திருப்தி
"ஊரின் பெரிய தொழிலதிபர் வீட்டு கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்.? பாருங்க! எவ்வளவு ஆடம்பரமாக நடக்க போகுது" என்று சொல்லியவாறே தன் கணவன் ரகுவை தன்னுடைய முதலாளியின் வீட்டு கல்யாணத்திற்கு எப்படியாவது அழைத்து செல்ல வேண்டுமென்று முடிவெடுத்திருந்தாள் ராகிணி. அவளுடைய கட்டாயத்தின் பெயரிலேயே தானும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து குழந்தைகளிடமும் விடுப்பு எடுக்க சொன்னான் ரகு.
பல பல விளையாட்டுக்களும் திண்பண்டங்களும் பரிசுகளும் இருக்கும் என குழந்தைகளுக்கு ஆசை வார்த்தை காட்டினாள்.
அதனால் குழந்தைகளும் சுணக்கமில்லாமல் திருமணத்திற்கு கிளம்பினர்.
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டி, ஊர் மக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி' சாப்பிட்டு போகும் படி கேட்டுக்கொண்டார் அந்த தொழிலதிபர். ஆடம்பர கல்யாண நிகழ்வை காணப் போவதாக ஊர் மக்கள் நினைத்தே அங்கு சென்றனர்.
பெரிய திடல் ஒன்றில் கோயில் போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மணமக்கள் அமர்ந்திருக்க, பற்பல இடங்களில் உணவுக் கூடங்கள் அமைய பெற்றிருந்தன. எந்த திசையிலிருந்தும் யாரும் வந்து உணவருந்தலாம் என்று சொல்லப்பட்டிருந்ததால் வருவோர் போவர் நிறைய பேர் மூன்று வேளையும் வயிறார உணவருந்தி சென்ற வண்ணம் இருந்தனர்.
மணமக்களின் முகத்தில் மகிழ்ச்சியும், தொழிலதிபரின் செயலில் பெருமிதமும் காண முடிந்தது.
தன் நெருங்கிய நண்பரை அழைத்து ஊர் மக்கள் கல்யாணத்தை பற்றி என்ன பேசுகிறார்கள் என தொழிலதிபர் கேட்க, பசி நீங்க உண்டது திருப்தி அளிப்பதாக சொல்கிறார்கள் என்று அவர் பதிலளித்தார். தொழிலதிபரின் முகத்தில் சந்தோஷம் பீறிட்டது.
கல்யாண மண்டபம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்தவாறே நுழைந்த ரகுவுக்கும் ராகிணிக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. மணமேடை தவிர எங்கும் ஆடம்பரம் இல்லை. சாதரணமான பந்தல் ஆங்காங்கே உணவு கூடத்திற்காக போடப்பட்டிருந்தது. மேலும் சாமானியனும் மணமக்களை கண்டு வாழ்த்த வரிசை அமைந்து இருந்தது. அவ்வளவு தான். மிகுந்த எதிர்பார்ப்போடு சென்றவர்கள் வயிறார உண்டனர்.
ராகிணியை பார்த்து கல்யாணம் ஏற்பாடு எப்படியிருக்கிறது என்று அவளுடைய அலுவலக நண்பர் ஒருவர் கேட்க, தான் நிராசை ஆனதையும் எதிர்பார்த்த அளவுக்கு ஏதும் இல்லாததாகவும் உணவு மட்டுமே திருப்தி அளிப்பதாக இருந்ததாக சொன்னாள் பக்கத்தில் அவள் இருப்பதை அறியாமல். அவள் சொன்னதை கேட்டு கொண்டிருந்த அவளுடைய முதலாளிக்கு சற்றே சங்கடமாகியது. இருந்தாலும் ஒவ்வொரு மனிதனையும் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.
தன்னுடைய பெண் தனக்கு கல்யாணத்தில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றும் ஆடம்பரமாக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் வந்தவர்களுக்கு வயிறார பசியாற்றும் படி தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டதால் தான் தன்னுடைய ஆடம்பரத்தை திருமணத்தில் காட்டாமல் ஊரில் உள்ள எவரும் வந்து பசியாற வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்ததாக எண்ணி தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்.
"போதும் " என்ற சொல் ஒன்று மட்டுமே ஒருவர் பசியாறியதும் மனம் உவந்து சொல்லக்கூடியது. அதுவே பசியாற்றியவருக்கு திருப்தியை தரக்கூடியது என்பதையும் தொழிலதிபர் உணர்ந்திருந்தார்.
பொன்னின் அழகும் குணமும் தனியே இருந்தால் அதற்கு சிறப்பு இல்லை. ஆனால் அது அணியப்படும் நபரை பொறுத்தே அதன் வனப்பு கூடுகிறது.

No comments:
Post a Comment