Thursday, June 29, 2023

இந்த வார படமும் கருத்தும் by Vidhya Nivash

 



காதோடு தான் நான் பேசுவேன் என்ற

 பாடல் தான் ஞாபகம் வருகிறது.

 தாயின் கருப்பையில் குழந்தை விடும்

 மூச்சை கேட்கும் தாய்க்கு மட்டுமே

 புரியும் குழந்தையின் மூச்சில்

 இருக்கும் ராகம்.அம்மா பசிக்குது,

அம்மா இது வேண்டாம்,கொஞ்சம்

 தள்ளி போங்க காது வலிக்குது,அப்பா

 சொல்லும் ரகசியத்தை கொஞ்சம்

 சொல்லு அம்மா சொல்.


 பல ரகசியம் இருக்கு உன் காதை

மட்டும் கொஞ்சம் நேரம் கடன் கொடு

 என் வசம் காதலியே!!


கருவறையின் காதுகள் மட்டுமே

 கேட்கும் பூமியில் காலடி பதிக்காமல்

 கலைந்துச் செல்லும் சிசுவின்

 குரல்கள்.


குழந்தையின் குரல் சரி..நெடுநாளாக

 புலம்பும் பூமித்தாயின் குரலை யார்

 கேட்ப்பார்?



இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar



 காதோடு பேசுவதா? இல்லை அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைத்து காதை கடிக்க முயல்வதா?

கருவறையில் வளர்ச்சி காணா கருவின் வடிவம்

 சிவப்பு பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல ஆண்களுக்கும் உண்டு


பெண் பேசுவதை கேட்டு கேட்டு சிவந்த ஆணின் காது

 பெண்ணின் உஷ்ண காற்றால் பிறந்த ரணம் ஆண் காதில் தினம்

அன்பான பேச்சிற்கு நடுவே ஆழமான வதந்தி பரிமாறப்படுகிறது

தன் வீட்டு இளவரசிக்கு கதை சொல்ல தன் வீட்டு ராணியிடம் கதை கேட்கும் ராஜா

 பிறந்த குழந்தையிடம் அம்மா சொன்னாள்


நீ பிறக்கும் போது அழுகிறாய், உன் பிறப்பால் நான் சிரிக்கிறேன்

Wednesday, June 28, 2023

யார் பொறுப்பேற்க by Vidhya Nivash



அழகான காலை வேளையில்

 சூரியனும் சந்திரனும் காலை

 வணக்கம் சொல்லிக் கொள்ள 

காத்திருந்தனவா..நைட் ட்யூட்டி முடித்து 

பொறுப்பை ஏற்கும் காவலாளி போல..

இரவெல்லாம் குழந்தையின் லூட்டி 

விடியும் வேளையில் அயர்ந்த தூக்கம் 

பாதி தூக்கத்துடன் தொடங்கும் நாள் 

பொழுது யார் வந்து பொறுப்பேற்க..

மனதின் புலம்பல் by Veena Shankar

 


மனதின் புலம்பல்


 சிறு வயதிலேயே ஸ்ரீதேவிக்கு பூ கட்ட அவள் பாட்டி சொல்லி கொடுத்திருந்தார். அதுவும் அவளுக்கு பூ கட்டுவதென்றால் கொள்ளை பிரியம். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று பலரும் நினைத்ததுண்டு. தனக்கு கிடைக்கும் நேரத்தில் பூ கட்டுவாள். இதே வழக்கம் அவளுக்கு திருமணம் ஆன பின்னும் தொடர்ந்தது . தன் தெருவில் தானே பல பூச்செடிகளை நட்டு வைத்து பூ வரும் வரை காத்திருந்தாள். அதில் கிடைக்கும் எல்லா பூக்களையும் தானே தொடுத்து இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டாள். அவளுடைய ஆசையானது நாளடைவில் அதிகமானது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பூக்களை பறித்து விடுவரோ என்று எண்ணி காவல் காத்து கொண்டே இருப்பாள். பலவகையான பூக்களையும் பறித்து கட்டுவதையே வழக்கமாகக் கொண்ட அவள், யாரையும் பூக்கள் எடுக்கவும் அனுமதிக்க மாட்டாள். இதனால் தான் வசித்து வந்த தெருவில் பலரின் வெறுப்பை சம்பாதித்தாள்.     

நன்றாக பழகி வந்த ஶ்ரீதேவி திடீரென்று இப்படி ஏன் மாறினாள் என நினைத்தனர் அக்கம்பக்கத்தினர்.  


பூக்களை எல்லாம் வகை வகையாக பிரித்து அதை தொடுக்க இறைவனுக்கு சமர்பிப்பதில் நாட்டம் கொண்டாள். அந்த மாலைகளை தன் கையால் கோயிலுக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததில்லை அவளிடம். இப்படியாக தன் வேலைகளுக்கு நடுவே தொடுத்து கொடுக்க, அவளுக்கு கையில் வலி எடுக்க மருத்துவரிடம் சென்றாள். அவளை பரிசோதித்த மருத்துவர் , அவளிடம் பூ கட்டும் வழக்கத்தை நிறுத்த சொன்னார். அதனையும் மீறி அவள் பூ தொடுக்க அவளுடைய வீட்டு வேலைகள் எல்லாம் கிடப்பில் கிடக்க, தன் கணவனையும் குழந்தைகளையும் ஒத்தாசைக்கு அழைக்க, சிலவற்றை மட்டும் செய்து அவர்கள் ஒதுங்கி விட, அவர்களை கடிந்து கொண்டாள். 


இதற்கிடையே ஶ்ரீதேவிக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் வந்து சேர்ந்தது. இதனையே காரணம் காட்டி வேலைக்கு ஆள் ஒருவளை நியமித்தாள். மேலும் அவளுடைய வேதனையை வீட்டிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லியும் "எனக்கு மட்டுமா நான் சாமியை வேண்டிக்கொண்டு பூ கட்டுகிறேன். நம் மொத்த குடும்பத்திற்கும் தானே. அதனால் நீங்களும் என்னுடனே பூ கட்டுவதில் பங்கெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்ல அதுவரை அமைதியாய் இருந்த கணவனும் பிள்ளைகளும் அவளை திட்டி தீர்த்தனர். கணவன் ஒரு படி மேலே போய் இனி அவள் பூ கட்டக்கூடாது என்று சொல்ல, இத்தனை நாள் பூ கட்டி வந்த அவளுக்கு வாழ்வில் சோதனை வரும் என்று அவள் சொல்ல, அதனால் சாமி நம்மை சோதிக்கமாட்டார். அதையும் மீறி ஏதாவது நடந்தால் அது நம் விதிப்பயன் என்று சொன்னான் ஶ்ரீதேவியின் கணவன். நம்மால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவுதான் செய்ய வேண்டும் நம் சக்திக்கு மீறி எதையும் செய்ய இயலாது. " உன்னால் முடிந்தால் கட்டு அடுத்தவரை பழிக்காதே?" என்று கத்தி அலுவலகத்துக்கு புறப்பட்டான்.


எந்த ஒரு செயலையும் விருப்பத்தோடு கற்றுக்கொண்டால் அது எளிதாக நம் வசம் வந்துவிடும். அதற்காக அடுத்தவரை நிர்ப்பந்திப்பதும் பழிப்பதும் கூடாது. முடிவில்லா இந்த சிந்தனையால் மனநோய்க்கு வழி கோலும்.

Tuesday, June 27, 2023

பகிர்வோம் by Vidhya Nivash

 


ஒளி கற்றைக்கு தகுந்தார் போல்

 ஆடும் தண்ணீர் கூடவே இசையும் சேர

 ஆடும் மனம்.இசைக்கு மொழி

 தேவையில்லை.தண்ணீர்கூடவே

 ஆடும் மனம்.

பகிர்தலில் ஒரு சந்தோசம்

அன்பை பகிர்வோம் 

இன்பத்தை பகிர்வோம்

நம்மால் முடிந்ததை கூட இருப்பவரை

 காயப்படுத்தாமல்..

பிறர் தேவைக்கு முடிந்த வரை

 பகிர்வோம்.

தன்னலமற்ற பகிர்தல் வளர்க்கும்

 நம்மை பகிர பகிர வளர்வோம்

 ஆலமரமாக பல நட்பின் இருப்பிடமாக..

 


உள்ள வரை by Veena Shankar

 


உள்ள வரை


செடியில் உள்ள பூவை காதலித்தேன் அதன் மொட்டுக்களையும் நேசித்தேன் அது வாடாத வரை 


என் கவிதையை காதலித்தேன் அதற்கு வந்த விமர்சனத்தையும் ரசித்தேன் கவிதையில் உள்ள பிழைகள் தெரியாத வரை 


தண்ணீரை காதலித்தேன் அதன் நிறத்தையும் நேசித்தேன் என் தாகம் தீர்க்கும் வரை 


என் மனதை காதலித்தேன் என் பேச்சையும் வியந்தேன் அது பிறரை புண்படுத்தாத வரை 


என் வயதை காதலித்தேன் வளர்ச்சியையும் நேசித்தேன் அதன் நினைவுகள் நீங்காத வரை


மனித பிறப்பை காதலித்தேன் மனிதனாக மாறவும் ஆசைப்பட்டேன் என் உயிர் நீங்காத வரை


கரு விழியை காதலித்தேன் காட்சியையும் நேசித்தேன் இயற்கையும் மாறாத வரை 


காற்றை காதலித்தேன் அதன் அவசியத்தையும் உணர்ந்தேன் அதை நான் மாசுபடுத்தாத வரை


மனைவியை காதலித்தேன் நண்பனையும் நேசித்தேன் இரண்டும் என் விழி விட்டு விலகாத வரை

 

மழையையும்

காதலித்தேன் 

இருளையும்

 ரசித்தேன் அவை என்னை துன்புறுத்தாத வரை

Monday, June 26, 2023

இருளும் வலியும் by Veena Shankar

 


இயற்கை இருளிலிருந்து என்னை

 மீட்டது செயற்கை தீபம். 

யாரை நான் கொண்டாடுவது?

ஜெனிப்பது முதல் பிறப்பு வரை

 எனக்கு இருளை பழக்கிய

 இயற்கையையா?

பிறந்ததும் வெளிச்சத்தை கொடுத்த

 மெழுகு தீபத்தையா?


தேயும் நிலவின் ஒளி மங்கியதால்

 கரையும்

 மெழுகுவர்த்தியை ஏந்தினாலோ

 இந்த சிறுமி

தன்னை மறந்து, மறைந்து விட்ட

 பெற்றோருக்கு

 தன் முகத்தை காட்ட ஒளியை

 நீட்டினளோ வானத்தை நோக்கி


இருளில் இருந்து என்னை காப்பாற்றி

 கொள்ள நான் தயார்


வெளிச்சத்தில் உள்ள நீங்கள் எப்போது

 உண்மையான வெளிச்சத்தை நோக்கி

 வருவீர்கள்?


படிக்க ஆசைப்பட்டு நானும் விளக்கு

 ஏந்த என் ஆசையை நிராசையாக்கும்

 முயற்சியில் நீங்கள் இருப்பது ஏன்

 மனங்களே?

வாழ விடுங்கள் எங்களை, வளர்ந்து

 காட்டுகிறோம்

நகர்கிறேன் by Vidhya Nivash

 


நகர்கிறேன் உன் பின்னே நகர்கிறேன்

 நீ போகும் இடமெல்லாம் உன் கூடவே

 நகர்கிறேன் ஏன் நகர்கிறேன்

 தெரியாது.எவ்வளவு தூரம் தெரியாது.

 உன் ஆயுள் வரை நானும் உன் கூடவே

 நகருவேன். நகர்வதை தவிர

 வேறென்ன தெரியும் நான் நின்றேன்

 என்றால் உன் மூச்சு நின்றது என்று

 அர்த்தம்.துணையாக வந்தேனே

 சுமையில்லாமல் நகர்ந்தேனே. நாம்

 நகர நகர உலகமும் நகர்கிறதா அது

 எதன் பின்னால் நகர்கிறது அதன்

 பின்னால் எது நகர்கிறது.நமக்கு

 இடையே ஒருவன் நகர்கிறானே

 அவன் அவர் நாம் நின்றவுடன் அவன்

 நிற்பானா இல்லை துடிப்பானா 

பசையுள்ள அரிசி by Vidhya Nivash


 பார்க்கும் போதே உண்ண தூண்டுதே

 உணவை சமைப்பதை விட பரிமாறும்

 விதமே ஆளை இழுக்கும்.

 எளிமையான உணவு சரியான ஜோடி

 இருந்தால் போதுமே.இது ஒரு

 மலேசியன் பாரம்பரிய உணவு.

தேங்காய் பாலில் வேக வைத்த

 பசையுள்ள அரிசி மெல்ல மென்றால்

 ஒரு தனி ருசி .எதுவுமே இல்லை

 ஆனால் சுவையோ அருமை.ஊற

 வைத்த மிளகாய் இனியப்புடன்

 சேர்த்து அரைத்த கலவை.வறுத்த

 வேர்க்கடலையுடன் உண்ண அமிர்தம்.

கொஞ்சம் உண்டாலே வயிறும்

 நிறையுதே .

என் மூளை அல்ல by Veena Shankar



மனிதனுக்கு மனிதன்

 பொறாமைப்பபட்டு மாற்றி கொள்ள

 முடியாத ஒரே உறுப்பு மூளை மட்டுமே.

 பொறாமையும் இல்லை. மாற்றி

 கொள்வதும் இல்லை

 நல்லவையை மட்டும் பிரித்து

 காட்டாமல் எல்லாவற்றையும் நீ

 சிந்திக்க உதவுவதால் தான் கெட்டவை

 பலதும் அரங்கேறுகிறது.

 நீ மழிங்கி போனால் நான்

 மயங்குவேன்


நீ சிந்திக்க தூண்டினால் நான்

 ஒளிருவேன்


நீ அயர்ந்தால் நான் அடங்கிபோவேன்


நீ அடங்கினால் என் மற்ற உறுப்புகள்

 தானமாக போய் விடும்


நீ தானமாய் போக வாய்ப்பும்

 உண்டெனில் மற்படியும் என்னிடமே

 சேர்ந்து விடுவாயோ?

மனிதனின் படைப்பிற்கும்

 அப்பாற்பட்டது இது மட்டுமே

Sunday, June 25, 2023

அலை அலையாக by Vidhya Nivash

 


அலை அலையாக வருடிய கூந்தல்

 போல் நெளிந்து செல்லும் தண்ணீர்

 நடு வானத்தில் ஜொலிக்கும் சூரியன்

 அதன் ஒளிக்கதிரால் தகதகவென

 தண்ணீர் அணை கட்டினார் போல்

 மரக்கூட்டம் பார்க்க பார்க்க அமைதி.

 இந்த தண்ணீருக்கு அடியில் நடக்கும்

 அரசாங்கம் யார் அறிவார்.

மேலோட்டமாக புலப்படுபவையே

 கண்ணில், மனத்தில் நிற்கும். 

சாவி by Veena Shankar



 சாவி


உன்னை வகை வகையாய் மனிதன் உருவாக்கினாலும் உன் தோழனும் பூட்டு தான். 

ஆனால் நீ மட்டுமே சற்று இடம் மாறி தொங்குகிறாய்


 பெண்ணின் இடுப்பிலும் 


அலமாரியின் அடியிலும்


சேலையின் சேலைக்குள்ளும்


முதாலாளியின் கைக்குள்ளும்


பல தருணத்தில் விரும்பி எடுப்பவரிடத்தும்


சில தருணத்தில் விரும்பாமல் தடுப்பவரிடத்தும்


எந்நாளும் பிறருக்கு தெரியாமல் ஒளித்தும்


சிலநேரம் திசை மாறிய பறவையாய்


பல நேரம் மூளையின் மறதியால் தொலைவதும்


தொலைத்தவன் காணாமல் தவித்தும் 


அப்படி தவித்து போனாலும் உனக்கு மாற்றாக கண்டுப்பிடித்தானே உன்னை போல் ஒருவனை

ரகசியத்தையும் தந்திரத்தையும் திறக்கும் , உடைக்கும் மந்திர சாவி

 வினாக்கு உண்டு விடை தோராயமாக , பூட்டுக்கு உண்டு சாவியும் துல்லியமாக

எப்போதும் துணையோடு இருக்க நீ நினைத்தாலும் துரதிஷ்டவசமாக பிரித்தே வைக்கபடுகிறாய் இல்லை முற்றிலுமாக தொலைந்து விடுகிறாய் 

இல்லை மறைத்து வைக்கப்படுகிறாய் இதில் உன் விருப்பத்தை அறிந்து கொள்ளாமல் மானிடம் செய்யும் மகத்துவமும் இதுவோ?

திருமணம் செய்து கொண்ட பின்னும் தனி வாழ்வு, சந்ததியையும் பெற முடியாமல்

Saturday, June 24, 2023

புறக்கணிப்பு by Veena Shankar

 


புறக்கணிப்பு 


தேர்வு கண்காணிப்பு பணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அன்று சீக்கிரமாகவே எழுந்து பல வேலைகளை தலையில் சுமந்து ஒவ்வொன்றாக முடித்து கிளம்பினாள் அவள். பேருந்து நிறுத்தத்திற்கு அவள் வரவும் பேருந்தும் சரியாக வந்து நிற்க, அதில் ஏறி அமர்ந்தாள். முன்பகுதியில் நின்றிருந்த நடத்துனர் இவளிடம் எங்கே போகவேண்டும் என்று கேட்க நிறுத்தத்தை சொல்லி பயணச்சீட்டை வாங்க வேண்டி காசுக்காக கைப்பையை துழாவினாள். எப்போதும் வேலைக்கு செல்லும் வழித்தடத்திற்கு பாஸ் வைத்திருப்பதால் சில்லறை தேவைப்பட்டதில்லை அவளிற்கு. நடத்துனர் அவசரபடுத்த, அவள் பர்ஸை வீட்டிலேயே வைத்திருந்தது நினைவுக்கு வர அனைவரின் முன்னும் புழு போல நெளிந்தாள் அவள்.


இன்று ரேஷன் கடைக்கு போக வேண்டுமென்று குடும்ப அட்டையை வெளியே எடுத்தவள் பர்ஸை அங்கேயே வைத்தது நினைவுக்கு வர, விசயத்தை நடத்துனரிடம் சொல்ல, அவர் கறாராக பேசினார். இருந்தாலும் தான் குறிப்பிட்ட பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் தன் கணவன் நடத்தும் நிறுவனத்தின் பெயரை சொல்லியும் நடத்துனர் நம்பவில்லை அவளை.  


வேறு வழியில்லாமல் வரும் நிறுத்தத்தில் அவளை இறங்க சொன்னார். மனிதாபிமானம் கொண்ட நானும் மற்றும் சிலரும் அவளுடைய பயணச் சீட்டுக்கான தொகையை பகிர்ந்து கொள்ள கண்ணீரில் நன்றி சொன்னாள் அவள்.  


அடுத்த கட்டத்திற்கு பேருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. ஊரில் இத்தனை நாள் எனக்கு செல்வாக்கு அதிகம் என்று செருக்கோடு திரிந்து கொண்டிருந்த சக பயணியான எனக்கும் அன்று புத்தி வந்தது. 


எதிலும் சரியானதை கடைபிடிக்கும் என் மனைவி, என் செல்வாக்கை எப்போதும் பயன்படுத்த மாட்டாள். காசு பணம் நிறைய இருந்தும் தன் கையால் உழைக்க வேண்டும் என்று சொல்லி வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறாள். ஆனால் இன்றளவும் என் பெயருக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்பதால் என்னுடைய பணத்திலே தான் எல்லா செலவுகளையும் செய்வாள். அவளுடைய சம்பளத்தை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விடுவாள். இதைப்பற்றி நானும் அவளுடன் ஒருநாளும் கேட்டதும் இல்லை. 


ஒருமுறை இப்படித்தான் தான் மறந்து விட்ட கைப்பையை எடுக்க அவள் வீட்டிற்கு வந்த போது நானும், என் பெயரையோ கடையையோ சொல்ல வேண்டியது தானே? பயணச்சீட்டு வாங்காமல் கூட நீ பயணிக்கலாம் என்று நான் சொன்னதற்கு உங்களுக்கு அந்த நிலைமை வந்தால் தெரியும் என்று சொல்லி மறுபடியும் கைப்பையோடு நடந்தாள்.  


பலமுறை இப்படி நடக்க எங்கும் எப்போதும் அவள் என் பெயரை சொல்லாமல் நிராகரித்தது ஏன் என்று இன்று புரிந்தது எனக்கு. அவள் சொன்னதால் இன்று பேருந்தில் பயணப்பட்டேன். ஆனால் என் முதல் பயணித்திலேயே இப்படி நடந்ததும் எனக்கு மனைவி சொன்ன உண்மை நிலையும் அவள் என் செல்வாக்கை புறக்கணித்தது சரியென புரிந்தது. 


எதுவும் நமக்கு சொந்தமில்லை. செல்வாக்கு உட்பட.

Friday, June 23, 2023

நேயர் விருப்பம் கருந்துளை by Veena Shankar

 


நேயர் விருப்பம் கருந்துளை


எத்தனை அருமையானது இந்த கருந்துளை


தாயின் வயிற்றிலிருந்து கருவுக்கு செல்லும் சுவாசமும் நீண்ட கருந்துளையின் ஊடே


அந்த கருவும் தன்னை காட்ட வேண்டி வெளிவரும் பாதையும் கருந்துளையே


இறப்பின் போது இடப்படும் அரிசியும் செல்வது வாய் எனும் கருந்துளையிலே


மாயக் கண்ணன் ஏந்தும் குழலில் பிறக்கும் இசையும் கருந்துளையின் ஊடே 


ஒரு பிம்பத்தை படம் எடுப்பதும் கருந்துளை வழியே


அதை எடுப்பவரும் காண்பதும் தன் கருவிழி எனும் கருந்துளை வழியே


அடுப்பில் நெருப்பை வளர்க்க செய்வதும் ஊதுகுழல் எனும் கருந்துளையே


பூட்டை திறக்கும் சாவியும் உட்புகுவது கருந்துளையிலே


ஆழ்துளை கிணறு தோண்டுவதும் அதனில் இடப்படும் உருளையும் கருந்துளையே


அதில் சிலநேரம் பிஞ்சு கரங்கள் சிக்குவதும் அந்த கருந்துளையிளே


வானின் ஓசோனை பதம் பார்ப்பதும் இந்த மாசு எனும் கருந்துளையே


கருந்துளை என்றும் வெறுந்துளை ஆனதில்லை இவ்வுலகில்

மறையும் மறந்த உணவை சொல்லுங்க by Vidhya Nivash

 


பார்க்க எப்படி இருக்கு முட்டை மாதிரி

 தானே.ஆனால் இது மாம்பழ குழம்பு

 இந்த சீசனுக்கு ஏற்றது.சின்ன சின்ன

 நாட்டு மாம்பழத்தில் வைத்தால்

 அருமையாக இருக்கும்.அந்த

 மாங்கொட்டையை சப்பி சாப்பிடும்

 போது ஒரு எண்ணம்.அதை விட

 மனசே இல்லை இனிப்பு,புளிப்பு

 மற்றும் காரம் அமிர்தம்.ஏன் இந்த

 தலைமுறையினர் இந்த மாதிரி

 சாப்பிடுவதில்லை ,முருங்கைகாயும்

 அப்படி தான் பல்லில் படாமலே

 சாப்பிட்டு பழகிவிட்டனர்.எந்த

 குழந்தையும் மாங்கொட்டை சாப்பிட்டு

 பார்த்ததில்லை.மா வத்தலும் அப்படி

 தான் மறைந்து வருகிறது.பழைய

 உணவுகள் காணாமல் போகிறது.

 உங்கள் ஊர் உணவு என்ன மறைந்து

 வருகிறது.யார் வீட்டில் இது போல்

 ரசித்து உண்ணுக்கிறார்கள்

 மாங்கொட்டையை சொல்லுங்க??

அறிவுரை அவசியமோ by Veena Shankar

 


அறிவுரை அவசியமோ?


அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள் மீனாட்சி என்ற மினி. பேருந்து நிறுத்தத்தில் காலை வேளை அவலங்கள் சொல்லி மாளாது. பாதி மயங்கிய நிலையில் வரும் மாநகர பேருந்து, ஒரு எறும்பை ஏற்றினால் கூட கவிழ்ந்துவிடும் அளவிற்கு கூட்டம் நிறைந்தே வரும். ஆனால் அன்று என்னவோ விதிவிலக்கு போல என நினைத்து கொண்டாள் மீனாட்சி. 


அப்போதே பேருந்து வர, ஏறி அமர்ந்து தான் போக வேண்டிய இடத்திற்கு பயணச்சீட்டு எடுத்தாள். 


மித வேக பயணத்திலும் அவளுக்கு தூக்கம் சொக்க, ஏதோ ஒரு நிறுத்தம் வர, இரு வயதான மூதாட்டிகள் அவளை தள்ளி உட்காரச் சொல்லி அமர்ந்தனர். தங்களுக்குள் அதிகம் பேசிக் கொண்டே வந்தாலும் அதில் ஒரு மூதாட்டி மீனாட்சியை ஏற இறங்க நோட்டமிட்டாள்.


தன்னுடைய சக மூதாட்டியிடம் " இந்த காலத்து பிள்ளைகள் காதுல, கழுத்துல ஏன் ஒரு மூக்குத்தி, கொலுசு கூட போடமாட்டேங்குதுங்களே! பூ வைக்கவும் மலைக்குதுங்களே! எப்படித்தான் ஆத்தா அப்பன் இதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுறாங்களோ! தெரியல!" என மீனாட்சியை மட்டுமல்லாது அவளுடைய பெற்றோரையும் வம்புக்கு இழுத்தாள். அதற்கு ஏதும் பேசாமலே அமர்ந்திருந்தாள் மீனாட்சி. 


பேசிய மூதாட்டியோ மீனாட்சி பக்கம் திரும்பி " சிறுசா கூட ஏதாவது காதில் போட்டு கொள்ளாலாமில்ல. இப்படி மூழியா வெளியே வரக் கூடாது ஆத்தா! " என்று சொல்ல, சற்றே கோபம் வந்தாலும் அதை அடக்கி கொண்டு, " இல்ல ஆயா, நான் பரீட்சை எழுத போறேன். அங்கே இதெல்லாம் போட்டுட்டு போனாக்கா பரீட்சை எழுத விடமாட்டங்க" என்று சொன்னதும் " இது என்னடி புதுசா இருக்கு" என்று மோவாயை வெட்டினாள். " உங்க பேத்தி எப்படி?" என்று மறுபடியும் மீனாட்சி மூதாட்டியிடம் கேள்வி கேட்க, " எங்க வூட்டலையும் இப்படித்தான் " என்று பதிலளித்தாள். மேலும் மீனாட்சியே தொடர்ந்தாள். " ஆயா! எனக்கு அப்பா அம்மா வச்ச பேரு மினி. ஆனா அந்த பேரு எனக்கு பிடிக்காததால் மீனாட்சின்னு மாத்தக்கிட்டேன். அதுவுமில்லாம நான் தாவணி உடுத்தி, நீங்க சொன்ன அத்தனையும் போட்டுகிட்டு கோயிலுக்கு போயிட்டு சாமிகிட்ட பரீட்சை நல்லா எழுதணும்னு வேண்டிகிட்டு, போட்ட அத்தனை நகைகளையும் கழட்டி வைச்சிட்டு பரீட்சை எழுத புறப்பட்டிருக்கேன்." என்று சொல்லவும் வாயடைத்து குனிந்தனர் மூதாட்டிகள்.  


பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது. அதை நம் வீட்டில் நடைமுறையாக்குவதென்பது சற்றே கடினம் தான். காலம் அறியா இப்படிபட்ட அறிவுரையும் அவசியமோ?

Thursday, June 22, 2023

என்னை கண்டுபிடிங்க by Vidhya Nivash




ஹாப்கின்ஸ் குக்கர் தான் தெரியும்

 தீடீரென இயற்பியலை கேட்டால்

 என்ன செய்ய.. அட ஒன்னுமில்லைபா

 இயற்பியல் எல்லாம் தூசு மாதிரி.

 என்னை கண்டுபிடிங்க பார்ப்போம்.

 நாம் உருவான கதை தெரியும்.

கருவறை இல்லாமல்

செயற்கையாகவும் இப்போது

 உருவாக்க முடியும் என்றனர்.

 ஆனாலும் இந்த படைப்பு 

ஆச்சரியமான, அதிசமான ஒன்று.

இறப்பு -இறந்த பின்னாடி எங்கே

 போவோம்.நம் வெற்றிடத்தை யார்

 நிரப்ப? பல கதைகள் இருக்கு அது 

அவரவர் புரிதல்.அது சரி இந்த

 பிரபஞ்சம் மற்றும் அண்டத்தின்

 பிறப்பு இறப்பு!


என் அருகில் வராதே என்று

 எச்சரித்தேன். என்னை சுற்றி சுற்றி

 வந்தாய் .என்னுடைய ஈர்ப்புவிசை 

ரொம்ப ரொம்ப பெரிசு வெற்றிடத்தை 

நிரப்புவேன் ,என்னுள் விழுந்தாய் 

சிலையாவாய் ,நேரம் செல்லும் 

பட்டென, உன் அடர்த்திக்கு தகுந்தார் 

போல் வளைவேன். ஆனால் அசைக்க 

முடியாது, என் ஆழம் அதை அறிந்தாக 

எவருமில்லை..என்னுள் விழுந்து 

பிழைத்தால் சொர்க்கம்.மொத்தத்தில் 

பெண்ணும் நானும் ஒண்ணு பல 

விஷயத்தில்  என் உருவம் 

அவர்அவர் கற்பனை கடைசியாக 

புசுபுசுவென டோனட் மாதிரியாம் .

புரியாத புதிரை தேடுகின்றனர்.

ஆக்கம் ,அழிவு இதை தேட விடை 

எங்கே..அவரவர் புரிதலே. தேடல் 

அளவுக்கு அதிகமானல் என்னவாகும் 

அது நம்மை இழுக்கும் மாய 

சக்தி.அதை சீண்டினால்??

 
அட கேட்டீங்களா பூமிக்கூட ஒரு 

பக்கமாக சாயுதாமே.அத விடுங்க 

இன்னைக்கு என்ன நாள்?? 

வானொலியில் பாட்டு அடி தூள். 





கேட்போர் யாருமில்லை by Veena Shankar

 


கேட்போர் யாருமில்லை பார்ப்போர்

 மட்டுமே. இந்த கள்வனை கேள்வியும்

 கேட்பரோ? அவனை கண்டு

 புன்சிரிப்பை பூட்டி வைக்க

 நினைத்தாலும் தானாக இதழ்கள்

 விரிந்து அவனுக்கு பதிலாகிறதே?

என் புலன்கள் என் ஆணையை

 மறுப்பதேன்? அவையும். எனக்கு

 தெரியாமல் இவனை

 காதலிக்கிறதோ?

Wednesday, June 21, 2023

இந்த வாரத்தலைப்பு "Me time" by Vidhya Nivash

 


Me time இது ரொம்ப புதுசு, ஆன

 ரொம்ப பழசு. ஆளுக்கு ஆள் மாறுபடும்

 அர்த்தம். லிட்டர் கணக்கில்

 காபிப்போட்டு நினைக்கும் போது

 அமர்ந்து கிண்டல் அடித்து சிறுசிறு

 சண்டைப் போட்டு பேசி மகிழ்ந்தனர்.

 அப்போது எந்த குழந்தையும் ஆறு

 மணிக்கு பள்ளிச் செல்லவில்லை,

மதிய உணவிற்கும் வீட்டுக்கு

 வந்தனர்.நிறைய நேரம் நிறைய உடல்

 உழைப்பு.அன்று தனிமனித

 அடையாளம் தேவைப்படவில்லை.

னால் ஏக்கம் இருந்தது.


காலையில் பால்கனியில் செடிகளை

 ரசித்து காப்பிக்குடிக்க ஆசை தான்

 நேரமில்லை .குக்கரில் விசில்

 அடிக்கும் நேரத்தில் குட்மார்னிங்

 மெசேஜ் போட்டு கைபேசியில் ஒரு

  பார்வையுடன் தொடங்கும் me

 time. சில நேரம் மூச்சு முட்டும்

 நமக்கென நேரமில்லை என்று . இந்த

 கைபேசியே எல்லாத்தையும் முழுங்க

 ஏது நேரம் மற்றதை கவனிக்க. 


Me time தேவை சில நேரம் தினமும்

 பிடித்ததை செய்யாமல் ஒரு ஏக்கத்தை

 வளர்ப்பதற்கு பதில் பிடித்ததை

 செய்தோம் என்ற தன்னம்பிக்கை

 வளர அது தேவையே.முன்பு

 இதற்கென தனியாக முகவரி இல்லை

 ஆனால் எல்லாம் உண்டு சுற்றி

 ஆட்களும் உண்டு.


ஆனால் இன்று நான்கு சுவர் மணி

 கணக்கில் me time, எல்லாம்

 விஞ்ஞானத்தின் கையில்  உன்னை

 யாரும் கவனிக்கவில்லை,

 அங்கீகரிக்க வில்லை,தனிமை.எதை

 நாம் கவனிக்கிறோமோ இல்லையோ

 Google நம்மை நன்கு கவனிக்கிறது.


கிடைக்கும் நேரத்தை me time என்று

 பெயர் வைத்து ஆக்கபூர்வமாக

 வளர்த்து,நம் உடலை கவனிக்க அது

 அவசியமே.யாரும் தட்டிக்கேட்க,

 தட்டிக்கொடுக்க ஆள் இல்லாத போது

 நம்மை நாமே மெருகேற்ற me time

 தேவை இந்த இயந்திர 

வாழ்க்கையில்..



இந்த வாரத்தலைப்பு "me time" by Veena Shankar

 


“மீ டைம்” மற்றும் “ஸ்பேஸ்”  


                                    சமீப காலமாக நாம் கேட்கும் இரு சொற்கள் “மீ டைம்” மற்றும் “ஸ்பேஸ்”. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த “ஸ்பேஸ்” என்ற வார்த்தையை கேட்டுள்ளேன். என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொண்ட போது தான் அதன் அர்த்தம் சரியாக தெரிந்தது. திருமணமாகி கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் கால் பதித்த எனக்கு, இந்த “ஸ்பேஸ்” என்ற வார்த்தை தேவைப்படவில்லை. வீட்டில் பெரியவர், சிறியவர் அருகில் உள்ள உறவினர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பேசி சிரித்து மகிழ்ந்திருந்த காலமும் கூட அது தான். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்கள் கேட்கப்படாவிட்டாலும் பெரியோர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு வாழ கற்றுக் கொடுத்தது. எடுத்த முடிவும் தவறா? சரியா? என்று ஆராயகூட இடம் இல்லாமல் சென்றது அன்றைய நாட்கள்.


                                ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்ய, வேலைகளும் ஒருவர் மீது மட்டுமே விழாமல் பகிரப்பட்டதும் உண்மைதான். ஆனால் இந்த கூட்டுக் குடும்பங்கள் சிதறி தனி குடும்பமாக உருவெடுத்த அன்றே தொலைந்தது மகிழ்ச்சி. அதற்காக நான் யாரையும் குறையும் குற்றமும் கூற முற்படவில்லை. அவரவர் வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருப்பதால் கூட்டு குடும்பம் சுருங்கி விட்டது. அன்று கூட்டுக் குடும்பத்தில் ஒரு ஆள் இல்லை என்றாலும் மற்றவரால் அந்த வேலை செவ்வன செய்து முடிக்கப்பட்டு இருக்கும். அதனால் எல்லோரும் எல்லா வேலைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். வேலை முடித்து கிடைக்கும் நேரத்தில் தையல், கூடை பின்னுவது மற்றும் பல கலைகளையும் கற்று தெரிந்திருந்தனர். ஆனால் அதை அவர்கள் வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. இன்று ஊருக்கு சென்றாலும் மறுபடியும் நாமே அந்த வேலையை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாவதால் தான் இந்த “ஸ்பேஸ்” -” மீ டைம்” என்ற வார்த்தைகள் நம்மிடம் ஒட்டிக்கொண்டன. இல்லையென்றால் அந்த இடத்திற்கு செல்வதையே தவிர்த்தும் விடுவோம்.


                             தொலைதொடர்பு சாதனங்கள் அன்று இல்லாததால் குடும்பத்தினர் இடையே பற்றுதல் இருந்தது. அதுவும் தனக்கென மீ டைமை யாரும் எதிர்பார்த்தது இல்லை. “ஸ்பேஸ்” என்ற ஒன்று இல்லாமலே கூட பல சாதனையாளர்கள் உருவாகியிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவரவர் குடும்பத்தினர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். குடும்பத்துக்குள்ளேயும் உறவுக்குள்ளேயும் தற்போது இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்று அவரவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து குடும்பத்தில் குழப்பம் வருவதும் சகஜமாகிவிட்டது என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.


                          என் சிறு வயதில் ஒரு சில சிறுகதைகளை எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் அது எங்கே போனது என்று எனக்கு தெரியவில்லை. “ விண்மீன்கள்” என்ற குழுவின் அடித்தளமாக உள்ள “திருமதி அகிலா தேவி குமரன்” ஆல் மீண்டும் உயிர் பெற்று என் எழுத்து தொடர்கிறது. இடைப்பட்ட காலங்களில் கூட நான் இப்படி எழுதியதும் இல்லை, எழுதுவேன் என்று நினைத்து பார்த்ததும் இல்லை. என்னுடைய விருப்பம் வேறு பலவற்றில் இருந்தது.


                         என்னை பொறுத்தவரை நம்முடைய “மீ டைம்” , “ ஸ்பேஸ்” என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தாமாகவே நம்மிடம் வந்து சேரும். அதற்கு சற்று பொறுமையும் தேவை. எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். கடமைகள் காத்திருக்கும் நேரத்தில் எனக்காக நேரத்தை நான் நிச்சயம் ஒதுக்கவேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. இன்று நாம் “மீ டைம்” என்று பேசி, ,நாளை நம் பிள்ளைகள் அதே வார்த்தையை நம்மிடம் சொல்லும் பொழுது நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பதும் சந்தேகமே!


                              நீங்கள் கூட கேட்கலாம் “ நமக்காக நேரம் ஒதுக்குவது தவறா?” என்று. தவறு இல்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் நாம் கடமைக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த மீ டைமும் உங்களுக்கு நாள் முழுதும் கிடைத்தால் குழப்பம் வரும். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமலும் போய்விடும். எதுவும் அளவோடு இருந்தாலே நன்மை பயக்கும். 


                           என்னுடைய கருத்தை மட்டுமே நான் பகிர்ந்தேன். இதனால் யாரையும் நான் புண்படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து.

இந்த வாரத்தலைப்பு "Me time " by Ramalakshmi

 


2 வருடங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடந்தபோது தொலைத்தேன்...

மீண்டும் என்னிடம் மீண்டு வந்தாய்

பள்ளிகள் திறந்ததும்.

Tuesday, June 20, 2023

அட பஸ் போச்சே by Vidhya Nivash

 


எங்கே வந்தாய் உன் குரலை

 கேட்டுத்தான். நான் உன்னை

 கூப்பிடவில்லையே. நேற்றுத்தான்

 ரொம்ப நேரம் கூப்பிட்டுக் கொண்டே

 இருந்தாயே அவரச வேலை

 வரமுடியவில்லை. நான் தினமும் தான்

 பாடுவேன்.அதுசரி தினமும் கத்துவாய்

 ஆனால் எனக்கோ ஏக்கமாக பாடுவது

 போல் தான் தெரியும்.யாருக்கான

 அழைப்பு  தினமும் தண்ணீர் தொட்டி

 அருகில் அமர்ந்து கத்துகிறாய்

 இல்லை இல்லை பாடுகிறாய்.ஓய்

 வந்த வழியே போறியா ஆம்

 கண்டிப்பாக போகத்தான் போறேன்.

 அதன் முன் உன் காதல் கதையை

 கொஞ்சம் சொல்லு . ஆமாம் உன்

 அவசர வேலை தான் ஊருக்கே

 தெரியுமே.காலையில் அந்த பஸ்

 ஸ்டாண்டுக்கு சார் போகவில்லை 

 என்றால் களைகட்டாதமே. தலைவர்

 இல்லாமல் எதுவும் அசையாதாமே.

 அட நீ வேற.வந்த வேலையை

 பார்ப்போமா. ஒத்தலில கத்துரானே

 என்று எதாவுது உதவி பண்ண வந்தா.  

நம்மள கலாய்க்கிறனே  ...பாம்

 பாம்.அட பஸ் போச்சே..

படமும் கருத்தும் by Veena Shankar



 பரப்பில் உள்ள நீரை மட்டும் உறிஞ்சி பாறைக்குள் வளர்ந்த மரம்

 பாறையை குடைந்து வெளி வந்தது மரத்தின் முயற்சியா? படைத்தவனின் செயலா?

தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்ததால் பாறையில் விழுந்ததோ இந்த மரத்தின் நிழல். 

பாறையில் ஏறிவிட்ட மகிழ்ச்சியோடு நீர்பரப்பை ரசிக்கும் மரம்

Monday, June 19, 2023

அதிர்வுகள் by Vidhya Nivash

 


இசையா? குரலா? என்ற

 சந்தேகத்திற்கு விடைக்கிடைத்தது

 நேற்று  .அதிரும் மேள ஒலி இசையாக

 வெடிக்க. நாடி நரம்பெல்லாம் வெடிக்க

 முழங்கிய இசை. மேளத்தை குச்சிகள்

 சீண்ட, எம்பி எம்பி தட்டி அந்த

 தாளத்திற்கு ஏற்றாற்போல குதித்து

 ஆடி இசைக்க ,அதை கேட்கும் போது

 பார்க்கும் போதும் அந்த குச்சிகள் தட்டி

 மேல வருவது போல் குதிகால்கள்

 எம்மி எம்மி குதித்து ஆடுவதுபோல்

 ஆனந்தம் . இசையின் அதிர்வுகள்

 காற்றலையில் பரவி ஆட தூண்டியது.

அதற்கு குரல் தேவையில்லை

 அதிர்வுகளே போதும் என்றது.

கரைசேர கரம் கொடுக்கும் காட்சி by Veena Shankar

 


கரைசேர கரம் கொடுக்கும் காட்சி


அதோ! அந்த மலை உச்சியில்

 இருக்கிறதாம் அமைதி. பாதி தூரம்

 கடந்து விட்டோம், கை கொடு

 கடப்போம் என்கிறான் நண்பன்.


மனம் தவறினால் வாழ்வு தவறும்.

 வாழ்வு இழந்தால் மனம் வெறுக்கும்


ஏற்றி விட்டவன் அங்கேயே நிற்க கரம்

 கொடுத்தான் ஏறியவன்


களம் காண கரம் கொடுக்கும் நண்பன்

 தானும் வளைந்து


உற்று பார்த்தாள் மலையில் தெரியும்

 மந்திகள். மனிதனின் முந்தைய

 பிம்பம்

அன்புள்ள அப்பாவிற்கு by Kiruthika

 


அன்புள்ள அப்பாவிற்கு..

ஆசையாய் ஒரு மடல்..!..


என் தலையில் ..

கொட்டி விட்டு..

தலை நிமிர்ந்து நடக்க சொன்னாய்..!!

ஹீரோ பேனா

பரிசளித்து..

எழுதுவதை நிறுத்தாதே என்றாய்..!!

பத்து ரூபாய் 

கொடுத்து ..

ஐந்து ரூபாய் மட்டுமே கைஇருப்பாய் 

நினைக்க சொன்னாய்..!!

எளியவர் வலியவர் 

என்ற பேதம் இல்லாது

மதிக்க பழக்கினாய்..!!

கணக்கு ..

வாழ்க்கை..

எளிமை ..

பண்பு..

அன்பு..

எல்லாம் சொல்லி கொடுத்த

நீங்கள்..!!

நீர் இல்லாமல் போனால் ..

எப்படி நான் வாழ ?!..என்பதை மட்டும்

சொல்லி கொடுக்கவில்லையே

அப்பா..!!!

மறுபடியும்

உன் கை கோர்க்கவே 

ஆசை !!!

Miss U Appa..

எத்தனை நேரம் அம்மா அடுப்படியில் ..நமக்காக 

சமைத்தாலும்..

பெண் பிள்ளையின் மனம் ஏனோ ..

அப்பாவின் காலடிச் சத்தமே தேடும் ..

மனம் பகிர...!!..

அப்பாவின் -

முள் குத்தும் தாடியில் தான் ...

ரோஜாவின் மென்மை கொண்ட ..

தாயுமானவன் அன்பு கண்டது பெண் பிள்ளைகளின் மனம் இங்கே ..!...

படிக்க நீ இல்லை என்றாலும்..

உன்னை படித்து கொண்டு தான் இருக்கிறேன் ..

என் மனதில் ..

நீ பதித்த எனக்கான உன் பாடங்களில் ..அப்பா..

தெய்வத்தின் தெய்வம் அப்பா by Susila

 


ஈன்றாளே அன்னை,

ஈரைந்து திங்கள்,

இன்னுயிரை தான் சுமந்தே..

அவள்தாம் சுமந்த பிள்ளையும்,

அன்னையும் சேர்த்தே தான் சுமப்பான்

 தந்தை...

தாயென்ற தெய்வத்தை சேர்த்தே

 சுமக்கும்,

 தெய்வத்தின் தெய்வம் - அப்பா

 நீயல்லவா..


அப்பாவின் கோபம் தப்பானதல்ல,

எப்போதும் அது அன்பானது..

அவர் கண்டித்து பேசும் வார்த்தைகள்

 எல்லாம் நமை கரைசேர்த்து காக்கும்

 அக்கறையே..


பிள்ளைக்கு முதல் நாயகன்,

நாம் பார்க்கும் வீரம்,

பாராத உழைப்பு, மாறாத முயற்சி, அவர்

 தளர்விலும் தளராத

 தன்னம்பிக்கையின் எழுச்சி சித்திரம். 


பிள்ளையின் முகத்தில் சிரிப்பை

 பார்க்க, தான் தொலைத்த சிரிப்பை

 தேடாத உயிர்,மெழுகாய் கரைந்து

 ஒளியாய் மிளிர்ந்து, கரை

 சேர்க்கும் ஒரு கலங்கரை விளக்கு...


பிள்ளையின் கனவுக்கு நனவில்

 உழைப்பவன்..

தன் பிள்ளையின் வாழ்க்கை விடிய

 தன் இரவுகளை தொலைத்தவன்..


காலமெலாம் நமை சுமந்த

 சுமைதாங்கியின் சுமை களைவோம்..

அன்பால் அவரை சுமப்போம்

 என்றென்றும்...


Original version : Mrs. Suseela

Sunday, June 18, 2023

அன்புள்ள அப்பாவே by Veena Shankar

 


அன்புள்ள அப்பாவே!


உங்களோடு கைகோர்த்து கொண்டு பழகிய நடையும்


வெளியூருக்கு செல்லும் வாய்ப்பில்லை என்றாலும் நிதமும் பாஜாருக்கு அழைத்து கொண்டு போன நாட்களும்


பள்ளியில் பயிலும் போது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அரை மணி நேரம் கூட்டி சொல்லி நீங்கள் என்னை எழுப்ப முயற்சி செய்ததும்


வெகு தொலைவில் நீங்கள் இருந்ததால் கல்லூரி காலத்தில் உங்கள் வரவை நான் எதிர்பார்த்து நின்றதும்


வேலைக்கு சென்ற போது என்னை அறியாமலே அவ்விடத்திற்கு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியதும் 


வெளியே செல்லும் போது இடது கை ஆட்காட்டி விரலில் வீட்டு சாவியை பொருத்தி கொள்வதும் எனக்கும் அப்பழக்கம் தொற்றி கொண்டதும்


கால் வலியை மறந்து பேரன் பேத்திகளோடு விளையாடிய நாட்களும்


உங்கள் உடல்நிலை பாதிக்கபட்ட போதும் அதை தாங்கும் வலிமை எனக்கு இல்லை என்று நினைத்தோ நள்ளிரவில் உங்கள் மறைவை, நான் என் பயணத்தின் போது அறிந்த வேளையும், என் துயரத்தை பகிர ஆள் இல்லாமலும் கதறி அழவும் முடியாமல் தவித்த தருணமும் 


உங்கள் மனதை போலவே அமைதியாய் நீங்கள் படுத்து கிடந்த அந்த நேரத்தையும் என்றும் மறக்க முடியாத நினைவோடு உங்கள் மகள்

தந்தை ஒரு வரமே by Vidhya Nivash

 


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

 ஆம் அதிகம் பேசாத அப்பாக்களின்

 ஒரு சொல் மந்திரமே. கேட்டு

 கொடுப்பவள் அம்மா கேட்காமல்

 உணர்வறிந்து கொடுப்பவர் அப்பா

எதை உழைப்பை மட்டும் அல்ல

 தங்கள் மகிழ்ச்சி,ஆசை,கனவுகள்,

உணர்வுகளை அடக்கி அனைத்தையும்

 பிள்ளைகளிடம் கொடுப்பவர்,

 பார்ப்பவர் அப்பா.இதில் மகள்

 தந்தையே அதிகம் பேசப்படுகிறது.

 அதுவே வெளிப்படை ஆனது.தந்தை

 தன்னையாகவே பார்க்கிறார்

 மகன்களை வெளிப்படையாக

 காட்டிக்கொள்ளாமல் உள்ளுற மகிழும்

 உறவு.மகன்களும் அது மாதிரியே

 இளமையில் எதிரி .ஒரு வயத்திற்கு

 மேல் தந்தையிடம் அன்பை

 வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும்

 மகன்கள். எங்கே அது அதிகாரமாக

 மாறிவிடுமோ என்று.தாயை எவ்வளவு

 வேணுமானாலும் விட்டுக்கொடுக்கும்

 பிள்ளைகள் தந்தையை ஒரு நூலிழை

 கூட பிறர் பேச இடம்

 கொடுக்கமாட்டார்கள் .தந்தை

 நொறுங்கி விடுவார் என்று அந்த

 கம்பீரத்தை கடைசிவரை காண

 விரும்பும் பிள்ளைகள்.

தந்தையின் காலணிகள் பலகதை

 சொல்லும் ஓடாய் தேயும் ,சபைக்கு

 வெளியே ,கஷ்டத்தில்க்கூடே,நம்மை

 தாங்கும் சுமைத்தாங்கி என பல...

அவர் சொல் மறப்போமா! அவர்

 ஆசை கேட்போமே!


தந்தை ஒரு வரமே !

அதிலும் தந்தைபோல் கணவன்

கிடைத்தால் அது பொக்கிஷமே!!

Saturday, June 17, 2023

ஆனந்த அலை by Vidhya Nivash

 


இசை எத்தனை முறை கேட்டாலும்

 சலிக்காத ஒன்று இசை.அதில் குரலா,

 இசையா எதற்கு முதலிடம்

 தெரியவில்லை.வானமும் கடலும்

 போல் எல்லையில்லா ஓட்டம்

அதைகேட்ட மாத்திரத்தில்

 ஒருவரை அடிமையாக்கக் கூடிய

 ஒன்று இசை.ஒரு விதமான மயக்கம்

 படைப்பவருக்கும்,பருகுபவருக்கும் 

உள்ள ஒப்பந்தம் சில மணிநேரம்.

அதை முழுமையாக ஏற்று,

உள்வாங்கியவரால் மட்டுமே பாட

 முடியும்.இல்லையேல் அதற்கு உயிர்

 இருக்காது .அதை கேட்ப்பவரால்

 ரசிக்க முடியாது.பிடித்ததை ரசிக்கும்

 போது நேரமே தெரியாது .ஒரு

 ஆனந்த அலை இசை அது அடிக்கும்

 இடமெல்லாம் ஒருவிதமான அசைவை

 உண்டு பண்ணும் அதில் சிறு தூசும்

 அசையும் போது இந்த உயிருள்ள உடல்

 அசையாதா, உருகாதா என்ன.

பூவிற்கு பூவையே ஈடு by Veena Shankar



பூவிற்கு பூவையே ஈடு

பூவையும் சங்கிலியால் பிணைக்கும் மனிதர்கள் உள்ளவரை பூவையும் (பெண்ணும்) சுதந்திரத்தை அனுபவிக்க இயலாது

இயற்கையும் இயற்கையும் நடத்தும் போட்டி செயற்கையான தராசு தட்டில்

எது குறை எது நிறை என்று குழந்தை பருவத்தில் கற்றுக் கொண்ட போதிலும் முரண்பாடாக தோன்றியது வளர்ந்த பின், என் மனதில் இருக்கும் என் காதலியின் மனம் நிறைவாய் இருந்தாலும் எனக்கு குறையே அவள் வேறொருவரை கைப்பிடித்ததால்

தராசு தட்டில் பூவை மட்டுமே காணும் கண்களுக்கு அடுத்த தட்டில் நிறைநதிருக்கும் காற்றை காண முடிவதில்லை. அதுபோல் வாழ்க்கையும் தெரிவது மாயை தெரியாதது உண்மை வடிவம்

இரு கண்களில் காணும் காட்சிகள் ஒன்றானாலும் ஓர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் இரண்டாக உணர்வது ஏன்?

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...