Tuesday, January 31, 2023

மலரின் தேடல் by Vidhya Nivash


 ஒன்றாய் பூத்த இரு மலர்கள் நாங்கள்

ஒன்றாய் வந்தோம் ஆனால் அவளுக்கென்ன அவசரம் காய்ந்தாள் சீக்கிரம் 

தினமும்  தேனீ வந்து மொய்க்க வருவோரும் போவோரும் பார்வையில் மொய்க்க 

அரும்புகள் அரும்புகிறது காய்கள் காற்றில் கூத்தாடுகிறது 

வாண்டுகள் மிதி வண்டியை வைத்து வட்டமிட

பெற்றோர் அங்கும் இங்கும் நோட்டமிட்டு வாயாட  நீ இல்லை என்னோடு வம்பு செய்ய..




Monday, January 30, 2023

ஒன்றல்ல இரண்டு by Veena Shankar



கோப்பையில் பாதி மது உள்ளே சென்றதும் மதி மாறி நிறுத்தி கொண்ட மாது


போதையால் பாதை மாறிப் போகும் பேதை


வண்ண திட்டுக்கள் ஓவியத்தில் மட்டுமல்ல அவள் மனதிலும் ஆட்கொண்டது, அதை தேனாக மாற்றும் முயற்சியில் அவளும் அவள் நடவடிக்கையும்


தன்னை ஏமாற்றிவிட்டவரை காணாது தவிக்கும், முகம் காட்ட மறுக்கும் இந்த பெண் அடுத்த பெண்ணின் வருகைக்கு காத்திருந்தாலும் அவன் முகத்திரை விலக்கவும் காத்திருக்கிறாள் காலம் கணியும் வரை


பழரசம் என்று ஏமாற்றி மதுபானம் குடிக்க கொடுத்தாரோ

நாகரீகம் என்று சொல்லி பகட்டான உடை கொடுத்தாரோ

தவறில்லை என்று கருதி தடம் மாற சொன்னாரோ

யூகித்து கலங்கியது என் உள்ளம் பெண்ணின் பாதையை மாற்றியது யாரோ


கையில் தண்ணீர்

விழியில் கண்ணீர்

ஓவியத்தில் ஒன்று கண்டும் மற்றொன்று காணாமலும்


அழகு, காண்பதில் மட்டுமல்ல. தண்ணீரில் பிரதிபலிக்கும் ஓவியத்தின் கையிலும் தண்ணீர்


மினிகதை


கருங்கூந்தலை அள்ளி முடிந்து, மதுபான கோப்பையை கையில் ஏந்தி, குட்டை பாவாடையும் அரைக்கை சட்டையுமாய் தன் காதலன் கிழவனுக்கு காத்திருக்கும் கிழவி. இது தெரியாத கிழவன் , கிழவியை யுவதி என்று நினைத்து அருகில் வர , தான் இது ஏற்கனவே கண்ட முகமோ என பார்த்து கிழவன் விழிக்க, அவளை மெதுவாக தீண்ட தன் கிழவனின் முதல் ஸ்பரிசம் போல் உணர்ந்தாள் அரிதாரம் பூசி மிடுக்கேறிய கிழவி

உனக்காக காத்திருப்பேன் by Vidhya

 


 கோப்பையில் மிதக்கும் வறுத்த ரொட்டி துண்டுகள் சுடசுட தக்காளி சூப்..

ரயில் வண்டியில் ஏறி அவர்அவர் இருக்கையில் அமர்ந்து அடுத்த ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் அடி தொண்டியிலருந்து ஒலியேலுப்பி காப்பி காபி கா..

ஒவ்வொன்றாக வரும்..

சில நேரம் அமைதியாக போகும்.யாரவது ஒருவர் ஆரம்பித்தால் போதும்.நமக்கும் லைட்டாக பசிக்கும்..நாம் எதிர்பார்ப்பது மட்டும் வராது.

அதில் ஒன்று தான் இந்த தக்காளி சூப் சூடாக ஆவி பறக்க மிளகு தூள் தூவி ..ரயில் வண்டியின் சத்தத்தில் பலரின் பேச்சுக்களில் யாரோ வயலின் வாசிப்பது போல் மரம் செடிகள் முன்னும் பின்னும் வந்து மோதிச் செல்ல..தூக்கம் எங்கோ தள்ளிச் செல்ல..சற்றென்று மழை நின்றால் போல் வண்டி நிக்க கண் திறந்து பார்த்தால் எங்கும் இருள் ஆங்கங்கே மின்மினி போல் பல்பு மினுக்க மெதுவாக சக்கரம் சினுங்க மீண்டும் மழை தொடர பயணம் படையெடுக்க மனமோ தக்காளி சூப் நோக்கி..


இரண்டும் ஒன்றானால் by Veena Shankar

 


இரண்டும் ஒன்றானால்


பிறப்பும் இறப்பும் ஒன்றானால் உயிருக்கு மதிப்பில்லை 

மனமும் மார்க்கமும் ஒன்றானால் பிரிவுக்கு இடமில்லை 

தரமும் தாரமும் ஒன்றானால் இழப்பிற்கு வழி இல்லை 

தனமும் தானமும் ஒன்றானால் சுயநலத்திற்கு வெற்றி இல்லை 

வறுமையும் முதுமையும் ஒன்றானால் தோற்றத்திற்கு பெருமை இல்லை 

அழகும் அறிவும் ஒன்றானால் தோல்விக்கு சாதகம் இல்லை

Saturday, January 28, 2023

ஆவி பறக்கும் நிலா by Vidhya Nivash

 


கார் மேகங்கள் சூழ 

 பஞ்சு மெத்தைக்குள் மிதக்கும்

 ஒரு வட்ட நிலா

மேகங்கள் கடந்து செல்லும் போதெல்லாம் 

கண்கட்டி விளையாடும் நிலா

தென்றலின் அசைவுக்கு ஏற்றாற்போல 

ஆடும் மரங்கள் நிலவொளியில் ஜோலிக்க

மாறி மாறி தரையில் கோலமிடும் அதன் நிழல்

அதை தொடரும் பாத தடங்கள்

போகும் இடமெல்லாம் பின் தொடரும் நிலா

வெண் புகை ஆவி பறக்க 

தட்டில் கொட்டிய இட்லி போல் 

ஒளிரும் நிலா

நிஜமற்ற மனிதன் by Veena Shankar

 


ஒருவரின் முன்னேற்றம் அடுத்தவருக்கு இழப்பு


ஒருவரை நசுக்கி முன்னேறும் கால்கள், பின்னாளில் தனக்கும் இந்நிலை என்பதறியாது.


முதலாளிகளை தாங்கி நிற்கும் தொழிலாளிகள்


ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் கால்களும் அதனை உயிரைக் கொடுத்து காத்து மன்னிக்கும் நெஞ்சங்களும்


கொடுத்து வைத்தவர்கள் கெடுத்த அடுத்தவரின் வாழ்க்கை


உயிரின் விலையறியா வித்தகர்கள் காலடியில் உயிரை விடும் உத்தமர்கள்


வெறுங்காலுடன் வா உன்னை பதம் பார்க்கிறோம் என்றன கட்டெறும்புகள்


படத்தில் உள்ள எறும்புகளை நிஜம் என்று நினைத்து நசுக்க பார்க்கிறான் நிஜமற்ற மனிதன்

Friday, January 27, 2023

சில நேரமும் சில ஆசைகளும் by Vidhya Nivash

 


கரை புரண்டோடும் ஆற்றின் நீரை அள்ளி உடுத்திய படிகளாக..

 படித்துறையில் உடல் நனைய மீனை போல் நீந்தி ..

அக்கரையில் உள்ள தென்னையில் ஊஞ்சல் கட்டி விளையாடி..

பருந்தாக உயர பறந்து கோபுரத்தை வட்டமிட.. 

சில நேரம் சலமற்ற நீராக..

 பல நேரம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடும் நீராக.. 

தடுப்பில் வடியும் நீர் மேல்முகமாக ஏறும் இடத்தில் கார் கூந்தலை விளையாட விட்டு படுத்து புரள..

சலமற்ற நீரில் கால்சலங்கை நடனமாட மானை போல் துள்ளி ஓட ஆசை..

அன்பின் எல்லை by Veena Shankar



 கண் பார்வையாலே குஞ்சு பொரிக்கும் தனக்கு பிறந்த குழந்தை இது தானா என்ற ஆச்சரியத்தில் மீன்


தாயின் கருப்பையில் நீந்திய தனக்கு கடல் நீரிலும் நீந்த தெரியும் என்று மீனிடம் சொல்லும் சிறுமி


தாய் பாசத்திற்கு ஏங்கும் சிறுமியும் முத்தமிட்டு மகிழ வரும் மீனும்

அதிசயத்த காட்சி by Vidhya Nivash

 


பார்த்து அதிசயத்த காட்சி

அந்த குரல் இல்லை இல்லை உரையாடல்

இன்னும் காதில் ஒலிக்கிறது.

குரலின் ராகத்தை மாற்றி ஒன்றிடம் ஒன்று எண்ணத்தை பரிமாறும் போது ஆச்சர்யமாக இருந்தது மனிதர்களை போலவே உணர்ந்தேன். சிறிது பயமாகவும் இருந்தது சீறிவிட்டால் என்ன செய்வது என்று தள்ளி நின்று பதிவிட்டேன். 

நேற்றும் இரு பூனைகள் அழகான காட்சி அவை எதற்கான உரையாடல் என்று தெரியவில்லை...

அநாகரீகமாக பட்டது ஏன் என்று விட்டுவிட்டேன்.

ஆறறிவு, ஐந்தறிவு என்று பிரித்தாலும் இந்த செல்லப்பிராணிகள் மனிதர்களைவிட பாசத்திலும், நேசத்திலும்,புத்தி கூர்மையிலும் 

மேல் என்பதை உணர்த்தியது.

Thursday, January 26, 2023

அந்தரத்தில் ஓர் சாகசம் by Veena Shankar

 


அந்தரத்தில் ஓர் சாகசம்


தலைகீழான படத்தில் பசிக்கு இரை தேடிய அணில், நேரான படத்தில் தாகத்திற்கு தண்ணீர் தேடியது


தாகம் தீர்க்க தண்ணீர் வாராத குழாயில் அணிலின் தவிப்பு

யார் இந்த காதலர்கள்? பிறரை பற்றி கவலை கொள்ளாமல் காதல் செய்கிறார்கள்


யார் இந்த காதலர்கள்? பிறரை பற்றி கவலை கொள்ளாமல் காதல் செய்கிறார்கள்.

அலங்கார மீன்கள் by Vidhya Nivash

 


வண்ண வண்ண மீன்கள்

துள்ளி துள்ளி வட்டமிடும் மீன்கள்

எல்லையில்லா நீரில் சுந்தரமாக சுற்றித்திரிந்த மீன்கள்

சுறா மீன்களை கண்டு துள்ளி ஓடும் மீன்கள்

இங்கு பல ஊரின் மீன்கள் ஒன்றாய் 

ஓரே கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்ட மீன்கள்

நானே சென்று இடித்தாலும் துரத்தி வந்து கடிக்கா சுறா மீன்கள்

பார்ப்போர் கண்களுக்கு விருந்து நாங்கள் ஆனால் பல முறை சென்று கண்ணாடியில் இடித்துக் கொள்ளும் அப்பாவி மீன்கள்

பல நாட்டில் வசிப்போர் கைப்பேசியில் பிடிக்க பல ஊர்கள் சென்ற மீன்கள்

உண்மையில் ஒரே இடித்தில் அடைக்கப்பட்டு விடுதலைக்கு ஏங்கும் மீன்கள்

வண்ண வண்ண விளக்குகள் எங்களை அலங்கரிக்க,ஒரு பக்கம் செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன் வர,பலரின் பளிச்சிடும் சிரிப்புகளின் நடுவே  மூச்சை அடக்கி,முனகலை அடக்கி ஈ என்று காட்சி தரும் மீன்கள்..

எங்களுக்கும் ஒரு நாள் விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கும் அலங்கார மீன்கள்



தனிமையும் தேடலும் by Veena Shankar

 

 தனிமையில் இருக்கிறோம் என்று நினைத்தாலும் நம்மை சுற்றி வலம் வரும் உயிரினம்

அமைதி பெரியதா? அண்டம் பெரியதா? சிந்தனையில் மூழ்கும் மனிதனும் சிறகடித்து பறக்கும் பறவையும்

தேடுதல் தொடர்கிறது மனிதனுக்கும் பட்சிக்கும், இரண்டுக்கும் இருப்பிடம் இந்த மரமே

இறையை தேடும் மனிதனும்

இரையை தேடும் பறவையும்

வட்ட நிலவின் ஊடே வட்டமிடும் பறவையும் வாட்டத்துடன் மனிதனும்

மனிதனே! என்னை போல் வளைந்து இரு, அடுத்தவர் அமர.

மனிதனே! என்னை போல் பிரகாசமாய் இரு, அடுத்தவர் இருள் நீக்க.

மனிதனே! என்னைப் போல் எளிமையாய் இரு, உன்னுடைய பலம் காக்க

மனிதனே! அனைத்துமாய் இரு, உன்னுடைய நலம் நீடிக்க

காளைகளே by Veena Shankar

 


வீரத்திற்கு மாலையாக கொம்பே பரிசு என அறிவிக்கப்பட்டது


காலை வேளையில் சென்ற காளைக்கு மாலை வேளையில் மாலை


வெறியோடு பிறக்கும் வெற்றிக்காக களையிழக்காது இந்த காளை


மனித வீரரை பதம் பார்க்க காத்திருக்கும் ஐந்தறிவு காளை


Wednesday, January 25, 2023

இணைந்த கைகள் by Vidhya Nivash

 


இரு கைகள் இணைந்து ஒரு பிச்சு கையை உருவாக்க முடியும் எனில்... அதே ஏங்கும் கையையும் காப்பாற்ற முடியும் எனில்...இரு கைகளை சேர்க்க பல கைகள் வந்தது எனில் ... பிரிந்த கைகளை சேர்க்க இந்த பிச்சு கைகள் ஏங்குது எனில்... ஏன் ஒரு கை கூட தாங்க வரவில்லை...

 இணைந்த கைகள் பிரியாமல் இருக்க முதலில் வரும் பிஞ்சு கைகளே காரணம் பல நேரங்களில் ...

ஒரு கையின் கதகதப்பில் ஒரு கை மயங்கி கிடக்க இடையில் வந்த சிறு கை பஞ்சு போன்ற பிஞ்சு கை கனவிலும் பிரிவதில்லை..

எத்தனையோ கால மாற்றங்கள் வந்தாலும் நவநாகரீகம் ஆனாலும் உருவில் வளர்ந்தாலும் என்றும் மாறாத ஒரு உறவு தாய் தந்தை பந்தமே ..சேய்யின் பாசமும் அவ்வாறே .இதில் எந்த மாற்றமும் இல்லை.

உன்னை  அள்ளி எடுக்க எங்கள் நான்கு கைகள் பத்தாதே...

நாங்கள் ஏங்கும் போது உன் சுண்டு விரல் கொடுப்பாயா....


இணைந்த கைகள் by Veena Shankar

 


குழந்தையால் அந்தஸ்து கிடைத்த பெற்றோரும்

பெற்றோரால் அங்கீகாரம் பெற்ற பிள்ளையும் நன்றி சொல்லும் காட்சி


பாசத்தையும் அன்பையும் தேடும் கரங்கள் எவர் எவரிடம் என்பது காலத்தின் விளையாட்டு


இணைவதில் உள்ள சுகம் பிரிவதில் இல்லை

சேர்வதில் உள்ள பிணைப்பு அகலுவதில் இல்லை

அரவணைப்பில் உள்ள பாசம் ஆளுவதில் இல்லை


போராட்ட வாழ்கையில் போர் வீரனாக நானும் உண்டு - குழந்தை


திருமணத்தில் இணைந்த கைகள் நீதிமன்றத்தில் பிரிய மனமில்லாத மழலை


வறுமை இல்லை பாசத்திற்கு, போராடு உயிருள்ள வரை


தாய், தந்தையின் மனங்களோடும் கரங்களோடும் இணையும் ஓர் உயிர் அடுத்த தலைமுறையை விரிவாக்கம் செய்ய வேண்டி


மாசற்ற அன்னையின் கரங்களை கைப்பற்றும் சிசு பின்னாளில் உதறுவது ஏன் என்று காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் கரங்களே

Tuesday, January 24, 2023

முடக்கம் ஏன் by Vidhya Nivash

 


வேகமாக வா சூரிய கதிர்கள் நம்மை விழுங்க வருகிறது..

பனியில் ஊரிய சுவரில் ஒட்டிக்கொண்டு உல்லாசமாக கதகதப்பில்  வலவல உடலை சுருண்டு நீட்டி கிடக்க சூரிய கதிர்கள் வருவது தெரியாமல் பேச்சே!

கூட்டமாக கூட்டமாக குழுமியிருந்த நம்மை சில நேர பிரிவு நெருடலான பாதையை கடக்கும் போதும் உணரோம் அல்ல..

பார்ப்போர் கண்கள் பறிக்க வெல்வெட்  ஆடை உடுத்திய உடல் குளிருக்கே பழக சிறு சூடு தாங்க முடியவில்லை ..தப்பி தவறி நகரத்திற்கு செல்லாதே இங்கு சூரியனே மேல் அங்கு தீக்கு இரையாவோம். 

இதோ வந்தது இடுக்கு போ உள்ளே...

அட பழக பழக பழகிபோகும் ஏன் இந்த முடக்கம் நினைத்தன முடியும் வரை போராடுவோம் வா நண்பா!!

ரயில் வண்டி போல் மலை ஏறி இறங்குவோம் வா..

சாகசமே சுவாரஸ்யமானது முடங்கி போய் தேங்காமல் வெளி உலகம் கண்டு வித்தைகள் கற்போம் வா....


வேண்டுவன by Veena Shankar

 


வேண்டுவன


இல்லை என்று சொல்லா நிலை வேண்டும்

எல்லை மீறா துணிவு வேண்டும்

வில்லை வளைக்காத வீரம் வேண்டும்

தொல்லை தாரா வசந்தம் வேண்டும்

சொல்லை மாற்றா மனம்வேண்டும்

கள்ளை நோக்கா திடம் வேண்டும்

கிள்ளை மொழி மாறா சொல் வேண்டும்

பிள்ளை குணம் குறையா வாழ்வு வேண்டும்

கொள்ளை போகா செல்வம் வேண்டும்

கள்ளம் கொள்ளா தருணம் வேண்டும்

பள்ளம் இல்லா பயணம் வேண்டும்

உள்ளம் கோணா முதுமை வேண்டும்

Monday, January 23, 2023

கார் மேகங்கள் by Vidhya Nivash

 


மழையை கொட்டி தீர்க்க காத்திருக்கும் கார் மேகங்கள்

வா தோழியே உன்னில் குளித்து விளையாடி துளிர் விட புன்னகையால் வரவேற்கும் பூக்கள்

மேக கூட்டங்களுக்கும் மரக்கூட்டங்களுக்கும் இடையே கம்பி வேலியாக மின் கம்பிகளை பிடித்து நிற்கும் மின் கம்பங்கள்..அடிக்கும் மழையில் வீழ்வோமோ என்ற அச்சத்தில்..

உன்னில் நான் என்னில் நீ என்று மண்வாசனையும் டீக்கடை பஜ்ஜி வாசனையும் மூக்கை துளைக்க கூடவே தேநீரும் சமோசாவும் ஆளை இழுக்க ..இரு விழி உன்னை காண காத்திருக்க..

குளிரால் உடல் வாட்ட 

பறவைகள் கூட்டில் அடைய

மயில் ஆட,குயில் கூவ 

மடை திறந்த வெள்ளமாக மழையை கொட்டித்தீர்த்தது கார்மேகங்கள்..

Saturday, January 21, 2023

மாலை மயக்கம் by Vidhya Nivash

 

எத்தனை அழகு மெய்மறந்து போனேன். இதற்குப் பெயர் தான் மயக்கம் செய்வதோ!இயற்கையை அன்னை வரைந்த வண்ண ஓவியத்தை கண்டு மெய்மறந்து போனேன்... பிசிர் தட்டாமல் வரைந்த ஓவியத்தை பார்த்து மெய் சிலிர்த்தது .

 அப்படியே அள்ளி எடுத்து சேலையாக கட்டிக் கொள்ளவா??போர்வையாக போர்த்திக்கொண்டு முகர்ந்து பார்க்க வா???

 ஜில்லென்ற காற்றை மறந்து போனேன்!
 சுற்றி இருக்கும் அத்தனையும் நின்று போனது போல் இருந்தது..
 உன்னை பார்த்த மாத்திரத்தில் என்னை இழந்தேன் உன் வசம்... 
 எத்தனை அழகு அதிலே மணல்மேடுகள் அழகு சேர்க்க....
 போட்டிக்குப் பக்கத்திலே இருந்த மனிதனின் கைவண்ணத்தையும் மறந்து போனேன்... சூரியன் மறைய மறைய நீல வானம் செவ்வானமாக மாறி கடைசியில் இருளை தழுவும் போதே...
 மனிதனின் கைவண்ணத்தில் செய்த மின் விளக்குகள் மின்ன உன்னை மறைத்துக் கொண்டாய் இருளில்....
 மீண்டும் வருவாய் நீ மறுநாள்!
 எனக்கு எப்பொழுது காட்சி தருவாய் என்று காத்திருக்கிறேன்....
 எனக்கு எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் உன்னை காணும் காட்சி என்று காத்திருக்கிறேன்...

தேவையில்லை by Veena Shankar

 


தேவையில்லை


காவியம் படைக்க முகம் தேவையில்லை

மதி மயங்க அழகு தேவையில்லை

மன இருளை நீக்க

மதி தேவையில்லை 

புற மருளை விலக்க அறிமுகம் தேவையில்லை

மனக்கருத்தை சொல்ல மேடை தேவையில்லை

தன்மானத்தை காக்க தவிப்பு தேவையில்லை

காதலை ரசிக்க லஞ்சம் தேவையில்லை

ஆற்றலை பாராட்ட பொருள் தேவையில்லை

ஆறுதல் அடைய

அகந்தை தேவையில்லை

நாம் அன்பால் இணைய மனகசப்பு தேவையில்லை

Friday, January 20, 2023

நாணமும் நத்தையும் by Vidhya Nivash

 



எத்தகைய அழகான படைப்பு

கைமுறுக்கு போல் சின்ன அறையை முதுக்கில் சுமக்க

சமயத்தில் உள்ளே சுருள யார் கற்றுத்தர நீ சுமந்து செல்கிறாய் நித்தம்

மலர் மொட்டியிருந்து அரும்பு வெடிக்க எட்டிப்பார்ப்பது போல்

ஓட்டிலிருந்து உன் தலையை எட்டிப்பார்க்க

நாணத்தில் தலைவி தலைவனை எட்டிப்பார்த்தது போல் சொக்கினோம் உன் அழகில் 

பல நேரம் கல், மண்,மரமுடன் உன்னுடைய ஓடும் ஒன்றாக ஒட்டிக்கொள்ள என்ன மாயம் செய்து கண்ணிலிருந்து மறைவாயோ.. 

நத்தை ஊர்ந்து வருவது போல்

மங்கை ஊர்ந்து வர

இனிப்புக்கு ஊரும் எறும்பு போல் 

இளவட்டங்கள் ஊர்ந்து வர

பின்னே ஊர்ந்து வந்தது ரயில் வண்டி




கல்லும் உயிரும் by Vidhya Nivash

 


ஒரு நாள் பெய்த மழையில் முளைத்த செடியல்ல நான்

கேள் தவளையே 

கல் தரையில் இடுக்கில் தங்கிய சிறு மண்ணில்

என் தோழி மழை துளிர்த்த நீரை குடித்து

மெல்ல வேர் ஊன்றி

தளிர்த்த நம்பிக்கை நாங்கள்

ஆங்காங்கே என் தோழிகளும் படர்ந்துள்ளனர்

நீ என்வென்றால் மழைக்கு ஒதுங்கி 

மழைக்கு முன் பின் குரலெழுப்பி 

தத்தி தத்தி தாவி தாவி வருகிறாயா 

தனிமைக்கு காரணம் by Veena Shankar

 


 தனிமைக்கு காரணம் சோகமா?

சோகத்தின் விளைவாய் தனிமையா?

காரணம் என்பதே காரணமா சோகத்திற்கும் தனிமைக்கும்

நாளைக்கு என்ன சமைப்பது? என்பதே இல்லத்தரசியின் தனிமை சிந்தனை

தினம் தினம் குடித்து வரும் கணவனிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டா அவன் கால்கள் எங்கே போகும்? இந்த முயற்சிக்கு பலரையும் கூட்டணி சேர்க்க வேண்டுமே?

புடவை கட்டினால் அழகாய் இருப்பேன் என்று சொன்னான். புடவை அணிந்தேன்

மஞ்சள் நிறம் பிடிக்கும் என்றான் நானும் மஞ்சள் நிறத்திற்கு மாறினேன்

இங்கேயே அமர்ந்திரு வருகிறேன் என்றான்

அமர்ந்து காத்திருக்கிறேன்

ஆனாலும் அவன் வரவேயில்லை சிரித்து பார்த்தேன் சிந்தித்தும் பார்த்தேன் 

அவன் சொல்லியிருந்தது போல் என் மேல் எந்த சாமியின் சக்தியும் வரவில்லை

ஒட்டிப்பிறந்த முகங்கள் by Veena Shankar

 


ஒட்டி பிறந்த முகங்கள்? ஓவியனின் கைகளில் பிறந்த பிரிந்த தூரிகையின் கலைவண்ணம்


இரு காவியங்களிலும் இணைந்த நாயகன் அனுமன்

Thursday, January 19, 2023

மௌன ராகம் by Vidhya Nivash

 


பூக்களின் நடுவே சத்தம்...

நீயும் இல்லை நானும் இல்லை

வண்ணத்துப்பூச்சி யாரை முத்தமிட போகிறதோ..

நன்றாக தென்றலில் ஆடி விளையாடு இன்னும் கொஞ்ச நேரத்தில் யார் யார் எங்கு இருப்பமோ தெரியாது..

யார் எங்கு போனாலும் எனக்கு வாய்ப்பே இல்லை..

மூலையிலிருந்து ஒரு கூக்குரல்

முந்தி கொண்டு என்னை எடுங்க 

அழகான விரல்கள் அள்ளி எடுத்து தொடுக்க

மாலையானது..

சில சட்டம் போட்ட படித்தின் மேல் ஆடாமல் அசையாமல் 

சில கூந்தலில் பலர் காண உலா வர கடைசியில் தலையணையில் நசுங்கி போக

சில சிலைகளின் மேல்..

பல பல பயணங்கள் ஒரு நாள் பிறகு மண்ணில்...

பல பரிணாமங்கள் எடுத்தாலும் வந்த இடமும் போகும் இடமும் எம் கையில் இல்லை..

நடு கூடத்திருந்து ஒரு விசும்பல் ஒரே இடத்தில் கைதி போல் சில சமயம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும்  அதே சிறையில் அலங்கார பூக்கள் நாங்கள் ...


மீண்டும் காதல் by Veena Shankar

 


மீண்டும் காதல்


                                          வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த கிரி, ஒரு வாரம் ஆகியும் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போகாததால் அவன் அம்மா அவனை நச்சரிக்க, ஒரு வழியாக தன் மனைவி அலமேலுவோடு கோயிலுக்கு வந்தான். அது பெரிய கோவில் என்பதால் ஒவ்வொரு சன்னிதியாய் கும்பிட்டு கொண்டிருந்த போது கோயிலின் மறுபுற வாசல் வழியாக சுலேகா எதிர் வர, முதலில் சுலேகா கிரியை பார்த்து சிரிக்க, பதிலுக்கு “யார் இவள்?” என்பது போல் புன்னகை மட்டும் பூத்தான் கிரி. அவன் கண்களின் கேள்விக்கு சுலேகாவே. “ஹலோ கிரி! என்ன? எப்படி இருக்கீங்க? என்னை ஞாபகம் இல்லையா?” என கேட்க எந்த பக்கம் தலை ஆட்டுவது என்று தெரியாமல் விழித்து நின்றான் கிரி. அவன் மனைவி அலமேலுவும் இவள் யார் தன் கணவன் பெயரை சொல்லி உரிமையாய் கூப்பிடுகிறாளே? என சுலேகாவை பார்த்து சிரிக்க மறுத்தாள்.


                                             “ நான் தான் சுலேகா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம மீட் பண்ணி இருக்கிறோம்.” என்று சுலேகா சொல்லவும் “ஆமாம் ஆமாம். ஞாபகம் வந்துவிட்டது. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டு சமாளித்தான் கிரி. “ நான் நல்லா இருக்கேன். இது யாரு உங்க மிஸஸ் ஆ?” என்று கேட்ட சுலேகாவிற்கு “ஆமாம். இது என் வைஃப் அலமேலு.” என்றான். ஆனால் அலமேலு, சுலேகாவை முறைத்து பார்த்தாள். பேச்சை சுருக்கமாய் முடித்துக் கொண்டு “ஓகே. பாய். “ என்று சொல்லி தத்தம் வழிகளில் சென்றனர் இருவரும்.


                                   “ யாருங்க அது? உங்களை பெயர் சொல்லி கூப்பிடுவது?” என்று அலமேலு கேட்டும் அதை காதில் வாங்காமல் அடுத்த சன்னதிக்கு சென்றவன் சுலேகாவா இவள்? ஆளே மாறிவிட்டாளே? எவ்வளவு அழகு? வடித்து வைத்த சிற்பம் போல் மாறிவிட்டாளே? நுனி நாக்கு ஆங்கிலம் தாண்டவம் ஆடுகிறது. அவளை பார்த்ததில் எந்த ஊரில் அவள் இருக்கிறாள் என்பதை கேட்க மறந்து விட்டோமே என்று அவளைப் பார்த்த மயக்கத்தில் கிரி இருக்க, “இந்தாங்க! பிரசாதம் வாங்கிக்கங்க.” என்று ஐயர் பிரசாதத்தை கொடுக்க, தன் நிலை மறந்தவன் உயிர் பெற்றான். அவன் முன் கடுப்பான முகத்தோடு அலமேலு நின்றிருப்பதை உணர்ந்தான். “ என்ன அந்த பொண்ண பார்த்ததிலிருந்து இப்படி ஸ்தம்பித்து போய் நிக்கிறீங்க? யார் அவள்? ‘ என்று அலமேலு மறுபடியும் கேட்க, “அப்புறம் சொல்றேன்” என்று சொல்லி கிரி மௌனம் காத்தான். குற்ற உணர்ச்சி மேலோங்கி நின்றது அவன் மனதில். வீட்டிற்கு திரும்பும் வரை அலமேலுவிடம் பேசாமலேயே வந்தான். 


                                      சுலேகாவும் கிரியும் ஒரே தெருவில் குடியிருந்தாலும் அவனுடைய அத்தையின் மூலமாகத்தான் சுலேகாவை கிரிக்கே தெரியும். “அந்த பொண்ணு எவ்வளவு சுறுசுறுப்பு தெரியுமா? அவளுக்கு தெரியாத விஷயங்களே இல்லை என நினைக்கிறேன். .எந்த சந்தேகமானாலும் அக்கம் பக்கத்தினர் அவள் கிட்ட தான் போய் கேக்குறாங்க. தையல் பழகி இருக்கா. ஆரி, கம்ப்யூட்டரும் தெரியும். கதை, கவிதை எழுதுவா என சுலேகாவின் அருமை பெருமைகளை சொல்லி கிரியின் மனதில் ஆசையை உண்டாக்கினாள். கிரிக்கு சுலேகா பொருத்தமானவள் தான் என்று தன் அண்ணியிடம் சொல்லி அவளை பெண் பார்க்க சொன்னாள். பல கனவுகளோடு சென்ற கிரிக்கு அவளுடைய தோற்றம் ஏமாற்றம் அளிக்க, அவளிடமே நேருக்கு நேர் அவளுடைய தோற்றத்தைப் பற்றி விமர்சிக்க, சுலேகாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு பதில் ஏதும் பேசாமல் அழுதபடியே தன்னுடைய அறைக்கு போனதுதான் கிரி அவளை கடைசியாக பார்த்தது. அதற்குப் பிறகு கிரி அலமேலுவை கை பிடிக்க, அவனுக்கு அமெரிக்காவில் வேலையும் அமைய, தன் மனைவியோடு அங்கே சென்று விட்டான். ஒன்றரை வருடம் கழித்து தான் தற்போது தனது தாயைப் பார்க்க வந்திருக்கிறான். இதெல்லாம் குறும்படமாக அவன் மனதில் ஓடியது.


                                  வீட்டிற்குள் வந்ததும் நேரே தன் அறைக்கு செல்ல, அலமேலு பிரசாதத்தை தன் மாமியாரிடம் கொடுக்க, “ எங்கே கிரியை காணோம்? ஏதாவது வேலை இருக்குன்னு உன்னை தனியா விட்டுட்டு போயிட்டானா?” என கேட்க, “ இல்லையத்தை வந்தவுடன் ரூமுக்கு போய்விட்டார்” என அலமேலு சொல்ல, “ என்ன ஆச்சு? போகும்போது நல்லாத்தானே போனீங்க? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?” என அவர்களை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அம்மா கேட்க, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. கோயில்ல ஒரு பொண்ண பார்த்த பிறகு தான் இப்படி?” என்று அலமேலு சொல்ல, தன் புருவத்தை சற்று உயர்த்தினாள் கிரியின் அம்மா. ஏதோ விஷயம் இருக்கும் போல என நினைத்து சென்று விட்டாள் அலமேலு. சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த கிரியின் அம்மா, கிரியிடம் போய் விசாரித்தாள். “என்னடா? யாரைப் பார்த்த? என்று கேட்க “சுலேகாமா” என்றான். “ சரி! அதுக்கு என்ன இப்ப? அதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. நீ தான் அவளை பிடிக்கலைன்னு சொல்லிட்டு நம்ம அலமேலுவை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அப்புறம் என்ன?” என அதிகாரத்தோடு கேட்க, “அன்று நான் பார்த்த சுலேகா இல்லைமா அவ. தேகத்தில் மெலிந்து, மிக உயரமாய், களை இல்லாத முகமும் சற்று எடுப்பான பற்கள் என இருந்தவள், இப்போ எப்படிமா ரெண்டு வருஷத்துல இவ்வளவு அழகா மாறிட்டா?” என தன் சந்தேகத்தை கேட்டான் கிரி. 


                                      சுலேகாவின் வசீகரத்தில் மயங்கிய கிரியை, “அன்னைக்கே சொன்னேன். இந்தப் பெண் அழகாக இருக்கிறாள். உனக்கு ஏற்றவள் தான் என்று. நான் சொல்லியபோதும் அவளை பற்றி அவளிடமே நேருக்கு நேர் சொல்லி அவளை அவமானப்படுத்திட்ட.” என்று நறுக்கு என்று கேட்டாள். தலைகுனிந்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து “அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று கேட்க, “ நீ அப்படி சொன்னதும் மனம் உடைந்து போய் இருந்தவளை ஒரு நாள் நான் கடையில் பார்த்தேன். அப்போது கூட புன்னகை மாறாமல் என்னிடம் பேசியவளுக்கு உன் சார்பாக நான் மன்னிப்பு கேட்டேன். வேறு நல்ல வரன் அவளுக்கு அமையும் என வாழ்த்தும் சொன்னேன். ஆனால் அதை பெருமிதமாக ஏற்றுக் கொண்ட அவள், கம்ப்யூட்டரில் பெரிய படிப்பு படித்து தற்போது பெங்களூரில் பெரிய வேலையில் இருக்கிறாள்.” என்றாள். “அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று மறுபடியும் அவளைப் பற்றி கிரி கேட்க, எரிச்சல் அடைந்தவள் “எத்தனையோ வரன் வந்தும் அதை மறுத்து தான் தனி ஆளாக இருக்கப் போவதாக சொல்லி இன்னும் கன்னியாகவே இருக்கிறாள்.” என்ற அம்மா சொன்னதும் “நான் தப்பு பண்ணிட்டேன் மா” என்று கதறி அழுதான் கிரி.    


                                             “ சின்ன வயசுலயிருந்து நீ எப்பவுமே இப்படித்தான். முதலில் வேண்டாம் என்று சொல்லுவ. அப்புறம் அதுவே வேணும்னு அடம் பிடிப்பே. சாதாரண விஷயமா இருந்தா கூட நான் சரின்னு சொல்லி இருப்பேன். ஆனால் இது உன்னுடைய வாழ்க்கை. உனக்கென்று ஒருத்தி வந்தாச்சு. இனிமே பழைய பேச்சோ, நினைவோ இருக்கக்கூடாது. அது குடும்பத்துக்கு நல்லது கிடையாது.” என்று அறிவுரை சொன்னாள் மிக கண்டிப்புடன்.


                                           அம்மா சொன்னது கிரியின் காதில் விழுந்தாலும் சுலேகாவின் மீது மீண்டும் காதல் அரும்ப, கிரியின் அம்மா அவன் அறையில் இருந்து வெளி வரவும் அலமேலு உள்ளே செல்ல, கண்களை துடைத்துக் கொண்டிருந்த கிரியை அதிக காதலுடன் அவனைப் பார்த்தாள் அலமேலு. மாமியார் கிரியிடம் சொன்னது அலமேலுவுக்கு கேட்டது. சுலேகாவை விட தன்னை கிரி கொண்டாட, தான் என்ன செய்ய வேண்டும் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினாள் அலமேலு.


                                         ஒன்றை மறக்க வேண்டுமெனில், இன்னொன்று அதைவிட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையுமா என்பது கேள்விக்குறி தான்.

Wednesday, January 18, 2023

காணும் காட்சி by Vidhya Nivash

 


காணும் காட்சி எல்லாம் அழகே

பிறர் காணும் காட்சியில் நம்மை காண நினைப்பது கொஞ்சம் சுயநலம்

காணும் காட்சியாகவே மாறா நினைப்பது இன்னும் அதிகம்

காணப்பவை பார்வைக்கு பார்வைக்கு வேறுபாடும்

காண்போர் பார்வையில் விட்டு விலகி நிற்பதே பொதுநலம்

பல நேரம் கண்ணை மூடி மனக்கண்ணில் பார்த்து ரசித்து செல்வது இன்னும் உத்தமம்

மேககூட்டத்தில் ஒளிந்து சிரிக்கும் சூரியன் போல்..


 

பறவையும் சிந்தனைகளும் by Veena Shankar

 


கடற் பயணத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் உங்களோடு என்றன காகைக் கூட்டங்கள்


கடல் எது? வானம் எது? தெரியாமல் விழித்து பறந்தன காகைகள்


நீர்பரப்பிலிருந்த பறவைகள் மேலேழுந்து சென்றன அறியாமையில் தங்களை விரட்ட யாரோ வருகிறார்கள் என்று நினைத்தும் படகின் துடுப்பு என்று தெரியாமலும்


செவ்வானம் வசப்பட்ட மகிழ்ச்சியில் காகைகளும் தங்களை பருந்தென நினைத்தன.


யாருக்கும் தெரியாமல் ஓடி போக நினைத்த காதலர்களுக்கு வழிகாட்டியாய் இந்த பறவைக் கூட்டங்கள்


யாருக்கும் தெரியாமல் ஓடி போக நினைத்த காதலர்களை வளைத்து ஊராரிடம் மாட்டிவிட எத்தனிக்கும் பறவைகள்


வானம் தரையில் வசப்பட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை அழகாக அனுபவிக்கவும் தங்களை முன்னேற்றி வளம் தேடும், புதுமையை நாடி அடைய துடிக்கும் காதலர்கள்


பூங்காவனம் தேவையில்லை

மங்காத ஒளி போதும்

எங்களை வாழ்விக்க

வங்கக்கடலில் பயணித்து

நீங்கா புகழ் கொள்ள

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஆசி வேண்டும்


பறக்கும் ஜோடிகளில் சிறந்த ஜோடிகள்  எவை

Monday, January 16, 2023

கன்றுக்குட்டி by Vidhya Nivash

 


பயமறியா கன்றுக்குட்டி

 அது துள்ளி வரும் போதே 

எங்கும் பரபரப்பு

யார் மேல் ஏறுமோ

எதில் துள்ளி குதிக்குமென்று தெரியாது

சிறுப்பிள்ளைகள் போலே கவனத்துடன் கையாளவில்லையேல் ஓரே கலவரம் தான்..

இவைகளே இவ்வாறு என்றால்..

சீறி வரும் காளைகள் எம்மாத்திரம் ..

நாட்டு காளைகள் போல் கம்பீரமான இளவட்டங்கள் எங்கே..

கன்றுக்குட்டி போல் பிள்ளைகளும் செய்வதறியாது துறுதுறுவென இங்கும் அங்கும் அலையும்..

நொடி பொழுதில் அழைக்கும் பலமுறை..



மாயவன் by Veena Shankar

 


மதுரத்தை தேடும் மாதுவும்

மாதுவின் மனதை திருடும் மாதவனும் அழகே


கண்ணை மறைத்தாலும் மாதவன் அகிலத்தை மறவாதவன்


சிவந்த கரங்களுக்கு நடுவே நீல வர்ணன்


காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.

என் விழியால் நீ காண் உலகத்தை


காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.

என் விழியால் நீ காண் உலகத்தை


காதலால் கண் மறையவில்லை

என் காதலியின் கரங்களால் மறைந்தது

அகிலத்தை அறிந்திலேன் என் காதலியின் காதல் முன்


கண்ணை மறைத்த பின்னும் 

காணும் காட்சி அழகு

என் காதலியின் கரங்களுக்கு ஊடே

அதனால் பிறந்த புன்னகையும் 

காதலியின் பொன்னகைக்கு ஈடாகுமோ?


மாயவன் கண்களுக்கு தணிக்கையில்லை

காணிக்கையாக்குகிறேன் என் கரங்களை

என் விழி கொண்டு என்னையே கண்காட்சியாய் காண

Sunday, January 15, 2023

பொங்கல் நினைவு by Veena Shankar



 பொங்கல் நினைவு


பொங்கல் என்றாலே என் நினைவுக்கு வருவது இரண்டு சம்பவங்கள். முதலாவதாக நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் தோழியர் அனைவரும் கல்லூரிக்கு விடுப்பு கொடுத்து திரைப்படத்திற்கு சென்றதும் இரண்டாவதாக இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு சென்னையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் காணும் பொங்கல் அன்று பக்கத்தில் உள்ள கிராம மக்கள் எல்லோரும் நகரத்தில் உள்ள சென்னை மெரினா கடற்கரையை வலம் வருவர். அப்படி வரும் பொழுது தாங்கள் கொண்டு வரும் அனைத்து விதமான உணவுகளை உண்டு களித்த பின்னர் கடற்கரையில் கிடைக்கும் பல விதமான நொறுக்கு தீனிகளையும் தின்று சிறியோர் முதல் பெரியோர்கள் வயிரை நிரப்பி கொண்டு பேருந்தில் பயணம் செய்வர். இப்படியாக இரவு பொழுதில் திரும்பி வரும் பொழுது தாங்கள் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி எடுத்துக் கொண்டே வருவர். இதை பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு விடும். இது பயணிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. இந்த இரண்டும் எவ்வளவு காலம் ஆனாலும் என் நினைவை விட்டு நீங்காது என்பது உண்மை.

Saturday, January 14, 2023

நினைவுகளும் பொங்கலும் by Vidhya Nivash



 பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது .... கிடைக்கும் வார விடுமுறையில் பழைய அண்டா,குண்டா,கதவு,ஜன்னல் தூசியை துடை.... தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளும்,இன்றும் மனதில் ஓடும் மறக்க முடியாத விளம்பரங்களும்,நான்கு நாள் விடுமுறை கடைசியாக காலையில் செய்த பொங்கல் மூன்று வேளையும் சாப்பிட்டு சில சமயம் மறுநாளும் அப்பா ... இது நகர்ப்புற பொங்கல் பல வருடங்கள் முன்... 


இப்போது வாரம் ஒரு முறை பொங்கல் ஹோட்டலில் கிடைப்பது போல் (பிடிக்காதவருக்கு தோசை)..எப்போதும் வழுக்கி விழுவதை போல் தரை,வீடு..


கிராமப்புற பொங்கல் இன்னும் வீடு வெள்ளை அடிப்பது முதல் பல பல...


சென்னையில் காணும் பொங்கலும் மெரீனாவும்...


சந்தையில் வண்ணம் தீட்டிய சட்டி வாங்கி

புதிதாக கதிரறுத்த நெல்லை வைத்து உப்பில்லா பச்சரிசி பொங்கி

தோட்டத்தில் விளைந்த பூசணி,பறங்கி,வாழை,மெச்சை வைத்து கறி சமைத்து..

வீட்டு பிள்ளை காளைக்குக்கு வர்ணம் தீட்டி...

காலம் தவறாமல் பெய்த மழையையும் ,கதிரவனையும் வணங்கி..வயிறார உணவளித்த உழவனை வணங்கி.... 

தித்திக்கும் கரும்பைப்போல் குடும்பத்துடன் இனிதாக கொண்டாட 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🙏 







Friday, January 13, 2023

பழையன கழிதல் by Vidhya Nivash

 பழையன கழிதலும் புதியன புகுதலும்..



தீப்பிரகாசமாக எரிய காய்ந்த நல்ல மரக்கட்டைகள் வேண்டும் புது கட்டை உதவாது..


அது மட்டும் போதுமா இல்லை..


தீ மூட்டுவது சுலபம் அன்று முதலில் பொறுமை வேண்டும்.


மரக்கட்டையில் தீப்பிடிக்க சரியான அனலும்,சூழ்நிலையும் ,தூண்டியும் வேண்டும் இல்லையேல் நெடுந்நேரம் எரியாது ஆரம்பித்த இடத்திலேயே அணைந்து விடும்..ஒரு முறை பற்றி கொண்டால் கடைசி துளி சாம்பலாகி காற்றில் கரையும் வரை துடிக்கும் இருளை விலக்கி பிரகாசிக்க...


நெருப்பை போல் பிரகாசிக்க ஆரோக்கியமான உடல்,மனம்,குடும்பம்,நண்பர்கள் நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு துரும்பும் அவசியம். 


 இதில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை.  


அனைவரின் விருப்பும் வெறுப்பும் நம்முடையது போல் எண்ணி செயல்பட்டாலே அனைத்தும் இனிதே...


நெருப்பை போல் ஒளி வீசி பழைய துயரை மறந்து பிறரை மகிழ்வித்து மகிழ இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏🙏



படமும் கவிதையும் by Veena Shankar

 மாடு மேய்க்கும் கண்ணா நீ மரத்தில் அமர்ந்தது ஏனோ?



கண்ணனின் வசதிக்காக 

மரம் வளைய

செடிகள் ஆசனமாக

பூக்கள் சாமரம் வீச

காட்சிகள் கட்டுக்குள் சிக்க

அந்த நொடி பொழுதில் பூமி சுற்றுவதை நிற்க கண்ணன் காணும் காட்சி தான் எது?

அதோ வருகிறாள் கண்ணனின் உள்ளம் கவர் காதலி தென்றலாக அவனை தீண்ட

காதலன் தான் காத்திருப்பான் காதலுக்காகவும் காதலிக்காகவும் என்பது நம் மதியால் எழுதப்பட்ட விதியோ?


எக்கால காதலனும் தோற்பான் நிஜத்தில் வருங்கால மனைவியின் வருகைக்காக

இடம், காலமும் ஒரு பொருட்டல்ல அவனுக்கு, காதலியின் அழகுக்கும் அன்புக்கும் முன்னால்

Thursday, January 12, 2023

சிதறிய எண்ணங்களை குவிக்கும் "கோப்பை" இந்த வாரப் படம் by Veena Shankar

 


 இரண்டும் மனப்பூர்வமாக அனுபவித்தாலும் சமயத்தில் ஆபத்தானது, எல்லை மீறும் போது

 மதுவும் மங்கையும் மயக்கினாலும் மனதுக்கு தற்காலிக சுகமேயன்றி வேறில்லை

ஒரு கோப்பையிலே இரு மங்கையர், விடை உன்னிடமே

 மனம் மயங்கியதோ தினம் மயங்கினேனோ, விடையில்லை என்னிடம்

நன்றி சொன்னேன் அறிமுகப்படுத்தியவனுக்கு , என்னை நான் மறக்க, வியக்க உதவியனுக்கு

கோப்பையின் மது மயக்கியதோ மங்கையின் அழகு மயக்கியதோ

இரண்டிலும் என் மனது மயங்கியது தான் உண்மை

 என்னதான் போதையிலும் பேதையிலும் மயங்கினாலும் திசை மாறா பறவை போல வீடு போய் சேர்வது புரியாத புதிர்

குடித்தவனுக்கு மனம் மங்கியதோ? தெரியாது வரைந்த படத்தை பார்த்ததும் பாராட்ட தோன்றியது ஓவியனின் கைவண்ணத்தை

முழு வட்ட வாழ்க்கையில் அரை வட்ட பானம் உள்ளே சென்றால் வெற்றி என்பது விட்டத்தை நோக்கி எட்டா கனியாகிவிடும்

சிதறிய எண்ணங்களை குவிக்கும் "கோப்பை" இந்த வாரப் படம் by Vidhya Nivash

 


சபாஷ் 

இதை தீட்டிய,படம் எடுத்த கலை ரசிகர்களுக்கு...

பழரசமும் புதியதாக இருந்தால் ஆரோக்கியமான பானம் பலரின் முகமகழ்ச்சியுடன் நடுக்கூடதில் வரவேற்பு ....

அதுவே புளித்து போனால் மதுபானம் பலரின் வெறுப்பு ,பலரின் ஆசையுடன் வரவேற்பு உள்ளூர..

எண்ணங்களும் புதியது இனியவை..

பல நாள் மக்கிய போன மனக்குமுறல் கசப்பு..

இரண்டும் கலந்த கலவையே மானுடம் எதை வளர்த்து வெல்வதே வாழ்க்கை சாகசம்

Wednesday, January 11, 2023

மஞ்சள் வானம் by Vidhya Nivash


 

பன்னீர் துளிப்போல் ஆரம்பித்த மழை மேளம் கொட்டுவது போல் கொட்டித் தீர்க்க..

எங்கும் இருள் சூழ ஆங்கங்கே பூச்சிகள் சினுங்க தவளையார் குரல் எழுப்ப ...

புது இடத்தில் உறங்கம் வராமல் குளிரில் உடல் நடுங்க ஆந்தை போல் விழிக்க..

ஒரு வழியாக உறங்க..

அற்புதம் தினமும் அரங்கேருகிறது சூரிய உதயம் அன்று இன்னும் சிறப்பாக...

ரம்மியமான காலை சாரலுடன் உதயமாகும் சூரியன்..

மஞ்சள் வானம் நீல வானை விலக்க ஆங்கங்கே வெள்ளை மேகக் கீரள்கள்..

இருள் விலக பகல் விடிய சூரியன் நடு வானில் சிரிக்க உதயமானது புத்தம்புது காலை...

கண்ணாடி பூக்கள் by Vidhya Nivash

 


பூப்பூப்பதை பார்த்திக்கிறோம்..

உப்பு பூத்துக்கிறதை கேள்வி பட்டிருக்கிறோம்..

நேரில் அழகு,கண்ணாடி பூக்கள் நிறைந்த பூமி

மேலே கடினமாக உள்ளே லேசாக கண்ணாடி போன்ற கூர்மையான உப்பு பூக்கள் ,கொஞ்சம் தவறினால் காயமே.

பார்ப்பதற்கு எத்தனை அழகு..

உப்பு படிந்த ஏரி..

பல நேரங்களில் உள்ளே லேசாக இருந்தாலும் வெளியே கடினமாகவே தோன்றும் பார்ப்போர் பார்வையில்..இதில் பழகினோருக்கும் புரியாததே புதிர்..

என் பார்வையில் எ‌ன்னுடைய ராஜா by Veena Shankar

 


என் பார்வையில் என்னுடைய ராஜா 



                             பிறந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் என்னால் கொண்டு வரப்பட்டான் அவன். சிறிய பெட்டியில் நான்கைந்து துணிகளை அடக்கி அதன் மேல் காகிதம் விரித்து அமர வைக்கப்பட்டதும் கத்தி கூப்பாடு போட்டு பின் நித்திரையில் அடங்கிப் போனான். சரியாக ஒரு மணி நேரம் கழித்து தன் பசியை தெரிவிக்க (குளுக்கோஸ்) ஆரஞ்சு மிட்டாய் விற்கும் டப்பாவின் மூடியை கழட்டி, அதில் ஒரு ரப்பர் நிப்பிளை மாட்டி அவனுக்கு பால் கொடுத்த ஞாபகம் என்னை விட்டு விலகவில்லை. இதற்கு முன் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் பில்லரும் இங்க் பில்லரும் கை கொடுக்காத காரணத்தினால் மேல் சொன்ன நடவடிக்கையை எடுத்தேன். இரவில் பசிக்கு குழந்தை போல அழுகை. எனக்கும் அவனுக்கும் என்ன பந்தம் என்று தெரியாமல் விழித்தேன்.  


                     தாய்ப்பால் இல்லாமல் உயிர் பிழைக்காது என்று சொன்னவர்களுக்கிடையே வளர்ந்தான் அவன். ஆனால் அவன் கழிவுகளை வெளியேற்றாத வரை (அதாவது இரண்டு நாட்கள்) நானும் கொஞ்சம் அச்சப்பட்டேன். கொஞ்ச நாட்களிலேயே வீட்டில் உள்ள அனைவரும் அவனுக்கு தாயாகி போனோம். முதன் முதலில் அட்டைப்பெட்டியில் இருந்து தரையில் வைத்த போது அட்டைப்பெட்டியில் எப்படி சுற்றி வந்தானோ அதேபோல செவ்வக வடிவமாய் அவன் நடந்து வந்தது பார்த்து அனைவரும் ரசித்து மகிழ்ந்தோம். பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பின் மெதுவாக அட்டைப்பெட்டியில் இருந்து தன் மண்டையை வெளியே நீட்டி வெளிவர துடித்து, விழுந்து, எழுந்து, ஓடி என பல அவன் சேஷ்டைகளை குடும்பமாய் ரசித்தோம்.


                               நாம் நடக்கும்போது நம் காலை பிடிப்பதும் துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் என்று அவன் சேஷ்டைகள் தொடர ஒருநாள் என் வேலை நிமித்தமாக அவன் மேல் ஒரு பிளாஸ்டிக் கூடையை கவிழ்த்து விட்டேன். அது ஒரு நாள் மட்டுமே பலித்தது. மறுநாள் அதனின்று அழகாக வெளியே வந்து தன் பலத்தை நிரூபித்தான். அவனும் கருப்பு, எங்கள் வீட்டு சோபாவும் கருப்பு என்பதால் அவன் அமர்ந்திருப்பது தெரியாமல் நானும் அவன் மீது அமர, சத்தம் போட்டு இறங்கி என்னை முறைத்தும், வீட்டு கதவை அடைக்கும் முன் அதன் இடையில் புகுந்து அடிபட்டுக் கொண்டதும் மாடிப்படியில் ஏறுவேன் என்ற பெயரில் பல்டி அடித்து விழுந்ததும் கண்முன் நிற்கும் காட்சிகள்.


                                     சலவை இயந்திரத்தில் உள்ள துணியை மொட்டை மாடியில் நான் காயவைப்பது வழக்கம். எனவே அவனும் இயந்திரத்தின் சப்தம் நிற்கும் முன்னே முதல் படியில் எனக்காக காத்திருப்பான். யார் அவன்? ஒரு பூனைகுட்டிக்கு இவ்வளவு அறிவா? என்று ஆச்சரியப்பட்டும் உள்ளேன்.


                                      நான் தைத்துக் கொண்டிருக்கும் சமயம் என் காலை பிடிப்பதும் தையல் இயந்திரத்தின் நாடாவை பிடித்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவதும் அவன் சேஷ்டைகளில் அடக்கம். உல்லன் நூல்களையும் கரடி பொம்மைகளையும் வாயில் கவ்வி கொண்டு போகும் அழகும், நாங்கள் அந்த பொம்மையை பிடித்து இழுக்க, அவன் பல்லின் முனைப்பகுதி சிறிது உடைந்ததும் பரிதாபத்துக்குரியது. 


                             புரட்டாசி மாத பெருமாள் கோயிலின் பொங்கலும் நம் வீட்டு பாலும் அவனுக்கு மிகவும் பிடித்தவை. ஒரு நாள் தெரியாத்தனமாக ஒரு சுண்டெலி அவன் கையில் சிக்கிக் கொள்ள வீட்டிற்குள்ளே கொண்டு வந்ததால் நான் அவனை விரட்ட, நான் சுண்டலியை பிடுங்கி சாப்பிடுவேன் என்று நினைத்தானோ என்னவோ? என்னை பார்வையாலும் குரலாலும் மிரட்ட ஒரே ரணகளம் தான். 


                                அன்று ஒரு நாள் திக்கு தெரியாத காட்டில் என் பூனை காணாமல் போனது வருத்தம். எத்தனையோ பூனைகளை வளர்த்தாலும் என்னால் மறக்க முடியாத அவன் தான் என் ராஜா.

Monday, January 9, 2023

கனவு by Vidhya Nivash


 எழுத்தின் மூலம் கனவில் வசப்பட்ட மனது

நிஜத்தை கண்ட நாள்..கனவு மெய்ப்பட்ட நாள்.

எஸ்.ராமகிருஷ்ணன்,சுதா மூர்த்தி போன்ற பலரின் சமூக சிந்தனைகளை எழுத்தின் மூலம் அவர் கண்ட எதார்த்தமான நிஜம் என்னை அறியாமல் என்னுள் குடிக்கொண்டது.கதையின் மூலமாக பலரிடம் பேசினேன்.இன்று முதல் முறையாக பால் முகம் மாற அறும்புகளிடம் கதையை சொன்ன அனுபவம் அளப்பரியது..

கனவு ஒரு நாள் கதவை தட்டும் விடாமுயற்சி ஒன்று போதும்..அதற்கான பாதை நம்மை அழைத்து செல்லும் அதற்கு தடையே இல்லை...கனவு மெய்ப்பட துணை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..நன்றி.

களப்பணியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

குறும்பன் by Vidhya Nivash

 


என்ன அழகு

தினமும் ஒய்யாரமாக படுத்திருப்பான்

ஒவ்வொரு நாளும் வித விதமாக பல கோனலில்

அவன் படுத்திருப்பதோ கால் மிதியடி

ஆனால் அவனுக்கோ அது பட்டுமெத்தை 

பார்ப்பவர் உள்ளம் கவரும் கள்வன்

இல்லை இல்லை குறும்பன்

பல நேரம் வயதை மறந்து சிறு பிள்ளையாக வாழும் நொடிப்பொழுது 

சுகமே!

தினமும் இவனை கடக்கும் போது எனோ மனம் இலேசாகுது...

 

அவசியம் by Veena Shankar

 


அவசியம்


                                             “அம்மா! இன்னைக்கு தான் பீஸ் கட்ட கடைசி தேதி” என ரவி சொல்ல, “ என்னடா! இப்ப வந்து சொல்லறே? எங்கிட்ட அவ்வளவு காசு இருக்காதே?” என்று தன் மகனிடம் சொன்னாள் முனியம்மாள். “அன்னைக்கு உன்கிட்ட நான் சொன்னேன்மா. இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல அதுக்குள்ள உனக்கு அந்த பணத்தை தருகிறேன்னு நீ தானே சொன்னே?” என்றான் ரவி. பதிலுக்கு “ஆமாண்டா! இருக்கிற வேலையில அதை மறந்து தொலைத்துவிட்டேன். வேலை செய்ற வீட்டு முதலாளிக்கு உடம்பு சரியில்ல. அதனால அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கு. நீ நேற்று சொல்லி இருந்தாலாவது கொஞ்சம் அவங்ககிட்ட முன் பணம் வாங்கிட்டு வந்திருப்பேன்.” என்று சொன்னாள் முனியம்மா. “அந்த இன்ஸ்டிட்யூட்ல வேற போன் பண்ணி பீஸ் கேட்டுகிட்டே இருக்காங்க. அடுத்த வாரம் புதுசா ஆரம்பிக்கிற கிளாஸ்ல என்னை சேர்த்துக்கிறதா சொன்னாங்க. சரி! பரவாயில்லை. அடுத்த கிளாஸ்ல நான் சேர்ந்துகிறேன். இன்னும் ஆறு மாசம் தானே” என்று அம்மாவை சமாதானப்படுத்தினான் ரவி.


                                   அவன் அப்படி சொன்னதும் முனியம்மாவிற்கு ஏதோ போலாகி விட்டது. தன் கணவன் குடிக்காமல் உயிரோடு இருந்தாலாவது அவளுடைய தாலிக்கொடி மிஞ்சியிருக்கும். படுபாவி! அவன் அற்ப ஆயுசுள இறந்து போய் விட்டதால அவனுக்கு காரியம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்குற அந்த தாலிக் கொடியும் விற்று விட்டாள் முனியம்மா. கோயிலில் சுவாமிக்கு முன் வரம் கேட்கும் பக்தர்கள் போல தன் மகன் தன் எதிரே நிற்பதை பார்த்து கண்ணீர் வடித்தாள். ஒரு யோசனை தோன்ற பக்கத்து வீட்டில் இருக்கும் நிர்மலாவை கேட்டுப் பார்ப்போம் என்று வெளியே சென்றாள். நிர்மலா வீடு பூட்டி இருந்ததால் வெறும் கையோடு திரும்பியவள், ரவியை அழைத்து தன் அலமாரியில் உள்ள டப்பாக்களை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்து, பத்து, ஐம்பது என சேர்த்து வைத்திருந்த புதிய ரூபாய் நோட்டுக்களை ரவியிடம் கொடுத்து கணக்கு பார்க்க சொன்னாள். அப்படி இப்படி என ஒன்பதாயிரம் ரூபாய் சேர ஆயிரம் ரூபாய்க்கு விடை தெரியாமல் விழித்தாள்.


                                  முனியம்மாவுக்கு தாய் வீட்டு சீதனமாக அவள் கல்யாணத்தில் கொடுத்த ஒரு வெண்கலப் பானை இருப்பது நினைவுக்கு வர அதை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தாள். தன் தாயின் நினைவாக கணவனின் குடிப்பழக்கத்திற்கு பயந்து, மறைத்து வைத்திருந்தாள். அந்த பானையை தற்போது விற்க எண்ணி அடகு கடையை நோக்கி சென்றாள். அங்கேயும் அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடைசியாக யோசித்தவள், தான் வேலை செய்ற வீட்டில் தனக்கு கிடைத்த ஒரு பட்டு புடவையை, முன்பு ஒரு நாள் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் லதாவிடம் காண்பிக்க, அது அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் இருந்ததால் தனக்கு கொடுக்கும்படி கேட்க, பதிலுக்கு காசு கொடுப்பதாக சொல்லி இருந்தாள். ஆனால் அந்த புடவை இவளுக்கும் பிடித்திருக்க அப்போது கொடுக்க மறுத்த முனியம்மாள், அந்த புடவையை தற்போது லதாவுக்கு விற்க முடிவு செய்தாள். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ரவியின் வங்கி கணக்கில் சேர்ப்பித்து அதை அந்த இன்ஸ்டிட்யூட்டுக்கு கட்டினாள்.  


                                                 காசு இல்லை என்று சொன்னாலும் தன் அம்மா தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் பிரட்டியது நினைத்து பெருமிதப்பட்டான் ரவி. அப்பா இல்லை என்ற குறையை அம்மா தீர்த்ததாக நினைத்தான். இதை நினைக்க நினைக்க ரவியின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. அதை கவனித்த அம்மா முனியம்மாள்,” தம்பி! அழாதே! நான் பணம் இல்லாததால் உயர் படிப்பு படிக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் இந்த தைரியம் எனக்கு வரவில்லை. இப்போது இருப்பது போல வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் வசதியும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் நானும் இன்று பெரிய பதவியில் அமர்ந்திருப்பேன். பணம் இல்லை என்ற காரணத்திற்காக உன் படிப்பு என்றும் நிற்கக் கூடாது. எப்போதும் ஒவ்வொரு டப்பாவிலும் சிறிது சிறிதாக பணம் போட்டு இருந்தேன். அவசர காலத்தில் அது உதவியாக இருக்கும்.” என்று சொன்னாள் .


                                     “ நீங்க மட்டும் இவ்வளவு கஷ்டப்படுறீங்க! நானும் வேலை பார்த்துக்கிட்டே படிக்கிறேன்னு சொன்னபோது ஏன் வேண்டாம் என மறுத்துட்டீங்க? “ என்று ரவி கேட்க, “ வேலைக்கு போனா காசு கிடைக்கும். கையில காசு பார்த்ததும் இப்போ இருக்கிற பிள்ளைங்களுக்கு சம்பாதிக்கணும்னு தோணுமே தவிர படிக்கணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால தான் உன்கிட்டே நானும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன்.” என்று பதில் தந்தாள் முனியம்மாள். 


                              மேலும் அவனிடம் “அவசரத்திற்கு கிடைக்காத பணமாக இருந்தாலும் அதன் அவசியத்தை அலட்சியம் செய்யக்கூடாது.” என்றும் சொன்னாள் முனியம்மாள்.


                            பிற்கால அவசர பணத் தேவைக்கு சேமிப்பு அவசியம்.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...