்சிக்கு தேவை நம்பிக்கையா தோல்வியா 

தோல்விக்கு தேவை  வெற்றியா படிகளா

படிகளுக்கு தேவை இடமா ஆட்களா

ஆட்களுக்கு தேவை செலவா வரவா

வரவிற்கு தேவை அவசியமா கட்டாயமா 

கட்டாயத்துக்கு தேவை பெருமையா பொறுமையா 

பொறுமைக்கு தேவை மனமா நேரமா

நேரத்திற்கு தேவை அதிஷ்டமா விருப்பமா 

விரும்பினால் பறக்கவும் முடியுமே

இவை கூட இருந்தால்.. 




Tuesday, February 21, 2023

"மை" விதி by Veena Shankar




 " மை "விதி


அடுத்தவர் இருந்தும் அமைதியை தேடினால் அது தனிமை

மகிழ்ச்சியை பகிர யாரும் இல்லாமல் போனால் அது வெறுமை

பேச்சில் இருக்க வேண்டும் குளுமை

அறிவில் கொள்ள வேண்டும் செழுமை

குற்றம் கொள்வது இளமை

குறிப்பறிந்து நடப்பது முதுமை

கூடி கூடி பேசினால் அது இனிமை

என்றுமே அந்த நினைவை மனதில் சுமப்பது பசுமை

மனதில் வஞ்சம் கொள்வது கொடுமை

பிறரை காக்க நினைப்பது அருமை

கொடுப்பதில் வேண்டாம் சிறுமை

என்றும் அன்பால் இணைவது பெருமை

ஓசையில்லா மொழிகள் by Vidhya Nivash

 


மொழியில்லா உலகம் எப்படியோ..

வார்தைகள் இல்லா சைகை மொழி ஆதியாம்

அசைவின் மூலம் வரும் மொழி இசையாம்

கண்களில் பேசும் மொழி காதலாம்

கண்ணீரில் கலக்கும் மொழி வலியாம்

மனங்கள் கூடும் மொழி அன்பாம்

கைகள் கொடுக்கும் மொழி கொடையாம்

தலையை கோதும் மொழி பாசமாம் 

தட்டிக்கேட்கும் மொழி உடன்பிறப்பாம்

சுட்டிக்காட்டும் மொழி உறவினராம்

விட்டுக்கொடுக்கா மொழி பெற்றோராம்

கூடவே வரும் பேசா மொழி துணையாம்

தடுமாற்றத்தில் தாங்கும் மொழி நட்பாம்

உணர்ச்சிப்பூர்வமான மொழி நேசமாம்

 வார்த்தைகள் இல்லா உலகில்

 இன்னும் மொழிகள் பல பேசுகின்றன

 ஓசையில்லாமல்..

சப்தம்/நிசப்தம் by Veena Shankar

 


சப்தம் / நிசப்தம்


பிறப்பின் போது சிசுவின் அழுகை சப்தம் 


அகம் முகம் மலர உற்றாரின் சிரிப்பு சப்தம்


அதிகாலையில் கேட்கும் கோயில் மணி சப்தம் 


காலை வேளையில் பக்ஷிகள் எழுப்பும் சப்தம் 


நடுநிசியில் நமக்கு மட்டுமே கேட்கும் கொலுசு சப்தம்


தனிமையில் நிசப்த வேளையில் பல்லிகள் எழுப்பும் சப்தம் 


குழாயடி சண்டையால் அழியும் நிசப்தம் 


குடும்பத் தகராறு கொடுக்கும் நிசப்தம்


ஆய்வாளர் வரும் சமையம் நிலவும் சப்தம்


பிரிவு உபசார விழாவில் அதிகமாகும் சப்தம்


பின் தொடரும் விசும்பல் சப்தம்


இறுதியில் தோன்றும் நிசப்தம் 


இறந்தவரின் உடல் முன் அழும் சப்தம்


எரியூட்டல் செய்யும்போது நிலவும் நிசப்தம்


உறங்கும் வேளையில் அடுத்தவருக்கு கேட்கும் குறட்டை சப்தம்  

நிசப்தத்தை கலைக்கிறது

Monday, February 20, 2023

மண்ணிலா by Vidhya Nivash



அணைக்கு அடங்கா தண்ணீரும் 

தண்ணீருக்கு அடங்கா நெருப்பும்

நெருப்புக்கு அடங்கா வேங்கையும்

வேங்கைக்கு அடங்கா மாவீரனும் 

மாவீரனுக்கு அடங்கா பிள்ளையும்

பிள்ளைக்கு அடங்கா பிணியும்

பிணிக்கு அடங்கா உடலும் 

உடலுக்கு அடங்கா உணவும்

உணவுக்கு அடங்கா பசியும்

பசிக்கு அடங்கா கோபமும்

கோபத்திற்கு அடங்கா பணமும்

பணத்திற்கு அடங்கா குணமும்

குணத்திற்கு அடங்கா மனமும்

மனதிற்கு அடங்கா ஆசையும் 

ஆசைக்கு அடங்கா பெண்ணும்

பெண்ணிற்கு அடங்கா ஆணும்

ஆணுக்கு அடங்கா தேடலும்

கடைசில் எங்கு அடங்கும்??

மண்ணிலா...





Sunday, February 19, 2023

ரயில் பயணங்களில் by Veena Shankar

 


ரயில் பயணங்களில்


காணும் காட்சிகளில் ரசித்தது பல 

கருத்தினால் மாறுபடும் வார்த்தைகள் பல

விழி இல்லாதோர் பாடும் பாடல்கள் பல

மழலைகளின் அழுகுரல் கூச்சலும் பல

இணை பிரியா தொடரும் பெட்டியில்

 மாறும் மனிதர்களின்

மத்தியில் 

தொடர்ந்த வாழ்வுகள் பல.

 மலர்ந்த நினைவுகள் பல

கிடைத்த அனுபவங்கள் பல

விபத்துக்களில் சிதறிய உயிர்கள் பல

ஆரம்பித்த சினேகங்கள் பல

முடிந்த சோகங்கள் பல

Saturday, February 18, 2023

சின்னஞ்சிறு மலர்ச்சி by Vidhya Nivash

 


கதிரவனை கண்டு சிரிக்க காத்திருந்த  தாமரையும்

சந்திரனின் வருகையில் சிரிக்க காத்திருந்த ஆம்பலும்

அன்னையின் வாசனை முகர்ந்து சிரித்த குழவியும்

சரியான நேரத்திற்கு எதிர் நோக்கி வெடித்து சிரிக்க காத்திருந்த பருத்தி இதழ்களும்

தலைவனின் அடி ஓசையை கேட்டு சிரிக்க காத்திருந்த தலைவியின் பாத கொலுசும்

நெருப்பின் சிறு துளிப்பட்டவுடன் வானில் சிரித்த  பட்டாசுகள்

மழையும் வெயிலும் ஒருமிக்க சிரிக்க காத்திருந்த வானவில்லும்

ஆசிரியரின் முகத்தை கணினியில் கண்டு சிரிக்க காத்திருந்த சின்னஞ்சிறு வாண்டுகளும்..

சின்னஞ்சிறு மலர்ச்சியே புது விடியலுக்கான புரட்சியே..






Friday, February 17, 2023

அன்பால் விளையும் வெறுப்பு by Veena Shankar



 அன்பால் விளையும் வெறுப்பு 


                                        சுபாவும் ரேகாவும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக சேர்ந்து படித்தார்கள். இருவரில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பார்க்க முடியாத அளவிற்கு இருவரும் இணைபிரியா தோழிகள். கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் சமயம் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை சிலாகித்துக் கொண்டு வருவர். அவர்களிடையே சக பயணியாக பயணித்தவன் தான் பிரசாத். சுபாவின் பேச்சிலும் அவள் காட்டும் கண் அசைவிலும் தன்னை மறந்து போய் நிற்பான். இதனால் தன்னுடைய நிறுத்தத்தை தாண்டி அவன் பயணித்ததும் உண்டு. நல்ல வேலையில் இருப்பதால் சுபா கண்டிப்பாக தன் வசப்படுவாள் என கணக்கு போட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். எப்படியோ சுபாவின் தோழி ரேகாவின் மூலம் தூது அனுப்பி அதில் வெற்றியும் கண்டான். 


                                       பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. சுபாவின் பிரிவு ரேகாவை பாதித்தது. சுபா இல்லாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளும்படி பலர் ரேகாவிற்கு அறிவுரை கூறினாலும் சுபாவின் பிரிவை ஏற்க கடினமாக இருந்தது. இதனை மேலும் வளர விடக்கூடாது என்று எண்ணிய அவளது பெற்றோர் அவளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை பேசி முடித்தனர்.


                                      அதிர்ஷ்டவசமாக தோழிகள் இருவரும் அதே ஊரில் வாழ்க்கைபட்டாலும் சூழ்நிலை இடம் கொடுக்காததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இனம் புரியாத பிரசாதின் அன்பில் சுபா மயங்க, மெல்ல மெல்ல ரேகாவிடமிருந்து சுபா விலகினாள். 


                                   சுபா எது சொன்னாலும் செய்தாலும் அதற்கு மறுப்பு சொல்லியே அறியாதவன் பிரசாத். வீட்டு வேலைகள் முதல் எந்த வேலையானாலும் அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதுடன் அவளை தங்கத்தட்டில் தாங்கினான். ஒரு நாள் பிரசாதும் சுபாவும் கடை தெருவிற்கு போக, அங்கே ரேகாவை சந்தித்தனர். ரேகாவின் கணவர் அவளுடன் வராததை பற்றி சுபா விசாரிக்க, எப்போதும் தான் தனித்தே வருவதாக சொன்னாள். சுபாவின் புடவை நன்றாக இருக்கிறது என்றும் அந்த வண்ணம் அவளுக்கு பிடிக்காது என்றாலும் எதற்காக அதை வாங்கினாள் என்று சுபாவிடமே ரேகா கேட்க, தன் கணவர் வாங்கி கொடுத்ததாக சொன்னாள் சுபா. 


                      சுபா தாய்மை அடைந்த போதும், அவளின் பிள்ளைப்பேறு காலத்திலும் அவளை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி பிரசாத், அவர்களையும் அவளிடமிருந்து விலக்கி வைத்தான். 


                                                 திருமணம் ஆகி வருடங்கள் பல ஓடினாலும் பிரசாத் அவளிடம் சிறு சண்டை கூட போடவில்லை. ஆனால் ரேகாவின் கணவனோ அவள் தவறு செய்யும் நேரத்தில் அவளை கடிந்து கொண்டு சண்டை போடுவதாக அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறாள் சுபா. இதற்காக தன் கணவனை எண்ணி பெருமிதப்பட்டாள். 


                                    சுபா தனக்கு கார் ஓட்டி பழக வேண்டும் என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் பிரசாத் சேர்த்துவிட, தனியாக கார் ஓட்டிய சுபா விபத்துக்குள்ளாக்க, அதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிந்தாலும் கவலைப்படாத பிரசாத், அவளுக்கு ஆறுதல் சொன்னான். மேலும் அவளுக்காக புது கார் வாங்கி அதற்கு ஓட்டுனரையும் நியமித்தான். இது சுபாவுக்கு வருத்தத்தை அளித்தது.  


                                சுபா எங்கு சென்றாலும் கூடவே வரும் தன் கணவனை லேசாக வெறுக்க ஆரம்பித்தாள். ரேகாவை போல தானும் தன்னிச்சையாக செயல்பட முடியாததை கண்டும், பிரசாதின் அதீத அன்பினால் தான் சிறைப்பறவையாக மாறியுள்ளதாக சுபா ஒரு புறம் உணர்ந்தாலும் மறுபுறம் சுபாவை தாங்கும் கணவனை எண்ணி ரேகா ஏக்கம் கொண்டு, தன் கணவனும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப்பட்டாள்.


                                                      இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தோன்றினாலும் மிகுதியாக தோன்றும் எந்த செயலும் சந்தர்ப்ப வசத்தால் அடுத்தவரின் வெறுப்பை சம்பாதிக்கும்.


ஆணின் வீரமும் பெண்ணின் பொறுமையும் போற்றுதலுக்குரியதே.


எதுவும் அழகே எதுவும் அந்தந்த இடத்தில் இருக்கும் வரை.

கண்ணாடிக்குக்கூட வியர்க்க by Vidhya Nivash

 


தண்ணீரில் விளையாடிய கார்கூந்தல் தண்ணீர் சொட்ட சொட்ட நிலத்தில் நடைபோட பட்ட இடம் தெரியாமல் ஏங்கிய மண் விழுங்க 

இருப்புச்சட்டியில் மிதமான அனலில் பல நேரம் உருண்டு புரட்டப்பட்ட அல்வா நெய் சொட்ட சொட்ட அதை ருசிக்க ஏங்கிய மனம் வாயில் இட்ட நிமிடம் கரைய

பதமாக அரைத்த மாவில் எண்ணெயில் மிதந்த பூப்போன்ற வெள்ளை பணியாரம் எண்ணெய் சொட்ட சொட்ட காரச்சட்னியுடன் பிட்ட நிமிடம் மாயமாக போக

மாலையில் உறங்கி அதிகாலையில் பனித்துளி எழுப்பி மெதுவாக வெடித்த அரும்பு தேன் செட்ட செட்ட அயராது சுற்றிய தேனீ அலுங்காமல் விழுங்க 

வெண்புகை போன்ற மேகங்கள் கனக்க ஒன்றோடு ஒன்று மோத அடைபட்ட மழைத்துளி சொட்ட சொட்ட நனைந்த அட கண்ணாடிக்குக்கூட வியர்க்க...

அன்பு அக்காவிற்கு by Veena Shankar

 


அன்பு அக்காவிற்கு, 


                                             நான் இங்கு நலமே. உன் நலத்தையும் அறிய ஆவலே. என்ன தான் அலைப்பேசி வந்தாலும் அந்த காலத்தில் தொலைபேசியில் பேசுவது போலவே என்றாவது ஒரு நாளே தான் நாம் பேசி வருகிறோம். அன்றைய காலத்தில் எஸ்.டி.டி யில் பேச அதிகம் செலவாகும் என்பதால் நாம் கடிதம் மூலம் நம்மை குசலம் விசாரித்துக் கொண்டோம்.


                                  நான் திருமணமாகி சென்னையை விட்டு வெளியூருக்கு செல்கிறேன் என்பதை அறிந்ததும் நீ அழுததை நினைத்து இன்றளவும் எனக்கு கண்கள் பனிக்கின்றன. இப்போது உலகம் நம் கையடக்கத்தில் இருந்தாலும் பேசுவதற்கு நேரம் அமைவதில்லை. திருமணமானவுடன் அம்மாவும் நீயும் எனக்கு எழுதிய எல்லா கடிதங்களையும் நான் பொக்கிஷமாக சேகரித்து வைத்துள்ளேன். அலமாரியை சுத்தம் செய்யும்போது அதை எடுத்து வருடி மறுபடியும் படித்த பிறகே உள்ளே வைப்பேன்.


                                         நான் தாய்மை அடைந்ததை அறிந்து நீ எழுதிய கடிதத்தில், மாதுளை பழம் உடம்பிற்கு நல்லது என்றும் அப்போது எனக்கு மாதுளம் பழம் பிடிக்காததால் அதை சாப்பிட அறிவுறுத்தி இருப்பாய். அக்கா! இன்று சாப்பிடும் பொருள் எதைக் கொடுத்தாலும் அதை சாப்பிட நான் பக்குவப்பட்டு விட்டேன் என்பதை உன்னிடம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


                                      நீ வாழ்நாளில் சொன்ன ஒரே ஒரு நகைச்சுவையை நான் வெகுவாக ரசித்தேன். பதிலுக்கு உன்னை “அழகே நீ பேரழகி” என்னும் பாடலை நான் பாடியவுடன் நீ தன்னிலை மறப்பதும் அதை ஆயுதமாக பயன்படுத்தி பலமுறை உன்னை ஏமாற்றி இருக்கிறேன். 


                                    மேலும் என் ஊருக்கு அவ்வளவு எளிதில் ரயிலில் இடம் கிடைப்பதில்லை என்பதை நீ கூறிய வேலையில் எனக்கு இதயம் கனத்தது. மூன்று மாதங்களுக்கு முன் நம் தந்தை நம்மை விட்டு பிரிந்தாலும் உன்னுடனே அவர் இருந்ததால் என்னை விட நீதான் அதிகம் ஏக்கப்பட்டிருப்பாய் என்பது எனக்கு தெரியும். காலம் யாரையும் விட்டுச் செல்வதில்லை என்பது உனக்குத் தெரியும். நான் உன் வீட்டிற்கு வரும் சமயம் கூட நீ விடுப்பு எடுக்காமல் அலுவலகம் சென்றது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் தந்தை இறந்த சமயத்தில் நாம் இருவரும் ஒன்றாகவே இருந்தோம். ஆனால் நான் அந்த தருணத்தை எதிர்பார்க்கவும் இல்லை ரசிக்கவும் இல்லை. இழப்பினால் வந்த சந்தோஷமாக இருப்பதால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒன்றாகவே நாம் கழித்த அந்த பன்னிரு நாட்களில் நான், நம் அம்மாவின் இன்னொரு நகலாகவே உன்னை பார்த்தேன். கனத்த இதயத்துடன் ஊர் திரும்பிய எனக்கு ஆறுதல் சொல்லியும் அனுப்பினாய். இதற்கு மேலும் இந்த கடிதத்தை தொடர மனம் இடம் கொடுக்காத காரணத்தினால் தற்போது முடிக்கிறேன். 

                                                                                                     

                                                                                       இப்படிக்கு, 

                                                                                                 

                                                                                                     உன் வீணா

உறவாடிய உரையாடல் எங்கே by Vidhya Nivash



உணர்வை பரிமாறி கொள்ள 
வார்த்தைகளும், நேரமும் ,மனமும் 
போதுமே எழுத்தை விட சிறந்த ஆயுதம் உண்டோ...
எப்பேர்பட்ட மனதையும் துளைக்க
 
குரலை விட வலிமையான ஈட்டி உண்டோ...
எப்பேர்பட்ட மூளையையும் எட்ட

இதற்கு ஊடகமாக காகிதமும்,
தொலைபேசியும் எழுத்துக்கும் 
குரலுக்கும் உயிர்க்கொடுத்து மனதோடு உரையாட தொலைத்த ஒவ்வொரு நொடியும் சுகமே...

 அந்த உணர்ச்சிகள் பட்டாம்பூச்சி 

பறக்கும் துடிப்பு அதை விளக்கமுடியா ..

குரலோடு உறவாடிய மனது உருவை 

ஏற்க தயங்கும் மூளைக்கு 

எட்டியது மனதிற்கு ஏன் தயக்கம்..

உருவமற்று உயிரோடு உறவாடியவை 

உருப்பெற்று முன் வந்து உரையாட 

நேரமில்லை மனமில்லை 

வார்த்தையும் இல்லையே..

 

பூகம்பம் by Veena Shankar



பூகம்பம் 



அறிவின் ஆக்கமோ? அறிவியலின் தாக்கமோ ?

பூமியின் அழுத்தமோ? நம்பிக்கையின் இழப்போ ?

மனிதனின் ஆளுமையோ? 

படைத்தவனின் ஆதங்கமோ ?

மனதின் துன்பமோ?

மருவின் விளைவோ? அண்டத்தின் அதிர்வோ ? - நம் 

உயிரின் அதிர்ஷ்டமோ? தவிப்பின் காரணமோ?

கொந்தளிப்பின் உருவமோ ?

எவனின் குற்றமோ?

எமனின் குமுறலோ? உயிர் பலியின் அவலமோ ?

விடை தேட முடியுமோ? உயிருடன் இருந்தால்

Thursday, February 16, 2023

அன்புள்ள கண்ணே

 


அன்புள்ள  கண்ணே,

   பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட மருத்துமனை காதலர் தினத்திற்காக காத்திருந்தது.பயம் கலந்த சோகத்தில் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் பெற்றோர் ஆகப்போகிறோம் என்ற அளவற்ற மகிழ்ச்சியை தந்த இடம்.அன்று குழந்தைக்கு இதய துடிப்பு இருக்கிறது ஆனால் வளர்ச்சி மட்டும் குறைவு என்ற ஆதரவு வார்த்தைகளை சுமந்து சென்றோம்.

என் உயிரில் கலந்து உடலில் மிதந்த கண்ணே..பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே ப்ரவரி பதினாறாம் நாள் உன் இதய துடிப்பு நின்றது.உன்னை பிரசவிக்க வேண்டிய இடத்தில் மயான இருளும் பயமும் ..என்னை வேதனைப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாயோ தெரியவில்லை.என்ன தவறு செய்தோம் என்றும் தெரியவில்லை..உன் நினைவாக விடநினைத்ததை கூட கடைப்பிடிக்க முடியவில்லை.முடிந்தால் என்னை மன்னிப்பாயா....

இப்படிக்கு,

அன்புள்ள அம்மா

Wednesday, February 15, 2023

தோற்றத்தின் விளைவு by Veena Shankar



 தோற்றத்தின் விளைவு


                              நகரின் பெரும் பணக்காரர் வீட்டு திருமணம் என்பதால் திருமண மண்டபத்தில் இருக்கும் சாலையில் ஆங்காங்கே பேனர்களும் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன. இது சொர்க்கலோகமோ என்று நினைக்கும் படி மிகவும் ஆடம்பரமாக திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பி இருக்க, முகூர்த்த நேரம் முடிந்த அடுத்த நிமிடமே சாப்பாடு கூடத்திற்கு வந்திருந்தவர்கள் இடம் பெயர, சாப்பாட்டுக்கூடமே ரணகணப்பட்டு போனது. நேரம் ஆக சிறிது கூட்டம் குறைய, அதுவரை பொறுத்து காத்திருந்த பெரியவர் ஒருவர், சாப்பாடு போடும் இடத்திற்கு சென்று தனக்கான இலையை கண்டுபிடித்து அமர்ந்தார். அவர் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் பணக்கார தோரணையில் இருப்பதை உணர்ந்தார். தோற்றத்தில் கிழிந்த சட்டையும் அதிலும் அழுக்குத் தோய்ந்த வேட்டியமாய் முகத்தில் தாடியுடன் இருந்தவரை மற்றவர்கள் பார்த்து முகம் சுளித்தனர். 


                              எல்லா பதார்த்தங்களும் பரிமாறப்பட்டு சாப்பிட தயாராகும் வேளையில் கோட்டு சூட்டு அணிந்த ஒருவர் வேகமாக பெரியவர் பக்கத்தில் ஓடி வந்து அவரை தரதர என்று இழுக்க, தம்பி! ஒரு வாய் சாப்பிட்டு வருகிறேனே என்று சொல்வது போல் அவர் மனம் இருந்தாலும் “ உனக்கு இவ்வளவு திமிரு கூடாது. எச்சிலை சோறு திங்கும் உனக்கு இப்படி பணக்கார வீட்டு சாப்பாடு கேட்கிறதா? என்று சொன்னபடியே தனியே ஓரிடத்தில் நிற்க வைக்க, அங்கிருந்தவர்களின் நகைப்பினை அந்த பெரியவர் சம்பாதித்தார். வெட்கம் என்பதையே மறந்து போயிருந்தார். இருந்தாலும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு காலங்கள் பல ஆனதால் இந்த கூட்டத்தில் தன்னை யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று எண்ணினார். 


                                        பொதுவாக “ பபே ” என்று அழைக்கப்படும் இடத்தில் தன்னை போல் உள்ளவர்கள் பசியாற முடியாது என்பதால் இலை போட்டு பரிமாறும் இடத்தில் அமர நினைத்தார். ஆனால் அங்கேயும் துரதிஷ்டம் அவரை துரத்தியது.

 

                                               மீண்டும் அந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி, அந்த பெரியவரை பார்த்து “ கோயிலில் பிச்சை எடுக்கும் உனக்கு என்ன அவசரம்? கடைசியாக சாப்பிட்டு போக வேண்டியது தானே? என்று வசை பாட, அதன் பின் பல பந்திகள் பரிமாறப்பட்டு விட்டன. ஆனாலும் கூட்டம் நிரம்ப காத்திருந்தார் அந்த பெரியவர். எல்லாம் ஒரு சாண் வயிறு படுத்தும்பாடு. அந்நேரம் அவரருகே வந்த ஒரு சிறு பையன் “ தாத்தா! ரொம்ப நேரமா இங்கே நிற்கிறீங்களே? பசிக்குதா? “ என்று அவர் கையை பிடித்து கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பெரியவர் நிற்க, “ அவனிடம் உனக்கு என்ன பேச்சு? என்று ஆங்கிலத்தில் சொல்லி தன் குழந்தையை கூட்டிக் கொண்டு போனாள் அந்த குழந்தையின் தாய். ஆனாலும் அவரை திரும்பி பார்த்தபடியே சென்றது அக்குழந்தை.  


                        மேலும் அந்த பெரியவர் அப்படியே நின்று கொண்டிருக்க, டிப் டாப் ஆன இளைஞன் ஒருவன் அவருக்கு பக்கத்தில் வந்து, “ சாப்பிட வந்தீங்களா? இந்த மாதிரி இடத்துக்கு வரும் போது கொஞ்சம் நீட்டா டிரஸ் பண்ணி வரலாம் இல்ல? உங்களோட தோற்றமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காமிக்கிறது. பாருங்கள்! நானும் உங்களை போல தான். பெரிய பணக்காரன் இல்லை. நானும் வேலை தேடி நகரத்துக்கு வந்தவன் . அன்றாட வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் எனக்கு தனியே வசிக்க இடம் இல்லாமல் தினமும் நீங்கள் படுத்துறங்கும் இடத்தில் தான் நானும் என்னுடைய இரவு பொழுதை கழிக்கிறேன்.” என்று சொல்லி அந்த பெரியவரை ஒரு பந்தியின் ஓரத்தில் இலையில் சாப்பிட உட்கார வைத்தான். அவனை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அவன் காட்டிய இலையில் அமர்ந்தார் அந்த பெரியவர். இம்முறை கோட்டு சூட்டு போட்ட ஆசாமி பெரியவரிடமும் இளைஞனிடமும் ஏதும் சொல்ல விரும்பாமல் அடுத்த இடத்திற்கு நகர்ந்தான். காரணம் இளைஞனின் பணக்கார தோற்றம் அவனை அந்த இடத்திற்கு தகுதியுள்ளவனாக மாற்றி இருந்தது.


                                  ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டுப் போகும் இந்த இடத்தில் ஒரு ஏழை பெரியவருக்கு அவரின் தோற்றத்தினால் உணவு கிடைக்காமல் போவது என்பது மனிதனின் பிழையா? இல்லை அவன் மனதின் பிழையா? இதற்கான பதில் யாரிடமும் இல்லை என்பதே உண்மை.


                                     வறுமை கொடுமையானது. என்றாலும் தோற்றமும் அவசியம், உருமாறும் வாழ்க்கையில். மனதை தேற்றவும் அவசியம் மனிதாபிமானம்.

அன்றும் உதித்த சூரியன் by Vidhya Nivash



மேகங்கள் சேர்ந்து ஒன்றாய் கொட்டுகிறது மேளத்தை 

மேளம் அதிர வானம் முழங்க 

பூமி பிளக்க மெதுவாக அதிர 

ஒவ்வொன்றாக நகர 

ஓரே ஓலச்சத்தம்

சத்தில் பறவைகள் பரபரப்பாக 

உறங்கி கொண்டிருந்த நகரம்

மெதுவாக குலுங்க தூக்கத்தில் யார்

 உலுக்கியது என கண் திறக்கும் முன் சரிந்த

 உடல் வாழ்வின் விளிம்பில் நழுவியதை 

விழுங்க காத்திருந்த பாதாளம்

எங்கே போனது பூமியின் வேர் அதை ஆட்டியது 

யார்?



Tuesday, February 14, 2023

நீ உணர்வாய் by Veena Shankar



 நீ உணர்வாய் 


முள்ளாய் இருந்து பார் அதன் அழுத்தத்தை நீ உணர்வாய்

நிழலாய் இருந்து பார் அதன் வேகத்தை நீ உணர்வாய்

மலராய் இருந்து பார் அதன் வருத்தத்தை நீ உணர்வாய்

புத்தகமாய் இருந்து பார் அதன் கருத்தை நீ உணர்வாய்

மருந்தாய் இருந்து பார் அதன் மகத்துவத்தை நீ உணர்வாய்

கவிதையாய் இருந்து பார் அதன் கவித்துவத்தை நீ உணர்வாய்

பிம்பமாய் இருந்து பார் அதன் எண்ணத்தை நீ உணர்வாய்

கனியாய் இருந்து பார் அதன் உள்ளத்தை நீ உணர்வாய்

கண்ணியமாய் இருந்து பார் அதன் மாற்றத்தை நீ உணர்வாய்

காற்றாய் இருந்து பார் அதன் தோற்றத்தை நீ உணர்வாய்

உயிராய் இருந்து பார் அதன் ஆழத்தை நீ உணர்வாய்

வெளிச்சமாய் இருந்து பார் அதன் மார்க்கத்தை நீ உணர்வாய்

மனிதனாய் இருந்து பார் வாழ்வின் தத்துவத்தை நீ உணர்வாய்

அன்புள்ள அம்மாவிற்கும் அகிலாவிற்கும்

 


அன்புள்ள அம்மாவிற்கும் அகிலாவிற்கும்,

சதா இருபத்திநான்கு மணிநேரமும்  எனை பற்றி ஏங்கும் உயிர் உன்னையின்றி வேறு யார் உண்டு அம்மா.ஒவ்வொரு விஷயத்திலும் போராடி இதில் என்னை தள்ளி தள்ளி இன்று நினைத்தாலும்  என்ன சொல்வது.கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்ந்தேன்.உங்களுக்கு என்று ஏதும் இல்லாமல் உங்கள் கனவே நாங்கள் தான்.என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தினாய்.இன்றும் உன்னிடம் உள்ள துடிப்பு கண்டு வியக்கிறேன்.கல்வி என்ற உயர்ந்த செல்வத்தை கொடுத்தீர்.என்னால் முடிந்த வரை அதை நல்முறையில் பயன்படுத்துவேன் அம்மா.

என்னை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அகிலா.விதை ஒன்று தூவ பல நாள் சேமிப்புகிடங்கில் இருந்த விதைநெல் முளைத்த கதை.கண்டது கேட்டது படித்தது பிடித்தது எதோ ஒரு பொறுப்பை கொடுக்க என்னுள் உறங்கியது முளைத்தது.எண்ணங்களை சுதந்திரமாக அதை அப்படியே ஏற்றுக்கொண்ட விதம் இன்று திரும்பி பார்த்தால் அது நீயா எங்கே இருந்தாய்.பலரின் பாராட்டுகள் உற்சாகத்தை கொடுத்தது .புகழ்ச்சிக்கு பழக்கப்பட்ட மனதில் ஒரு தேக்கம்.மீண்டும் எனக்காக தொடரும் பயணம்.அதில் இந்த ஆண்டில் கனவை தொட்டேன் இன்னும் பல கனவுகளை தொடுவேன்..அதற்கு அடிக்கோடிட்ட  தூண்டில் நீங்கள் .உங்களுக்கு நன்றிகள் இல்லை கடமைப்பட்டுள்ளேன்.


Monday, February 13, 2023

அன்புள்ள என்னவருக்கு by Veena Shankar

 என்னவருக்கு காதலர் தினத்திற்கான கடிதம்



அன்புள்ள என்னவருக்கு,

                                            வணக்கம் என்று சொல்லி உங்களையும் என்னையும் நான் வேறுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. என் சுகத்தையும் சினேகத்தையும் உங்களிடமிருந்து அறிய ஆவல். நீங்கள் சுகமே.

                                       உங்கள் புன்னகைக்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் நான் உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பே பிறவி குணமாய், வரமாய் அது உங்களிடம் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தங்களின் பன்முக தோற்றத்தையும் அறிந்த நான், சில சமயங்களில் உங்களின் பதற்றத்தை அறிந்திருந்தாலும் தற்போது தான் தங்களின் நிலையிலிருந்து என்னை பார்க்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொண்டுள்ளேன் என்றே சொல்ல வேண்டும். 

                                   திருமணத்திற்கு முன்பு என்னவர் இப்படி இருக்க வேண்டும் என்ற மனக்கோட்டையை ஒரு நாளும் நான் கட்டியதில்லை. உங்கள் சிரிப்பினை, பல புகைப்படத்தின் மூலமாகவும் நேரடியாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன். என்னை பெண் பார்த்து, திருமண தேதி குறிக்கப்பட்டதும் உங்கள் பெயர் அடிக்கடி என் வேலை நிமித்தமாக வந்து போவது கண்டு எத்தனையோ நாட்கள் எண்ணியும் சிரித்தும் பரவசப்பட்டுள்ளேன். “ ஹரிச்சந்திரா “ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியை காதலிக்கும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் காதலியின் வெறுப்பை சம்பாதிக்க, கதாநாயகியின் “ சித்ரா” என்ற பெயரானது பல ரூபங்களில் வந்து அவனை நினைவுபடுத்தும். எனக்கும் இதே போல் பல இடங்களில் நடந்திருக்கிறது.

                                    திருமணத்திற்கு பின்னும் நான் படிக்க ஆசைப்பட, என்னை M.com., M.Lisc., மற்றும் தையல் என பல பட்டங்கள் வாங்க காரணமாக இருந்தது நீங்கள் தான். அதற்கு நான் நன்றி சொன்ன போது நீ படித்தாய், நான் படிக்க வைத்தேன் என்று சொல்லி என் மனதை நெகிழ்த்தி விட்டீர். மேலும் என் எழுத்துக்களை ஆதரித்ததும் நீங்கள் தான். என் படைப்பை தங்களிடம் பகிர்ந்து கொள்வதும் எனக்கு திருப்தி கொடுக்கும் செயல். வாழ்க்கை காரசாரமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் இருவரும் வாக்குவாதத்தின் உச்சத்தில் இருந்தாலும் அதை ஒரு சில நிமிடங்களிலேயே மறந்து, இறங்கி வரும் உங்கள் மனதிற்கு ஒரு சல்யூட்.

                                        காதலித்தவர்கள் எத்தனை பேருக்கு காதலர் தினத்தன்று திருமணம் நடந்திருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய தினத்தில் தம்பதியாய் பொறுப்பேற்ற நாம் இன்னும் காதலித்து வருவதற்கு இறைவனுக்கு நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் நான் நல்ல மனைவியாகவும் குழந்தைகளுக்கு தாயாகவும் குடும்பத்தினரிடம் பிணக்கு இல்லாமல் உறவை நீட்டித்துக் கொள்வதற்கும் என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டாலும் தங்களுக்கு முழு நேர தோழியாக இருப்பதையே விரும்புகிறேன்.

                                      நம்முடைய இந்த வெற்றி வாழ்க்கைக்கு, நேரம் கிடைக்கும் போது, அது இரவானாலும் சரி; பகலானாலும் சரி நாம் இருவரும் மனம் விட்டு பேசுவதே “ஹைலைட்” என நினைக்கிறேன். 

                                                தாங்கள் எடுக்கும் காரியம் எல்லாம் இனிதே வெற்றி பெறவும் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் அதில் இருக்கும் என்றும் உறுதியான மனப்பான்மையோடு சொல்கிறேன். பிப்ரவரி பதிநான்கில் இருபத்தி நான்காம் ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு, நம் பந்தத்திற்கு பங்கம் ஏதும் வாராமல் மென்மேலும் இதே போல் இருக்க தங்கள் சார்பாகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


இப்படிக்கு 

உங்களின் என்னவள்

அன்புள்ள தங்கைக்கும் தோழிகளுக்கும்

 


அன்புள்ள தங்கைக்கும் தோழிகளுக்கும் ,

எப்படி இருக்க ராஜீ.அறியாத வயதில் உன்னை பார்த்துக் கொண்டேன்.பிறகு உன்னை தொடக்கூட விடமாட்டேன்.வயது வித்திதாசம் அதிகம் என்பதலால் அவ்வளவாக பேசியதில்லை.என் அனைத்து வெளிவேலைகளையும் செய்தாய்..இன்றும் செய்கிறாய்.திருமணம் ஆன பிறகே உன்னிடம் அதிகமாக பேசியுள்ளேன்.தாய் போல் என்றும் எனக்கு சேவைகள் செய்கிறாய் அது நான் செய்த பாக்கியம்.யார் இளையவர் என்றே தெரியவில்லை.தமக்கை என்ற பெயரில் சிறுவயதிலிருந்தே பல இடைஞ்சல் ,தொல்லை, வலிகளையும் உனக்கு தந்துள்ளேன் அதற்கு மன்னிப்புக்கள் பல கேட்கிறேன்.எந்நாளும் பிரியா பந்தம் இரத்த பந்தம் வாழ்க வளமுடன் நலமுடன்.. 

பேசா மடந்தையாக இருந்த எனக்கும் வாழ்வின் பல பருவத்தில் பல விதமான தோழிகள் கிடைத்தனர்.எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் அன்பான அக்கறையுள்ள தோழிகள் கிடைத்தனர்.சில சமயம் காரியவாதி என்றே தோன்றும் பல நேரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாது.இதனால் யாரையேனும் காயப்படுத்திருத்தால் மன்னிக்கவும்.உடுக்கை இழந்தவன் கைப்போல தக்க சமயத்தில் ஆதரவாக நண்பர்கள் வருவர் அதுவும் ஆசிர்வாதவே. பக்குவடைந்த வயதில் பழகியவர் பலர் இதில் யார் என்ன சொன்னாலும் என்னுடைய வழியில் பயணிக்க எண்ணத்தில் கலந்த தோழிகள் பல அவர்களுடன் காலம் முழுவதும் பயணிக்க ஆசை.நான் ஈர்ப்பால் பழகியவர் பலர் என்னுடைய ஈர்ப்பால் பழகியவர் சிலர் ஆகமொத்தில் எந்த வயதிலும் நட்பு என்ற வட்டத்தின் உந்து சக்தி அவசியம் .அது எவ்வளவு பெரிதாக சிறிதாக இருந்தாலும் தன்னலமற்ற நட்புடன் என்றும் இணைந்த தோழிகளுக்கு நன்றிகள் பல..தொடர்ந்து அடிக்கும் அன்பலைகள் ...

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் என் வெற்றியிலும் தோல்வியிலும் கைக்கொடுத்த தங்கைக்கும் தோழிக்கும் தோழர்களுக்கும் என்றும் கடமைபட்டுள்ளேன்🙏🙏

Sunday, February 12, 2023

சுகமான வலிகள் by Veena Shankar

 


சுகமான வலிகள்


                                 கொல்கத்தாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள் ரூபா. கண் விழித்து பார்த்த அவள், தன் அருகே தன் குழந்தை தொட்டிலில் படுத்திருப்பதாய் உணர்ந்தாள். அக்குழந்தை அன்றி தனக்கென யாரும் இல்லாதது கண்டு ஏக்கம் அடைந்தாலும் தன்னை காப்பாற்றியவருக்கும் குழந்தை பிறக்க உதவி செய்த மருத்துவ குழுவிற்கும் மனதார நன்றி சொன்னாள். ஒன்பது மாதம் முழுமை அடைந்த கர்ப்பிணியான அவள், தன் இல்லத்திலிருந்து துரத்தி விடப்பட்டாள்.


                                         ஆம். அது ஒரு பெரிய கதை. ரூபாவிற்கு பதினைந்து வயது இருக்கும் போது ரூபாவின் அப்பா சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு பிழைப்பிற்காக லாரியில் தன் குடும்பத்தோடு வர, கொல்கத்தாவை நெருங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது லாரி. அதனால் பெரும் பள்ளத்தில் இறங்கி ஒரு மரத்தில் மோதி நின்றது. இந்த துயர சம்பவத்தில் ரூபா தன் பெற்றோரை இழக்க, அவள் உயிர் பிழைத்தது பெரிய விஷயம் என்று சிகிச்சை பெற்றுருந்த ரூபாவிடம் மருத்துவமனையில் அவளை காப்பாற்றியவன் சொன்னான். இதுதான் அவள் வாழ்க்கையில் அடைந்த முதல் வலி.  


                                     அவளுக்கு ஆதரவு கொடுத்த அவன், பாலியல் தொழிலுக்கான ஒரு இடைத்தரகர் என்பது முதலில் ரூபாவிற்கு தெரியாது. நாளடைவில் ரூபாவை அந்த தொழிலில் ஈடுபடுத்த அவன் முயன்றான். அதில் வெற்றியும் கண்டான். கொல்கத்தாவில் அதற்கான காலனியில் அவளை அனுப்ப கமிஷனை மட்டும் அவன் அனுபவித்து வந்தான். தன்னை எண்ணி ரூபா வருத்தப்பட, அவள் மனமும் உடலும் சேர்ந்து வலித்தது. அங்கே தன்னைப் போல் இருக்கும் பெண்களை நினைத்து நெஞ்சில் குமறத்தான் முடிந்தது. 


                                 நாட்கள் செல்ல சரீரத்தின் வனப்பால் இவளுக்கு நல்ல வருமானம் கிடைக்க, அவளை தேடி வருபவர்களில் அக்ஷய் அவளுக்கு பழக்கமானான். அவன் ஒவ்வொரு முறையும் வரும் போதும் தான் தன் உடற்பசிக்காக வரவில்லை என்றும் மனம் விட்டு பேசவே ரூபாவிடம் வருவதாக சொல்ல, அவனிடம் எல்லையற்ற சுதந்திரத்தோடு ரூபாவும் பழகினாள். அதில் தனக்கு வலியை மீறிய சுகம் இருப்பதாக உணர்ந்தாள். 


                            அக்ஷய் பணக்கார வீட்டு பிள்ளை என்பதால் அடுத்த பெண்களைகளிடம் ரூபா வெறுப்பை சம்பாதித்தாலும் தன்னை மணப்பதாக கூறியதால், அவன் தன்னை ஏமாற்றுகிறான் என்பதை அறியவில்லை ரூபா. தான் தாய்மை அடைந்துள்ளதாக அக்ஷயிடம் ரூபா சொல்ல, அன்று முதல் அக்ஷய் அங்கே வருவதை தவிர்த்தான். இது அவளுக்கு மிகுந்த மனவலியை கொடுத்தது. இருந்தாலும் அவனை தேடி திருமணம் செய்து வாழ்வில் அங்கீகாரம் பெற வேண்டும் என்று எண்ணி அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர துடித்தாலும் தாய்மை அடைந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதில்லை என்பதால் அங்கிருந்து அவள் வெளியே துரத்தப்பட்டாள். தான் நிராதரவாக விடப்பட்டதால் மீண்டும் அவள் மனம் வலித்ததே அன்றி சுகம் இல்லை.


                                         எப்படியோ அப்படி இப்படி என்று நாட்களை நகர்த்திய ரூபா திடீரென மயங்கி சாலையில் விழ, யாரோ முகம் தெரியாதவன் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தான். அங்கே பிரசவ வலி ஏற்பட, குழந்தையை வலிகளோடு பெற்றெடுத்தாள் ரூபா. அந்த வலியானது சுகமாக இருப்பதாக உணர்ந்த கையோடு மயக்கம் அடைந்தாள்.


                               தற்போது கண் முழித்தவள் தனக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று ஆவலோடு அதன் மேல் போர்த்தி இருந்த துணியை விலக்கி பார்த்து அது பெண் குழந்தை என்று தெரிந்ததும் வேதனை பட்டாள். இந்த சிறு குழந்தையும் வளர்ந்த பிறகு தன்னை போல கஷ்டப்பட வேண்டுமே என்று கண்ணீர் மல்கி அழுதாள். மேலும் அக்குழந்தையிடம் இருந்து இன்னொரு உயிர் பிறக்குமே என்று எண்ணியவாறு தன் கண்களை துடைத்துக் கொண்டாள். இம்முறை அவள் வலிக்கான பதில் யாரிடமும் இல்லை. ஏனென்றால் பெண்ணின் ஒவ்வொரு வலிக்கும் ஓர் அர்த்தமும் அர்ப்பணிப்பும் இருக்கும். எந்த நிலையிலும் தான் அனுபவித்த வலியை தன் பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டும் என எந்த தாயும் நினைப்பதில்லை.


                                    மனதளவிலும் உடலளவிலும் வலிகள் சுகமானது தான் வாழ்க்கையை எதிர்கொள்ள. ஆனாலும் அந்த வலிக்கான மருந்தும் தேவைப்படும் அர்த்தமுள்ள நெஞ்சங்களால்.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...