Tuesday, March 28, 2023

திருமண நாள் by Veena Shankar



திருமண நாள்


அன்றைய தினம் வசந்தனின் திருமண நாள் என்பதால் தன் மனைவிக்கு ஒரு முழம் பூவும் அவளுக்கு பிடித்த மஞ்சள் ரோஜாவையும் அதிரசத்தையும் கூடவே தான் கொறிக்க உருளை கிழங்கு வறுவலும் வாங்கி கொண்டு வந்தான். வீட்டினுள் வரும் போதே வசந்தனின் மகன் அவனையும் கையிலிருந்த பொருட்களையும் பார்த்து புன்னகை செய்தவாறே அலுவலகத்திற்கு புறப்பட்டான்.  


                             வசந்தன் தான் கொண்டு வந்த பொருட்களை மனைவிக்கு தெரியாமல் ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்தான். காலை பதினோரு மணிக்குள் அவளுக்கு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே தட்டை அலங்கரித்தான் . 


                 " சௌமியா! இந்தா! உனக்கு பிடித்ததை வாங்கி வந்திருக்கிறேன், எடுத்து கொள்.. போன வருஷம் எனக்கு மஞ்சள் ரோஜா கிடைக்கவில்லை.. அதனால் இந்த முறை சீக்கிரமே கடைக்கு போய் பூ காலியாவதற்குள் வாங்கி வந்துட்டேன். உன்னுடைய அகல விழிகளை திறந்து பார்.” என்று சொல்லியவாறே தட்டை அவள் பக்கத்தில் வைக்க " ஏங்க ! எனக்கு இருக்கிற நாலு முடிக்கு இவ்வளவு பூவா? " என்று அவள் மலைக்க,


           "சக்கரை வியாதி வந்ததிலிருந்து நான் இனிப்பு சாப்பிடுவதில்லைன்னு தெரிஞ்சும் நீங்க எனக்கு பிடிக்கும்ன்னு அதிரசம் வாங்கி வந்துட்டீங்க. சரி! பரவாயில்லை. எனக்குன்னு சொல்லி வாங்கி வந்துட்டு நீங்களே சாப்பிடாதீங்க. பையனுக்கும் கொஞ்சம் கொடுங்க" என்று தன் கண்களாலேயே சொன்னாள். அதை புரிந்து கொண்ட வசந்தனும் “சரிம்மா” என்றபடியே தலையாட்டி அவளுடைய கேசத்தை வருடினான்.  


                               சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வசந்தன், தன் அத்தை மகளான சௌமியாவிடம் “இன்றைய காதலர் தினத்திலே” அவளிடம் தன் காதலை சொல்ல, அவளும் இவனை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சி கொடுத்தாள். பிறகென்ன நல்ல தினம் பார்த்து திருமணம் தான். சௌமியாவின் படிப்பு முடிய ஒரு வருடம் இருந்ததால் அடுத்த வருடம் அதே தினத்தில் திருமணம் முடிந்தது. 


                      ஆனால் பத்து வருட காலம் மட்டுமே நீடித்தது அந்த பந்தம். வருடா வருடம் தங்களுடைய திருமண நாள் அன்று கோயிலுக்கு செல்வது அவர்கள் வழக்கம். அன்றும். அப்படிதான். கோயில் படியில் இறங்கும் போது தவறுதலாக விழுந்த சௌமியா, இருதயம் பாதிக்கப்பட்டு இறந்தாள். வசந்தனின் பையனுக்கு அப்பொழுது ஏழு - எட்டு வயது இருக்கும். பலரும் வசந்தனை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் அவளுடைய நினைவாக தான் வாழ்வதாகவும் தன் பிள்ளையை தானே வளர்த்துக் கொள்வதாகவும் சொல்லி மறுமணத்திற்கு மறுத்துவிட்டான்.


                            இன்றும் தன் மனைவியின் மீதான காதலை வசந்தன் விட்டு விடவில்லை. தன்னை விட்டு மனைவி பிரிந்த போதும் அவளுடைய நினைவாகவே இருக்கும் வசந்தன், அவள் போட்டோ முன்பு அவளுக்கு பிடித்த பொருட்களை வைத்து அவள் தன்னிடம் பேசுவதாக நினைத்து கொண்டு இவனும் பேசுவான்.


                   ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் திருமண நாளை கொண்டாடி வருகிறான் வசந்தன். திருமண பந்தம் அவ்வளவு எளிதாக மறக்ககூடியதல்ல. 


                     இருந்தாலும் இறந்தாலும் நினைவு இறப்பதில்லை. அதற்கு ஓய்வுமில்லை.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...