அம்மாவின் தியாகம்
முதுமையின் காரணமாக வசுமதியின் சித்தி இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது . வசுமதி பிறந்த ஒரு வருடத்திலேயே அவள் அம்மா இறந்துவிட , அவளை வளர்க்க வேண்டி உறவினர்கள் வள்ளியை இரண்டாவதாக அவள் அப்பாவிற்கு மணமுடித்து வைத்தனர். வசுமதியின் அம்மா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த அவள் தந்தைக்கு மறுமணத்தில் விருப்பமில்லை என்றாலும் உறவினர்களுக்கும் ஊராருக்கும் மட்டுமே சித்தி வள்ளியை திருமணம் செய்து கொண்டார். சித்தி வள்ளியும் வசுமதிக்கு தேவையானதை தாயின் இடத்திலிருந்து செய்ய ஒரு நாளும் தவறியதில்லை. ஆனால் வசுமதியோ சித்தியை தவிர்த்து வந்தாள். இதற்கு காரணம் சித்தியானவள் கொடுமைக்காரியாக இருப்பாள் என்பதை கேட்டு கேட்டு வளர்ந்தவள் வசுமதி. மேலும் வீட்டிற்கு வரும் உறவினர்களும் வள்ளி எப்படி பார்த்துக் கொள்கிறாள் என வசுமதியிடம் கேட்பதோடு , பெற்ற தாய் போல சித்தி வரமாட்டாள் என்பதயும் அவள் மனதில் விதைத்து விட்டனர் . இது காணாது அவளுடைய அப்பாவும் சித்தியை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருந்ததால் ஏனோ வசுமதிக்கும் சித்தியின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வசுமதியின் அப்பா இறந்துவிட, குடியிருந்த வீடு சொந்தமென்பதாலும் அவருடைய பென்ஷன் பணத்தை வைத்து இருவரும் காலத்தை ஓட்டி வந்தனர் .
சித்தியின் காரியம் முடித்த கையோடு தான் தன் வீட்டிற்கு திரும்ப நினைத்தாள் வசுமதி . போட்டது போட்டபடியே வீடு இருக்க, அதை சுத்தம் செய்ய இன்னொரு நாள் ஒதுக்குவோம் என்று நினைத்து வீட்டை பூட்டிய போது சித்தியின் போட்டோ அவளை ஏக்கமாக பார்க்க, ஏதோ ஒரு பாசம் அவளை மறுபடியும் வீடிற்குள்ளே வர வைத்தது.
அப்பா இல்லாமல் சித்தியும் தானும் கழித்த கடந்த கால வாழ்க்கையும் அவள் கண்ணில் நடனமாட தற்போது வெற்றிடம் தான் குடி கொண்டிருந்தது அந்த வீட்டில் .
தான் தன் குழந்தை பருவத்தில் சாப்பிட மறுத்து அங்கிங்கு ஓடிய காலமும் அதற்கு அப்பாவிடம் சித்தி வாங்கிய திட்டும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. வீட்டுப்பாடத்தை எழுத வேண்டுமென்றே தாமதப்படுத்தியதும் சித்தியை அலை கழித்ததும் சித்தியின் அன்பும் பொறுமையும், தற்போது தான் பெற்ற பிள்ளையானலும் அதன் சேட்டைகளை சகித்துக் கொள்ள முடியாதவளாய் குழந்தையை அடித்த சம்பவமும் மாறி மாறி நிழல் ஆடியது வசுமதியின் மனதில். அவள் அப்பா நோயுற்ற காலத்தில் கூட சித்தியை ஆயாவாக தான் நடத்தியதை எண்ணி வருத்தம் அடைந்தாள் .
மீண்டும் மீண்டும் வீட்டை வெறித்து பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று மனதை சஞ்சலப்படுத்த, சமையலறையில் இருந்த ஒரு பெட்டி நினைவுக்கு வர, மெதுவாக அதை இறக்கி வைத்தாள்.
பலமுறை சித்தி அதை திறந்து பார்ப்பதும் ஆனால் வசுமதியை பார்க்க அனுமதிக்க மறுத்ததும் தான் அந்த வீட்டில் சித்தியின் அதிகபட்ச அதிகாரம். அன்று பார்க்க முடியாத பெட்டியை இன்று திறந்த பார்க்க வேண்டும் என்று நினைத்த வசுமதி, அதை திறந்து பார்த்ததும் சற்றே அதிர்ந்தாள் . ஆம். அதில் நூற்றுக்கணக்கான கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் பெட்டியை ஆக்கிரமித்திருந்தன.
ஒவ்வொன்றாக பிரித்துப் படிக்க நேரம் காணாதே என்று எண்ணிய வசுமதி கண்ணில் பட்ட டைரியை எடுத்து படித்தாள். அதில் தான் ஏழை வீட்டு பெண் என்பதால் தன் காதலை கைவிட்டு விட்டு வசுமதியின் அப்பாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் மணம் முடித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.
சித்தியை பலமுறை அப்பா " மலடி " என்று சொன்னாலும் தானும் பல நாட்கள் அவளை அப்படியே அழைத்தது எண்ணி இப்போது கண் கலங்கினாள் வசுமதி.
மேலும் தன் காதல் திருமணத்திற்கு அப்பா எதிர்ப்பு சொன்ன போதும் இவளுக்கு ஆதரவாக சித்தி அப்பாவிடம் பேசியது வசுமதிக்கு நினைவுக்கு வந்தது. கிடந்த கடிதங்களில் பல கடிதங்கள் ஒரே பெயரில் வந்ததை அடுத்து ஒரு கடிதத்தை படிக்க, அதில் திருமணமானாலும் தன் சித்தியை அவள் காதலன் ஏற்றுக் கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதத்திலேயே தன்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பதாகவும் சொல்லி காதலனுக்கு பதிலும் எழுதி, அதை சித்தி, பத்திரப்படுத்திருந்தது தற்போது வசுமதிக்கு தெரியவந்தது.
சித்தியின் பொறுப்பை எண்ணி அழுகை பீறிட, அந்நேரம் அவள் கணவன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது , தான் சித்தியோடு இருந்த நாட்களையும் அவள் தியாகத்தையும் அறியாமல் அவளை கொடுமைப்படுத்தியதையும் வார்த்தைகளால் நோகடித்ததையும் கணவனிடம் சொல்ல, மேலும் தங்கள் இருவரும் வாழ்ந்த வீட்டை விற்க வேண்டாம் என்றும் நாமே இங்கே குடி வந்துவிடலாம் என்று சொல்லி குமுறினாள் வசுமதி.
தியாகத்தின் அருமை அன்னையின் ஸ்தானத்தில் வரும்போதுதான் தெரியும் என்பதை உணர்ந்தாள் வசுமதி.
தியாகமும் உணரும்போது மட்டுமே வெளிப்படும்.

No comments:
Post a Comment