மேகமூட்டத்துடன் தொடங்கிய விடியல்
நடைப்பயிற்சிக்கு கீழே சென்றவுடன்
தான் தெரிந்தது மழைச்சாரலின்
தடயங்கள் சாலையில் அதனுடன்
பாதத்தடங்களை பதித்து நடக்க
எங்கும் அமைதி ஐம்புலனும் பேசியது
எப்போதும் வானை ஆக்ரமிக்கும்
சூரியன் சுறுசுறுப்பை விடுத்து தூங்க
இன்று தான் கண்ணில்ப்பட்ட
சாலையின் இருபுறமும் உள்ள
மின்விளக்குகள் கண்சிமிட்ட நாங்கள்
இருபத்துநான்கு மணிநேரமும் கடைசி
மூச்சு வரை மின்னுவோம் என்று
சொல்ல ஆங்காங்கே குருவிகள் பேச
சாலையில் கடந்த ஒரிருவரின்
நறுமணங்கள் எப்போதோ முகர்ந்த
பள்ளி,கல்லூரி நாட்களுக்கு இழுக்க
இடையில் வந்த யார் வீட்டிலோ
கொதிக்கும் சாம்பாரின் மணம்
அம்மாவிடம் இழுத்துச் செல்ல
முகர்தல் பேசியது மின்னல் வேகத்தில்
செல்லும் பல வாகனங்களும் தூங்க
சாலையில் செல்லும் ஒரிரு
வாகனங்களும் மெல்ல அரைத்
தூக்கத்தில் நகர எறும்புக்கூட்டம்
போல் செல்லும் மாணவர்கள்
இல்லாமல் பள்ளிக்களும் தூங்க
வேலைநிமித்தமாக செல்லும் ஒரிரு
ஆசிரியர்கள் பரபரப்பின்றி மலர்ந்த
முகத்துடன் செல்ல அரைவிழிகள்
திறந்தார் போல் பள்ளிகதவுகள்
வரவேற்க ஆங்காங்கே
நடக்கும் என்னை போன்றும் ஒரு சில
சிறுவரும் பெரியோரும் இதனுடன்
மேனியை தழுவிய தென்றலும்
ஐம்புலனும் மௌனத்தில் பல கதை
பேசி துணைவர கடைசியாக மழைத்
துளிகள் மீண்டும் வழியனுப்ப வந்தது .

அழகு
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete