நல்லதும் கெட்டதும்
வயது அறுபதை தொட்டதால் மருத்துவரின் ஆலோசனை படியும் வேறு வழியில்லாமல் ஒரு வருட காலமாக நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார் முகிலன். ஒரு போதும் ஆரம்பித்ததை பாதியில். விடாமல் தவறாமல் நடை பயிற்சி போனார். முதலில் அதிகாலையில் சென்றவர் தற்போது மாலையில் மாற்றி கொண்டார். அதுவும் பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு செல்லாமல் சாலையிலேயே தான் செல்வார். வாகனங்களின் ஒலி சத்தத்தையும் நிறைய மனிதர்களின் நடமாட்டத்தை அவர் விரும்பியதே காரணம்.
நடைபயிற்சி போகும் போது, சும்மா போகாமல் மற்றவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே செல்வார்.
"அம்மா! குழந்தையை இப்படி வாகன நெரிசல் இருக்கும் இடத்தில் தனியே விடலாமா?" என்று கடிந்து கொண்டு அந்த பிள்ளையை கவனமாக பிடித்து தன் வசம் வைத்து கொள்வார்.
யாரும் ஒலி எழுப்பியை அதிகமாக ஒலித்தாலும் மாறாக வலப்பக்கம் திரும்பும்போது ஓலிக்காமல் சென்றாலும் அவர்களை நிறுத்தி அவர்களை வசைபாடி அனுப்புவார்.
ஒருமுறை நடைபயிற்சி செல்லும் போது சாலையின் வளைவில் ஒருவன் வண்டியை நிறுத்தி அலைபேசியில் பேச அவனை கண்டபடி திட்ட, அவனும் பதிலுக்கு கத்த ஒரே ரணகளம் தான். பெரியவர் ,(முகிலன்) சொன்னது சரிதான் என்று கூடியிருந்தவர்கள் சொல்ல, முகிலனிடம் மன்னிப்பு கேட்டு செல்லுமாறு அவனை பணித்தனர்.
நித்தம் ஒரு சம்பவம் அகிலனால் நடக்க அவரை ஆதரித்தவர்கள் தூற்ற ஆரம்பித்தனர். ஆனாலும் முகிலன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
வயதின் மூப்பு காரணமாக நடை தளர, கண் பார்வை சிறிது மங்க, காது கேட்கும் திறன் குறைய விடாது நடை பயிற்சியை தொடர்ந்தார் முகிலன்.
ஒரு நாள் அதீத இறைச்சலுடன் வந்த லாரியின் சப்தம் கேட்டு முகிலன் ஒதுங்க, அவருடைய கால், மாட்டு சாணத்தில் பதிய சாலையில் வழுக்கி விழுந்தார். அவரை தூக்கி எழ வைக்க ஆட்கள் இருந்தாலும், மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் முன் தானும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இந்த பெரியவருக்கு தெரிய வேண்டாமா? என கூட்டத்தில் ஒருவர் சொன்னது இம்முறை தெளிவாக கேட்டது முகிலனுக்கு.
பிறருடைய நல்லதுக்கு தானே நான் சொன்னேன். நல்லது நினைப்பதும் தவறா என நினைத்தவாறே ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்து வீடு சேர்ந்தார்.
நல்லது நினைத்தாலும் கெடுதாலாய் மாறும் கலிகாலத்தில்.

No comments:
Post a Comment