Friday, March 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 உடலில் கொண்ட ரணம் மறையும் எளிதில், மனதால் எழுதியது தீராது


 அடுத்தவரின் செயலில்லாமல் இது சாத்தியமில்லை

ஆண் மீது உள்ள பாறையும்

அவன் கரம் பற்றும் யுவதியும் 

அவள் கரம் பறிக்கும் பாம்பும்


பிடி தளர்ந்தால் வாழ்வு இல்லை

கடி இறுகினால் வாழ்வு இல்லை

சுமை கொண்ட போதும்

வாழவும் வாழ்க்கை தரவும் ஏங்கும் மனது

Tuesday, March 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


நாணயம், இல்லாதவன் மூடன் செயலாலும் சில்லரையாலும்


 நா நயம் தெரியாதவன் நாணயம் இழப்பான்


 அன்றைய நாணயத்தின் மதிப்பு

இன்றைய நாணயத்தில்

(நேர்மை) இல்லை

படமும் கருத்தும் by Veena Shankar

 


கரைந்த வெண்ணிலவில்

தன்னை புத்தகத்தில் 

கரைத்த, 

களைத்த பெண் நிலா


 ஏதும் தவறுவதில்லை இங்கே

சீறும் சர்ப்பமானாலும்

சேரும் கரமானாலும் 

சிதையும் சிரமானாலும்

வாழ்க்கை முடிவதில்லை அவரவர் நம்பிக்கையில்


 கரைந்த வெண்ணிலவின் வெளிச்சத்தை கூட மறக்க வைத்தது அவள் கடந்த இருண்ட வாழ்வு


 ஒற்றை நிலவல்ல இங்கே

இரட்டை நிலவுகள், 

ஒன்றை ஒன்று முகம்

 காட்ட மறந்தோ? இல்லை மறுத்தோ

 ஒளிந்து கொண்டு ஒளிர்கின்றன


சூடிய மலர் வாடி கீழே விழ

கற்ற கலை நினைவிலிருந்து மறக்க

எளிமை வாழ்வு ஏளனப்பட

கவிழ்ந்து கொண்டது சிரம்

மறம் போற்றிய காதலனை

துறந்து விட்ட படியால்

துவண்டு போய் இருந்தாலும் வளரும் பிறை போலே

தொடரும் இந்த

உறவும் என்று

ஆறுதலாய் சொல்லும் வரிகள் 

காலத்தின் வழியே

Monday, March 25, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash



 ஒரு கை கொடுக்க ஒரு கை காக்க இது ஒரு தொடர்கதை..

தொடர்பிற்கு வெளியே இருப்பவரும் தொடர்ப்புக்கொள்ள ஓரே வழி

அழைத்தால் துடிக்கும் அழைக்கா விட்டாலும் துடிக்கும்

நம்பி கொடுக்கலாம் வாடகைக்கு திரும்ப கிடைக்கும் பல வட்டியோடு 

அரவணைக்க புகலிடம் புறக்கணிக்க பொதுவிடம்


கையளவு இதயம் by Veena Shankar

 


கையளவு இதயம்

உடலளவில் பேச

உலகளவில் பாராட்டு பெறும்


 கையளவு இதயம் உலகளவில் பேச வேண்டுமெனில் அது 

இழந்தோருக்கு தானம் தரப் பட வேண்டும்


 காதலர்களிடையே இதயம் பரிமாறப்படலாம்

ஆனால்

காதல் பகிரப்பட அல்ல


ஓர் கரம் நீட்ட

ஓர் கரம் கொடுக்க

இதயம் 

ஓர் பொருளல்ல, 

ஓர் உணர்வு

ஓர் உயிராய் ஆன பின்

Saturday, March 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


விடியல் எதற்கு?


பகைமை மறக்க - புது

பாதை அமைக்க - என்றும் 

பிரிவு விலக்க - சீரான 

புத்துணர்ச்சி பெற - புன்னகை 

பூத்து குலுங்க - வெற்றி 

பெற்றவை நிலைக்க - நிலையான 

பேரின்பம் தழைக்க - என்றும்

பைங்கனி சுவைக்க - எந்நேரமும் 

பொறுமை பேண - தீரா 

போராட்டத்தின் ஊடே

போற்றுதல் காண


வேண்டுமே! எந்நாளும் பிறக்கும் விடியலில்


அறியாத இடத்தில் மறைவாய் வாழும் நிமிடங்கள் 

சொல்லும்

இனம் புரியா 

மனதில்

 பதைபதைப்பு


 தேடும் விழிகள் அடைந்தது யாது?


கலையாத மேகங்களா?


தெரியாத பாதைகளா?


சுவாசிக்க மறந்த நிமிடங்களா?


சுவைக்க மறந்த வஸ்த்துக்களா?


வளராத அறிவியலா?


தெளியாத மனங்களா? 


தொலைத்த நாட்களா?

Friday, March 22, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash



 அட பாவமே வயிற்று பசிக்கு வாங்கிய காசிற்கு உனை வெட்டி தள்ள எப்படி மனம் வந்தது. பசி அந்தளவுக்கு கண்ணை மறைத்து முட்டாளாக்குமா. 

பசிக்காக வளர்ந்த பிள்ளைகளை வெட்டி விட்டேனே..

அடுத்தமுறை என்ன செய்யும் பசிக்கு..

படமும் கருத்தும் by Veena Shankar

 


கோடைக்கு குடையாவது மட்டுமல்ல

இயற்கையின் கொடையும் குடை போலே!

கோடாரி இல்லா மனிதன் இருக்கும் வரை 

தருவும் தரும் நிழலே!


நட்ட மரங்கள் பலன் கொடுக்க

பலன் தந்த மரங்கள் பட்டு போக 

பட்ட மரங்கள் வெட்டு பட 

வெட்டிய மரங்கள் விற்க 

விற்ற மரங்கள் 

தச்சனிடம் போக

தச்சணிடம் சென்ற

 மரங்கள் பொருளாக

அந்த பொருளும் 

கோடாரியின் பிடியாக

மறுபடியும் போனது

மிச்ச மீது மரத்தை வெட்ட

ஓர் மரம் செழித்து வளர 

பல மரங்களை வெட்டியவன் புத்திசாலியா ?

இல்லை

பத்து மரங்களை வெட்டிய இடத்தில் 

ஓர் மரம் நட வைத்தது சரியா?

இல்லை

தன் களைப்பு நீங்க

ஓர் மரம் விட்டு வைத்தது சரியா?

உலக அரசியலுக்கு இதுவே 

சிறந்த உதாரணம்

 வெட்டுபட்டவனை தகிக்க வரவில்லை இந்த ஆதவன்

வெட்டுண்டானாலும் சிலையாய் மாறாமல்

துளிர்விட மழையையும் அனுப்பி

வைப்பான் விரைவில்


 கோடாரியால் வென்றவன் மறைமுகமாக

வெட்டுப்பட்டவன் அவன் நிலையிலே

நம் கண் முன்னே

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


அதிகாலை மலர்நத பகலவனுக்கு காலை வணக்கம் சொல்ல மிஞ்சியது - ஒற்றை மரம் தான்! 


உபயம்: மனிதன்

Wednesday, March 20, 2024

அம்மாவின் குரல் by Veena Shankar

 


அம்மாவின் குரல்


"சுமி! மணி ஆறு ஆச்சு. எழுந்திரு! என்று சொல்லிக் கொண்டே சுமியை தட்டி எழுப்ப, அவள் எழுந்து உட்கார்ந்து படுக்கையை மடிப்பதற்குள் " ஏதோ வெட்டி முறிச்சி வேலை செய்த மாதிரி இப்படியே உட்கார்ந்து இருக்கிறியே? சீக்கிரம் போய் படிக்க உட்கார்." என்று அடுத்த செயலையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு அறைக்கு மறுபிரவேசம் செய்து ஏதோ எடுத்துக் கொண்டு சென்றாள் சுமியின் அம்மா ஷாலினி.


சுமி எழுந்து பல் தேய்த்து வருவதற்குள்

 " வாசலுக்கு முன்னாடி இருக்கிற பால் பாக்கெட்டை கொண்டு வா" என்று சொல்லி குளித்து முடித்து, சுவாமிக்கு விளக்கேற்றி திருமாப்படிக்குள் (சமையலறை) ஷாலினி செல்ல, அங்கேயும் அவள் வாய் அடங்கி வீட்டில் யாரும் பார்த்ததில்லை.


" நானே எல்லா வேலையும் செய்யணும். அப்பாவுக்கும் தம்பிக்கும் காபி கலந்து தரலாம் தானே? இல்லைன்னா இந்த கறிகாயையாவது நறுக்கி தரலாம். தேங்காய் பூ வேற கொஞ்சமா இருக்கு. சட்னி அரைக்கணும். அதையும் துருவி கொடு" என சுமிக்கு சொன்னவாறே அவள் கொண்டு வைத்திருந்த பாலை ஒரு பக்க அடுப்பிலும் மறுபக்கத்தில் குக்கரையும் வைத்து கறிகாய் நறுக்க தயாரானாள்.


 அப்போதுதான் புத்தகத்தை திறந்து படிப்போம் என்று இருந்த சுமி அம்மாவின் வார்த்தையால் எரிச்சலடைய, அ வளின் அடுத்த வார்த்தைக்கு காத்திராமல் கறிகாய் நறுக்க சென்றாள்.


இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த கார்த்திக்கு கோபம் வர, "படிச்சுண்டு இருக்கிற பொண்ணை ஏண்டி இப்படி வேலை செய்ய கூப்பிடுற? " என ஷாலினியை சத்தம் போட, " ஆமா ! உங்க எல்லோருக்கும் வேலை செய்ய நான் இருக்கிறேன். எனக்கு ஒத்தாசைக்கு நீங்களும் வர்றதில்லை, அவளை கூப்பிட்டா உங்களுக்கு என்ன? நானும் வீட்டு வேலை அத்தனையும் செஞ்சு முடிச்சு ஆபீஸ்க்கு கிளம்பணும் என்று மோவாயை தோள் பக்கம் காட்டி கார்த்தியை பரிகாசம் செய்தாள்.  


" அதற்கு தான் உன்னை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன். கேக்குறியா? " என்று சொல்ல, " ஆமா! சுமிக்கு நகை நட்டு சேர்க்க வேண்டாமா? என்று சொல்லி அவன் மீது பாய, " என் சம்பாத்தியத்தில் குடும்பத்தை ஓட்டுனா பத்தாதா? இவ்வளவு பெரிய வீடு இருக்கு. இந்த மாம்பலத்துல வாடகை எவ்வளவு இருக்கும் என்று நோக்கும் தெரியும் தானே? என் உத்தியோகத்திற்கும் குறைச்சல் இல்லை. என் சம்பளம் போதுமானது தான். இந்தா இவனும் இந்த வருஷம் படிச்சி முடிச்சதும் கை நிறைய சம்பளத்துல வேலை கிடைச்சிடும். நம்ம சுமி கல்யாணத் தேவைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல நான் லோன் போட்டுக்கிறேன். வாங்கி வைத்திருக்கிற நகையை போட்டு பேஷா கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்புறம் எதுக்கு...," என்று அடுக்கிக் கொண்டே போக சுமியும் ஷாலினியும் கடுப்பானார்கள். 


 "எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்?" என்று சுமி கொதிக்க, " எப்ப பார்த்தாலும் இதையே சொல்லுங்க. நாளைக்கு நமக்கு கையில காசு வேண்டாமா? என்னால பிள்ளைங்க கிட்ட எதிர்பார்த்து நிற்க முடியாது" என தீர்க்காமாய் கத்தியபடியே சமையலில் வேகத்தை கூட்டினாள் ஷாலினி.


 பெண்கள் கூட்டணியின் மத்தியில் ஆண் வாய் திறக்க முடியுமா? மேலும் ஏதும் பேச முடியாமல் இடத்தை விட்டு நகர்ந்தான். 


 கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்த ஷாலினி " வாஷிங் மெஷின் ல துணி போட்டு இருக்கேன். அதை மட்டும் மாடியில காய போட்டு வந்திடு" என மறுபடியும் சுமியிடம் சொல்ல, அம்மாவை மனதால் கடிந்தாள் சுமி. 


" சாதம், குழம்பு எல்லாம் பேக் பண்ணிவிடு." என்று சொல்லி ஷாலினி நைட்டியிலிருந்து புடவைக்கு மாறினாள். 


 அன்று மாலை சுமி ஷாலினியிடம், "அம்மா! நானும் நீயும் சொல்ற வேலையை முன்ன பின்ன பார்த்து அதை செய்றேன். ஆனால் நான் செய்து முடிக்கறதுக்குள்ள நீ இன்னொரு தடவை சொல்றே ! இல்லைன்னா அடுத்த வேலையை சொல்லி என்னை எந்த வேலையையும் உருப்படியா செய்ய விடாம ஆக்குற, அதனால உனக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகி அப்புறம் படுக்கையில் விழுந்தா அப்பவும் நான் தான் உன்னை பார்த்துக் கொள்ளனும் . அதனால நீ எனக்கு சொல்ற வேலைகளையும் செய்கிற அர்ச்சனைகளையும் இந்தா இதுல பதிந்து வச்சிருக்கேன். இதை நீ காலையில ஆன் பண்ணிட்டா உன்னை போலவே இதுவும் கத்த ஆரம்பிச்சுடும்" என்று சொன்னாள். 


காலங்கள் ஓட, அன்று விளையாட்டாக சுமி சொன்னது இன்று உண்மையாகி போனது. திருமணமாகி புக்காத்துக்கு போன சுமியின் சமையலறையில், தான் பதிய வைத்திருந்த அம்மாவின் குரலை ஓட விட்டே சுமி தன் வீட்டு வேலைகளை செய்வதை வழக்கமாக்கி கொண்டாள். அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்று பாகற்கையாக இருந்தது சுமிக்கு. ஆனால் இன்று புக்ககம் அவளுக்கு நல்ல சுறுசுறுப்பான மருமகள் என்ற பெயரை சூட்டிவிட்டுள்ளது. 


அன்று அம்மாவை வசைபாடியதை நினைத்து சுமி இப்போதும் ஆதங்கப்படுவாள். ஆம்! சுமி நினைத்தாலும் இன்று அவள் அம்மா ஷாலினியின் குரலையோ, அர்ச்சனையோ நேரிலே கேட்க முடியாத இடத்திற்கு சென்று விட்டாள் ஷாலினி. 


 "கொரானா" என்ற பெருந்தொற்றில் கார்த்திக்கும் ஷாலினியும் ஒருவர் பின் ஒருவராக மாட்டிக் கொள்ள, கணவனுக்காக தன் உயிரை பணயம் வைத்து அவன் வாழ்வை நிஜமாக்கினாள் ஷாலினி. 


எவ்வளவு அழைத்தாலும் கார்த்திக் , சுமியிடமோ வெளிநாட்டிலிருக்கும் தன் பையனிடமோ செல்ல மறுத்து விட்டான். தன் மனைவி சேர்த்து வைத்த சம்பாத்தியத்தில், தான் வாழ ஆசைப்படுவதாகவும் அது தான் அவளின் ஆன்மாவிற்கு தான் செய்யும் நன்றி கடன் என்று சொல்லி தன் வேலையை கூட அவள் இறந்த உடனேயே ராஜினாமா செய்து விட்டான்.


இன்றும் தன் அம்மாவின் நினைவலைகளிலிருந்து மீளாதவளாய் சுமி, தற்போது தன் மகளிடம் அம்மாவின் குரலின் பிம்பத்தை நேரலையாக ஓட விட்டாள். 


 அம்மாவின் அம்பு வாத்தைகள் கூட அன்பு தானே? 


எவருக்கும் இதில் அனுபவம் உண்டு

Tuesday, March 19, 2024

குருவியும் மகிழ்ச்சியும் by Vidhya Nivash

 


தினமும் சாப்பிட மறந்தாலும் சிரிக்க மறக்கலாமா!

சிரிப்பே அனைத்திற்கும் மருந்து அதுவும் முற்றிலும் இலவசம்.

சின்ன சிட்டு குருவி கண்ணுக்கு தெரியா விட்டாலும் ,அது எழுப்பும் குரல் எங்கே என்று தேடி பார்க்க தோன்றும்.

சிட்டு குருவி போல் எங்கு இருந்தாலும் நாம் எழுப்பும் சிரிப்பொலி கேட்பவரை எரிச்சல் அடையாமல் சிரிக்க ,ரசிக்க செய்தால் போதும்..

குருவியும் மகிழ்ச்சியும் இல்லையேல் உலக சுழற்சியும் கேள்விக்குறியே!


Monday, March 18, 2024

குங்கும பொட்டு by Veena Shankar

 


குங்கும பொட்டு


அவசரமாக வீட்டை பூட்டி வேலைக்கு செல்ல கிளம்பிய ஜனனியை பார்த்து " அம்மா! நீங்க அழகா இருக்கீங்க" என்றாள், அவளுடைய மூன்று வயது பெண் ரசிகா . தினமும் அவள் இப்படி சொல்வது வழக்கம் என்பதால்

  " ஓகே ! தேங்க் யூ." என்று சொல்லி, முத்தமிட்டு ரசிகாவை ஸ்கூலில் விட்டு தன் ஆபீசை நோக்கி வண்டியை விரட்டுவாள்.


 ஜனனிக்கு இது தினசரி நிகழ்வு என்பதால் ரசிகாவின் வார்த்தையை பெரியதாக கண்டு கொள்வதில்லை.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜனனிக்கும் ரசிகாவுக்கும் விடுமுறை. அன்று தான் வீட்டை சுத்தம் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வாள் சுத்தத்தை விரும்பும் ஜனனி.   


வேலைகளை முடித்து முகம் கழுவ நினைப்பதற்குள் தன் அம்மாவின் கையை பிடித்து சற்றே ஆயாசப்படுத்திக் கொள்ள சொன்னது மழலை. அவளும் சோபாவில் அமர , ஜனனியை கட்டிப் பிடித்து " அம்மா! இன்னிக்கி நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க!" என்று தன் கொஞ்சல் வார்த்தையில் சொல்ல, ரசிகாவே தன் அம்மாவிடம் முகக்கண்ணாடியை கொடுத்து பார்க்க சொல்ல , எதை பார்க்க சொல்கிறாள் இவள் ? என்ற குழப்பத்தோடு, தன் முகத்தில் அப்படி என்னதான் அழகு இருக்கிறது? என்று கண்ணாடியை வாங்கி பார்த்தாள் ஜனனி.


கணவனை இழந்த பிறகு மற்றவர்கள் எவ்வளவு சொல்லியும் தன் நெற்றியில் சிவப்பு பொட்டை வைக்க மறுத்திருந்தாள் ஜனனி. இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு என்று பலர் சொன்னாலும் அவர்களின் உண்மையான மனதையும் அறிந்திருந்தாள் ஜனனி.


ஆனால் இன்று, இப்போது அவள் முகத்தில் வேர்வைக்கு மத்தியில் சிவப்பு பொட்டு பதிந்திருப்பதை பார்த்தாள். சற்றே தடுமாறினாள் ஜனனி. தான் வைக்காத போது இது எப்படி சாத்தியம்? என தன்னைத்தானே கேள்வியைக் கேட்டு கொள்ள, அலமாரியை சுத்தம் செய்யும் போது தன் கணவனின் நினைவு தினம் நாளை வருகிறது என்பதால் கணவனின் போட்டோ வைத்து படையல் வைக்க நினைத்து எடுத்த போது, நிழலாய் மாறிபோன தன் கணவன் நெற்றியில் அவள் முத்தமிட , அவன் நெற்றியில் இருந்த குங்குமப்பொட்டு இன்று இவள் நெற்றிக்கு இடம் மாறி இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தாள்.  


அப்படியே அவள் யோசனையில் மூழ்கி நின்ற போது மறுபடியும் ரசிகா தன் தாயைக் கட்டி அணைத்து, " அம்மா! எப்போதும் இந்த சிவப்பு பொட்டை வைத்துக் கொள். உனக்கு அழகா இருக்குது" என குழந்தை மொழி பேச, தன் கணவனின் விருப்பமும் இதுதானே? என்று சற்றே அன்றைய ஓர் நாளுக்கு பின்னோக்கி பயணப்பட்டாள் ஜனனி.  


" நான் இல்லை என்றால் நீங்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்வீர்கள் தானே?" என்று தன் கணவனிடம் விளையாட்டாய் ஜனனி கேட்க, "அது இருக்கட்டும். நான் சொல்வதை கேள். நான் இல்லையென்றாலும் நீ குங்கும பொட்டு வைத்துக்கொண்டு தேவதை போல இருக்க வேண்டும். அதுதான் உனக்கு அழகு. " என்று அவன் சொன்னதை இப்போது நினைத்து, தன் கணவனின் விருப்பமும் குழந்தையின் விருப்பமும் ஒன்றாக இருப்பதாகவும் கணவனே மறுபடியும் ரசிகாவின் மூலமாக சொல்கிறான் என்று நினைத்து "ஆகட்டும் " என்று ரசிகாவிற்கு தலையை அசைத்தாள் ஜனனி.


எதுவும் புதிதல்ல பூமியில். எதையும் அதன் படி ஏற்றுக் கொண்டால்.

கொஞ்சம் காபி கொஞ்சம் யோசி by Vidhya Nivash

 


இதில் பார்த்தவுடன் தோன்றுவது என்ன?

காபிக் கோப்பைகளா?

பல வண்ண நிறங்களா?

கொஞ்சம் கொஞ்சமாக தேயும் நிலவா!

பலரின் ரசனையா!

ஓர் இடத்தில் அனைத்தும் இருக்கு.அவர்அவர் ருசிக்கு ஏற்ப எடுத்து பருக. இதில் ஒருவருக்கு அமுதாக தோன்றுவது மற்றவர்க்கு வாயில் வைக்க முடியாது.இதில் யாரும் பாலை போல் பலவற்றை கலந்து நிறமாறினாலும் ,வரகாப்பிக்கு ஈடாக.

சிலநேரம் பால் போல் பலநேரம் வரகாபியாக!அதனுடன் இனிப்பை தகுந்தார் போல் சேர்க்க, குறைக்க..

சுடச்சுட இல்லை ஆறிப்போய் அது உங்கள் முடிவே!

காபி அல்ல எதோ ஒன்று குடிப்பதன் நோக்கம் என்ன? மறைமுகமான அர்த்தம் என்ன? சொல்லுங்களே!

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


சுகமான சுமைகள்! துள்ளித்திரிந்த காலத்தில் தள்ளி இருக்கும் துணை தள்ளாடும் வயதில் கிட்ட இருந்தால் போதும்...


உணர்வால் இணைந்த காலத்தில் இருப்பு தேவையில்லை உணர்ச்சி வசப்பட்ட காலத்தில் உடன் இருக்க தேடும் ஓர் உறவு...


நிலையில்லா உலகில் நிலைத்து இருக்கும் ஓர் உறவு...


அவளுக்கு முன் நான் என்றும் ,அவருக்கு முன் நான் என்றும் நாளை ஓட்டும் முதுமை..


முதுமையில் உறவாடும் தோழமையும்,தாய்மையும் கிடைக்கப் பெற்றால் பெறும் பாக்கியம் .அதுவும் நம் கையிலே..


ஒன்றில் ஒன்று பிரிந்தால் பொம்மையாகி போகிறது.இதை நன்கு புரிந்தே பிரிக்கும் இரண்டு, உயிரற்ற நிலையில் காலம்.


மற்றொன்று உயிருள்ள நிலையில் பிள்ளைகள்.


பட்டும்,பூவும்,நகையும் தேவையில்லை..

தன்னலமற்று ஓடிய உடலுக்கும் ,மனத்திற்கும் பசிக்கு உணவும் ஓய்வுக்கு நிழலும் தந்தால் போதும்.. 

இறந்த பின் அறுசுவை படைக்க தேவையில்லை

படமும் கருத்தும் by Veena Shankar



அடி மேல் அடி வைத்து நடந்தாலும்

பந்தத்தை மீறிய 

நட்பின் அடையாளம் இவர்கள் 

குடும்பத்தின் அடித்தளமும் இவர்கள்


 தெளிவில்லாத நடையில் தெளிவான பற்றுதல் ஒருவருக்கொருவர்


 சித்திறத்திற்கு மட்டுமே ஏற்றது

நடைமுறைக்கு அல்ல

இருவரும் யணிப்பது முதியோர் இல்ல வாசலுக்கு என்பதால்


ஏந்துதல் தெரியா வாழ்வில்


உந்துதலோடு பயணம்


பந்தல் போடும் நாட்கள் வரை


வந்த இடத்திற்கு திரும்பி விடுவதால்


எந்த துணையும்

 நிரந்தரமில்லை


சொந்தமும் பந்தமும் ஒன்றிணைந்து 


 பயணிக்க முடியா

இவ்வுலகில்


தாரமும் தாயே, 

கணவனை அவள் பிரசிவிக்காவிட்டாலும்


தாரமும் தாயே,

கணவனை முடிந்த வரை பக்குவப்படுத்துவதால்


தாரமும் தாயே,

கணவனை தன் தோளில் தாங்குவதால்


தாரமும் தாயே, கணவனை தன் இறுதி மூச்சு வரை நேசிப்பதால்


வாலிபம் தேய்ந்தது

வயோதிகம் பிறந்தது


அவசியம் சுருங்கியது

ஆளுமை கைமாறியது


அனுபவம் பேசியது

அணுகுமுறை மாறியது


இயல்பு இழந்தது

இருக்கை அழைத்தது


இயலாமை தவிப்பானது

இருட்டு சினேகமானது 


உண்மை தெரிந்தது

உரிமை சுட்டது


பாதம் தளர்ந்தது

பயணம் வெறித்தது 


பாசம் தோற்றது

பரவசம் கொண்டது


நடை விலகியது

நாவை துறந்தது 


காமம் அடங்கியது

காதல் பிறந்தது


வயோதிகம் பேண வேண்டியது 

அதில் ஒளிந்துள்ள

வாலிபம் அழகானது

Sunday, March 17, 2024

பெண்ணே! என் நிழலே! by Veena Shankar

 


பெண்ணே! என் நிழலே!


என் நாவு என் ஆவல் சொல்லும் முன்னே பெண்ணே! ஆதரவாய் என் கரங்கள் பற்றி ஆவண செய்வாயே!


சமைக்கும் போது என் நாவின் சுவை கூட்ட அதை சுவைத்த பின்னே பெண்ணே! எனக்கு பசியாற்றினாயே! 


பெரும்பாடு பட்டு அடைந்த பிள்ளை செல்வங்களும் தன்னிச்சை வாழ்வு கொள்ள பெண்ணே! நீ எனக்கு கரம் பற்றி ஆறுதல் மொழிந்தாயே!


உன் மடி சாய்ந்து நான் துயில் கொள்ள உனக்கு சாகா வரம் வேண்டும் என்று நான் நினைத்திருந்த வேளையில் என்னை மட்டும் புறந்தள்ளி பெண்ணே! நீ முன் சென்றாயே! 


நான் முதலில் உயிர் விட்டால் மேலுலகத்தில் சிரமப்படுவேன் என்று நீ நினைத்து என் வசதிக்காக பெண்ணே ! நீ அவசரமாய் அங்கே அடைந்தாயே!


இனி வார்த்தைகள் இல்லையடி பெண்ணே! என் வாழ்வுதனில் உன் புகழ் பாட!


சரிபாதி என்று உரைத்து என் உடல் சரியில்லாத நேரத்தில் பிரிந்து என்னை பெண்ணே! பாதியாக்கினாயே!


பரிவிற்கும் புரிதலுக்கும் பெண்ணே ! நீயில்லாத நான் மட்டும் எங்கு செல்வேன்?

Friday, March 15, 2024

ஊ ல ல லா by Vidhya Nivash


 
ஊ ல ல லா..மேலே வானம் கீழே பூமி சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள், நடுவே ஓடும் நதி,ஒருபுறத்தில் பறவைகளின் ரீங்காரம்,இதில் யாரோ தாலாட்டு பாட, அந்தரத்தில் உல்லாச ஊஞ்சலில் ஒரு மயில் ஆட ,பூலோகமே குலுங்கியது. 

யாரோ இவர்கள் by Veena Shankar

 


யாரோ இவர்கள்?


ஆள் அரவமற்ற வேளையிலே அவனை நான்கு பேர் தூக்கி வந்து தோட்டத்து நிலத்தில் கிடத்தினர். எவ்வளவு பெரிய குழி வெட்ட வேண்டும் என்று ஆளாளுக்கு விவாதம் செய்ய, "சரி சீக்கிரம். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் விடிந்து விடும். பிறகு நாம் மாட்டிக் கொண்டு விடுவோம். சும்மா பேசாமல் வேலையை பாருங்கள்" என்று அவர்களில் ஒருவன் மற்றவரை அரட்ட, கோதாவில் இறங்கினர் அனைவரும். 


மறுபடியும் அவர்களுக்குள் சச்சரவு வர, ஒருவரே குழியை வெட்டுவதென முடிவு செய்து, கையாலேயே தோண்டவும் அவன் ஆரம்பித்தான். கொஞ்சம் குழி வெட்டியதும் தானே அமர்ந்து பார்த்து வெட்டிய குழியின் அளவை சரி பார்க்க, மற்றவரும் அவனை ஆமோதித்தனர். 


அழகான குழி, இறந்தவன் உருவத்திற்கு ஏற்ப நேர்த்தியாக நோண்டப்பட்டும் விட்டது. ஒருவன் தலை பிடிக்க, மற்றவர் பின் பகுதியை தாங்கி கொள்ள ஒருவழியாக உடலும் குழிக்குள் கிடத்தப்பட்டது. இதை முடிக்கும் முன்பே சூரியன் மெல்ல மேலெழும்பவும் சரியாக இருந்தது. 


ஒருவரை ஒருவர் நக்கி கொண்டு பங்களா வீட்டுக்குள் செல்ல ஆயத்தமாயினர். 


" அப்பாடா! நம்ம முதலாளியம்மாவின் கையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பி விட்டோம்" என்று ஒருவன் சொல்ல, நிம்மதி பெருமூச்சு விட்டபடி வீடு சென்றன பூனைக் கூட்டம். 


ஆம்! சென்ற முறை இந்த பூனை கூட்டம், ஒரு எலியை சாப்பிட முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிந்தி சிதறி வைத்து விட, வீட்டு முதலாளியம்மா இவைகளை நையப் புடைக்க, தற்போது அதை நினைத்து அறிவு வந்ததால், முதலாளியம்மாவால் விசம் வைத்து கொல்லப்பட்ட எலியின் உடல் தாங்கள் தின்றது போக மிச்ச மீதியை அடக்கம் செய்து திருப்திப்பட்டு திரும்பியது பூனைக் கூட்டம்.

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


சகலமும் அடக்கம் - உன் கையில்- உள்ளங்கையில்👊

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


எத்தனை அடக்குமுறை வந்தாலும் மடியமாட்டோம். உள்ளங்கை இடம் போதும் தலை சாய்த்து முகம் புதைக்க.

ஒய்வற்ற மனத்தையும்,நில்லாமல் ஓடும் உடம்பையும் சிறிது உறங்கவிடுங்க .

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் கைப்பிடியில்


அதை எதிர்த்து வருவதும் 

வேண்டாம் என்று விலகி நிற்பதும்

அவரவர் மனநிலை பொறுத்து


 கை விரல்கள் மடிந்த பின்னும்

ஓய்வு தேவையில்லை

சிரசை தூக்கி விரசாய் நடக்க பாரும் நம்மை திரும்பி பார்க்கும்


(கால்) நடையும் (சொல்) நடையும் 

அவசியம் பாரை வசமாக்க


ஏதும் சொல்லாமல் மனம் , சிரம் அமைதி காத்தால்

விரல்களும் பலம் இழக்கும்


 கை ரேகைகளும் படிந்தது நெருக்கமாய்

அவன் காதல் போலே


 உன்னில் என்னை புதைத்தேனா?

விளங்கவில்லை எனக்கு

உன்னில் புதைந்திருந்தால் 

வீரம் கொண்டிருப்பேன்

மமதை கொண்டிருப்பேன்

உன்னில் நான் அடக்கமானதும் 

உந்தன் வெற்றியோ?

Wednesday, March 13, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash


 பட்ட மரத்தில் துளிரும் நம்பிக்கை. நிற்க நிழலும் அமர இடமும் சுவாசிக்க காற்றும் தர இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்.தண்ணீர் ஊற்றாவிட்டாலும் மீண்டும் துண்டிக்க வேண்டாம் எங்கள் நம்பிக்கையை ..
 

Tuesday, March 12, 2024

ஆணிடம் பெண்ணின் குரல் by Veena Shankar

 


 ஆணிடம் பெண்ணின் குரல்


தாங்குவது நீங்கள் என்றாலும் தாக்கப்படுவதும் நாங்களே!


பிறப்புக்கு காரணம் நீங்கள் என்றாலும் பிரசுவிப்பதும் நாங்களே!


வருமானத்தை ஈட்டுவது நீங்கள் என்றாலும் வறுமையை அழிப்பதும் நாங்களே!


எத்தனித்து பெறுவது நீங்கள் என்றாலும் தத்தளித்து தருவதும் நாங்களே!


ஆதிக்கம் கொள்வது நீங்கள் என்றாலும் ஆராதனைக்கு உரியவர் நாங்களே!


தருவே நீங்கள் என்றாலும் தருணத்தில் வளர்ந்து வருவதும் நாங்களே!


மண்ணின் மைந்தரகள் நீங்கள் என்றாலும் தெய்வமாக போற்றப்படுவதும் நாங்களே!


பொறுமை காப்பது நீங்கள் என்றாலும் பெருமை கொள்ள செய்வதும் நாங்களே!


பரந்த நீரோடை நீங்கள் என்றாலும் அதில் நீரலையும் நாங்களே!


முடி சூடும் மன்னன் நீங்கள் என்றாலும் அந்த மணிமுடிக்கு திலகம் நாங்களே!


தெறிக்கும் சகதி என்றாலும் 

தெளிந்த நீராவதும் நாங்களே !


ஆண்களே! பெண்மையை பாராட்ட கற்றுக் கொண்டாலும்

 பெண்ணின் நிழலில் வாழ்ந்து பாருங்கள்.


பெண்மையின் அர்த்தம் புரியும்


பெண்ணின் மகத்துவம் தெரியும்


நீரில்லாமல் நிலமில்லை

நிலமில்லாமல் பயிரில்லை

பயிரில்லாமல் விளைச்சல் இல்லை

விளைச்சலில்லாமல் வருவாய் இல்லை

வருவாய் இல்லாமல் வசந்தம் இல்லை

வசந்தம் இல்லாமல் வாழ்வு இல்லை

வாழ்வில் பெண் இல்லாமல் ஏதும் நிரந்தரமில்லை

படமும் கருத்தும் by Veena Shankar

 


தேவையுள்ள நேரத்தில் கிடைப்பதே

 எதற்கும் உண்டான மரியாதை!

பணமே என்றாலும் 

அவசியம் முடிந்து கிடைத்தால்

அதில் பணம் வெற்றி 

கொள்வதில்லை

நமக்கு அதனால் விளைந்த தோல்வியே வெற்றியடையும்

தோல்வியை அப்படியே ஏற்றுக் கொண்டால்

நாம் பணத்தை வென்றவர் ஆவோம்

பணத்தை வெற்றி பெற செய்வதே நம்மில் பலரின் ஆவல்

பணமும் தேவை நம் தேவைக்கு

குணமும் தேவை பணத்தை போதும் என்ற உணர்வோடு கொள்ள

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பணம் இல்லையென்றால் ஒரு வலி தான் .மனம் எதற்கும் ஆசைப்படாது. போதும் என்ற மன அடக்கம்,தன்மானம். 

பணம் இருந்தால் பல தலைவலி.அடங்கா ஆசை.வேண்டும் இன்னும் வேண்டும்.நிறைவு அடையா மனம் தன்மானத்தையும் இழக்கும் .


பணம் அவசியமே.ஆனால் அது தரும் நெருக்கடி, ஆசை, இரத்த சொந்தகளை பிரிப்பது ஏன்! ஒரு கைப்பிடி சாதமும் ,சுண்ட வைத்த குழம்பும் தந்த நிறைவை எந்த பணமும் தரா!

படமும் கருத்தும் by Kiruthika

 


என்னை அதிகம் பிடித்தவனுக்கு...

பித்து பிடிப்பது உறுதி!...

இப்படிக்கு

உங்கள் பணம்😂


உங்கள் தேவைக்கு மட்டும் ..

என்னிடம் வாங்கள்..!..

தேவை தீர்ந்தும்..

ஆசை தீயாகி..

என்னை துரத்தினீர்கள் என்றால்...

கொள்ளை போக போவது நீங்கள் தான் !!!..


 என்னை..

உங்கள் சட்டை பையில் மட்டும் வையுங்கள்!...

பின் இருக்கும் -

உங்கள் நெஞ்சத்தில்..

அன்பு 

உறவுகளை வையுங்கள்!...

ஏனெனில் ..

இன்று 

நான் உங்களது..

நாளை

யாரோடதாகவோ 

ஆவேன் ...!...

மறவாதீர்கள் !..


ஒன்றை..

முன்னே போட்டு விட்டு..

பின்னே..

ஓர் இலக்கு ..

ஈர் இலக்கு..

மூன்று

நான்கு

ஐந்து..

ஆறு..

ஏழு.. 

எட்டு என.. பூஜ்ஜியங்களை

அடுக்கி அடுக்கி

உங்கள் இலக்கை...

என் பக்கமே..

திருப்பி கொண்டு இருந்தால் ..

தீராது 

என் மேல் நீங்கள் ..

கொண்ட காதல்!..

பத்தாது 

உங்கள் 

ஆயுட்காலமும் !!!..

என்னை கொஞ்சம் 

தள்ளியே 

வைத்து ..

கொள்ளுங்கள்!..

உங்கள் 

நிம்மதி 

உங்களோடு 

நிற்கும்!!!...

படமும் கருத்தும் by Jaya

 


இருந்தாலும் வாழ்வில் சுமை

இல்லாது போனாலும் வாழ்வில் சுமை

இவன் படுத்தும் பாடு!!!!!

Monday, March 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



வெட்டு பட்டு போன என் வாழ்வு மீண்டும் துளிர்க்குது உன் கருணை மழையால்


 மரக்கடைக்கு போகும் முன்னே துளிர் விட்டதால்

மரம் கொண்டது வெற்றி இன்னும் சில வருடங்கள் உயிர் வாழ


 பெண் மட்டுமே புதிரல்ல

இந்த மரமும் தான்

கடினமான பாதையில் 

பயணித்தாலும் 

காதல் உண்டு

புறத்தோற்றம் பெரிதல்ல

அகமே சிறப்பு


 நிலத்தின் ஈரம் மரத்தில் ஏறியது


மரத்தின் ஈரத்தால்

இலையும் துளிர்விட்டது


இலையும் துளிர் விட்டதால் பசுமை கொண்டது


பசுமை பூத்ததால் கிளைகள் விரிந்தது


கிளைகள் விரிய நிழல் தந்தது


நிழல் மட்டுமல்ல காய், கனி ஈன்றது


காய் , கனி உண்டு நிலத்தில் இளைப்பாறி அதை வெட்ட உத்தரவு இட்ட

மனித மனத்தின் ஈரம்

எங்கே சென்றது?

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


வண்ணத்தில் எண்ணத்தில்  கண்ணத்தில் கிண்ணத்தில் வழித்தோடும் வண்ணங்களை அள்ளி வானவில்லில் தெளிக்க, வண்ண மழைத் துளியில் நனைய எதற்கு வண்ண உடை என்று வெள்ளையில் உலா வரும் மக்கள் .

Sunday, March 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


புரட்டி பார்த்து படித்தது போதும் 

படித்தவை கொண்ட பின் புத்தகமும்

 மனிதனாய் மாறியதோ?


ஏட்டை என் கரங்கள் கொண்டு தாங்கினேன் 

அதுவும் 

மனிதனாய் மாறிப் போய் என் உடலாய் மாறியதே


காகிதப் போர் வீரர்கள் நிற்க 

படைத்தவன் அங்கே அமைதியாய் தாங்க

அடுத்த வீரர் யார் என்ற சிந்தனையில் உருவாக்கும் குருக்காக காத்திருந்த காகித தாள்கள்


கற்ற கலையில் நின்ற கலை பொம்மைகள்


 எழுத்தாளனின் கைவண்ணம் ஏட்டினிலே

கலைஞனின் கை வண்ணம் ஏடுனிலே

Friday, March 8, 2024

தீ by Vidhya Nivash

 


வடிவங்களும் , வண்ணமும் கொடுத்த எழுத்தாளருக்கு தெரியாது.அது ஒரு தீக்குழம்பு என்று.படிக்கும் கண்களுக்கு ஏற்ப உருமாறும் தீ.உயிர் கொடுத்தவருக்கு தெரியாது அது மண்ணில் மக்கி போனலும்  கூட தீயாக பலரின் உள்ளத்தில் எரியும் தீபமா இல்லை! வேட்கையா! என்று..

படமும் கருத்தும் by Veena Shankar

  


புத்தகத்தின் புரட்சி வாசகரிடத்தில் மட்டுமல்ல

எழுத்திலும் 

விற்பனையிலும் உண்டு


 படித்ததால் வெடித்த புரட்சியா ?

படிக்காததால் கொண்ட அறிவீனமா?

புதுமையை புகுத்த முடிவா?

நடைமுறைபடுத்த முடியாததால்

விரக்தியா? 


ஏதாகிலும் அவை குறைவே!


பெண்மையின் மென்மை அறியாத மனிதம் இருக்கும் வரை

Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


என்னடா இன்னிக்கு விருந்து.யாரு வேல..அண்ணனே நான் தான்.காலையிலே கூட்டமாக வந்து கரைந்தோம். அதன் விளைவு தான் அண்ணா.புண்ணியமாக போகட்டும் தம்பி.

அதனே பெளர்ணமி அன்னைக்கு விருந்தா ..


 என்னடா அடுத்து எங்க.வேலைய முடிக்க சொல்லி படுத்துறங்க. சரி வா ஒரு டீக்குடிச்சுட்டு போவோம்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


மேல் தட்டு நடிகர் நடிகைகளின் வாய்ப்புகள் போக சிந்தி சிதறிய கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கும் கீழ் தட்டு நடிகர் நடிகையர்


விருந்தினர் வருகையை சொல்லும் 

இவர்களே விருந்தினராக 

மாறிப் போன அவலம் இங்கே தொடர்கிறது 

காரணம் அறியாமல்

படமும் கருத்தும் by Kiruthika

  


எல்லோரும் வந்தாச்சு.. மப்பிளைய மட்டும் இன்னும் காணோம்..!.

இவருக்கு மட்டும் தனியா வடை சுட்டு வச்சு கூப்பிடனுமா ...என்ன ?!...😂

பாரு!.. நம்ம பொண்ணு சாப்பிடாம கீழ வாசலயே நிக்கறா ?!...😂😂😂

வேற ஒன்னும் இல்ல..மாப்பிள்ளை கொஞ்சம் நம்ம விட கலரா வெளுப்பா இருக்காராம் ..அதான் கொழுப்பு..!...😂


 கூப்பிட்டு பார்த்தும் மாப்பிள்ளை வரல..மூஞ்ச தொங்க போட்டுட்டு இருக்காரு ...!..விடுங்க.. பசிச்சா தானே வருவாரு... பொண்ணே சொல்லிட்டா.. வாங்க..நாம சாப்பிடலாம் 😂

படமும் கருத்தும் by Jaya

 


காகமே


இந்த சுயநல உலகில்

பல பற்றற்ற மனிதர்களுக்கு மத்தியில்

பாசமாக

பாசங்கு இல்லாது

பகிர்ந்து உண்ணும் 

இந்த காகங்களும்

கற்று தரும் பாடங்கள்

மனிதர்களுக்கு ஏராளம்!!!


========


உணவினை காணும்போதெல்லாம்

தரை இறங்கும் கருமை விமானங்கள்!!!!!


=========


காக் கா என கரைந்து

காணும் இடமெல்லாம்

குழுக்களாய் 

காண்கின்ற பொழுது

காணாமல் போகின்ற மனித குணம் 

கண்முன்னே!!!!!

படமும் கருத்தும் by Veena Shankar



கோலங்கள் பல

 வண்ணங்களே!

எண்ணங்களின் பிரதிபலிப்பே!


மனச்சிக்கலை பறைசாற்றும் கம்பிக் கோலங்கள்


அதனின்று வெளி வர உதவும் விரல்கள்

வாழ்க்கையில் திருப்பங்கள்


வண்ணக்கோலங்கள் பறைசாற்றும்  அவரவர் 

மனநிலையின் ஓட்டத்தை


சின்ன கோலங்கள் பறைசாற்றும் செயலின் அவசரத்தை 


பெரிய கோலங்கள் பறைசாற்றும் காலத்தின் பொறுமையை


தெளிவில்லா கோலம் பறைசாற்றும் மனதின் குழப்பத்தை


தெளிவுள்ளகோலம் பறைசாற்றும் நிறைந்த மனதை


கோலங்கள் பெண்களின் கை ஜாலமே!

அதனால் 

முற்றத்தில் பிறக்கும் ஜ்வாலையே!

Tuesday, March 5, 2024

மாடி வீட்டு மகாராணி by Veena Shankar

 


மாடி தொட்டியில் அடைபட்ட நான் பருவம் அடைந்து விட்டேன். எனை தோட்டம் என்னும் பள்ளியில் சேர்த்து விட்டால் எனக்கும் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஒருவேளை நீங்கள் தினமும் தண்ணீர் ஊற்ற மறந்தாலும் தொட்டியில் இருப்பதை போல் நான் வாடி விடமாட்டேன். நண்பர்களுக்குள் நாங்கள் நிலத்து நீரை பகிர்ந்து கொள்வோம். மனிதர்களை போல அல்ல நாங்கள், அவனின் தொலை நோக்கு சிந்தனையில் ஏற்பட்ட அடைப்பால் ஒரு பக்கம் வளர்ச்சி மறு பக்கம் வறட்சி . எங்களிடம் கேளுங்கள் என்றும் சிரித்தும், மலர்ந்தும் இருப்பது எப்படி என்று நாங்கள் உங்களுக்கு கற்பிக்கிறோம். 


இப்படிக்கு உங்கள் மாடி வீட்டு மகாராணி, தோட்டத்து இளவரசி

Monday, March 4, 2024

மழை மழை by Vidhya Nivash

 


கொட்டும் மழையில் திரைசீலையை விலக்கி ஜன்னலில் எட்டி பார்க்காமல்..எட்டு அடி வைத்து நடந்து போய் அதை சீண்டி ,அதன் சாரலில் கோலம் போட்டு அதை உணர்ந்து,முகர்ந்து பாருங்க. புதுவிதமான புத்துணர்வு...திரும்பி வரும் போது உணர்வோம் நாம் செய்த சுற்றுப்புற கேடுகளை ...

ஒரு பூவின் குரல் by Vidhya Nivash


 

சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் வெட்கம் தான் தடுக்குதே.இப்படியே பால்கனியில் உட்கார்ந்து போனவர் வருபவர் குரலை கேட்காமல் கம்பியை உடைத்து குதித்து நடைபயிற்சி போனால் கண்ணுக்கு குளிர்ச்சிய இரண்டு பூவை பார்க்கலாம். இன்னும் கொஞ்ச நாள் பொறு உன்னை அப்படியே கொண்டு போய் வெளியே வைத்து விடுவார்கள்.அப்படியா !!எதற்கு என்னை விலைக்கொடுத்து வாங்கி வந்து.இப்படி கவனிப்பு!ஆம்.. அந்த கவனிப்பில் காணாமல் போனவர் பலர்.

சோகம் by Veena Shankar

 


சோகம்


என் விழியிலிருந்து கண்ணீர் வழியாவிட்டாலும்


என் செயல் கண்டு என் நிலையை புரிந்து கொள்ளும் மனது தான் சொர்க்கம் என நான் எண்ணியிருந்தேனே?.


இனிப்பின் சுவை திகட்டவும் செய்கிறது என் கண் முன்னே


காண்பவை யாவும் நிரந்தரமல்ல


இணைப்பின் வாசல் தெரியாவிட்டாலும் இறுதி என்பது உறுதியாகாது என்றும் பிரிவில்


தன்னைத்தானே வருத்திக் கொண்டு மனம் நொந்தாலும் அதிலும் வாராது திருப்தி 

காலம் முடியும் வரை


பிறகு ஏன் இந்த சோகம் என்னுள்?  


கிடைப்பது கிடைக்கும் என்றாலும் 

கிடைப்பது யாவுமே எனை வருத்தும் செயலாய் மாறுவதேனோ?


என் சோகத்திற்கு நானே பொறுப்பானாலும் வாழ்க்கையும் 

வெறுத்துப் போவதேன்?


புரியாமல் தவிக்கிறது என் மனம்


எது சரி?

எது தவறு?

எது உண்மை? 

எது பகட்டு?

எது நிரந்தரம்?

எது சுதந்திரம்?

எது தந்திரம்?

எது மந்திரம்?

எது நம்பிக்கை?

எது மகிழ்ச்சி?


சொல்லும் ஓர் மனம் தேடி என் மனம் அலைபாயுவதேன்?


என் நெஞ்ச சோகம் தேடுகிறது 


அமைதியான தென்றலை தேடி


இளைப்பாற ஓர் மரத்தின் நிழலை தேடி


இனிமையான ஓர் வார்த்தையை தேடி


ஒற்றை சொல்லும் என் சோகத்தை கொல்லாதோ? என்ற நினைப்பில் அடிக்கடி

என்னை நானே

 வருந்தி நிற்கும் மூடன் நான்.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...