கூந்தல் ரகசியம்
அரவிந்தனும் அவன் பெற்றோரும் அவனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தனர். பெண் வீட்டில் கொடுத்த பஜ்ஜி, சொஜ்ஜிகளை எல்லாம் முழுங்கி விட்டு பெண்ணை காண்பிப்பார்களா இல்லையா என்ற சந்தேகத்தில் அமர்ந்திருந்த போது தரகர் பெண்ணை அழைத்து வரும்படி சொல்ல, பெண்ணும் வந்து நின்றாள். அவளிடம் தனியே பேசுவதற்காக காத்திருந்தான் அரவிந்த். அவன் பார்த்த பெண் சுமி, பேரழகியாக இருந்தாள் . ஒற்றை நெற்றி பொட்டு பேசியது அவள் மொத்த அழகையும். பிறை சந்திரனை போன்ற நெற்றி, சுண்டி விட்டால் ரத்தம் தெறித்து விடும் அளவிற்கு சிவந்த முகம், உயரத்துக்கு ஏற்ற எடை நடை, உடை உடுத்திய நேர்த்தி, பின்னழகை தொடும் அளவிற்கு திரண்ட கூந்தல் என்று எல்லா அம்சங்களும் அரவிந்துக்கு சுமியை மிகவும் பிடித்து போய்விட்டது. அவளிடம் கேட்ட கேள்விக்கு மற்றவர்கள் பதில் சொன்னதால் அரவிந்துக்கு ஓர் சந்தேகம் இருந்தது அவள் ஊமையாக இருப்பாளோ என்று நினைத்தான். அதனால் தான் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றான். அதற்கு சம்மதித்த இரு வீட்டு பெற்றோரும் தனி அறையில் பேசுமாறு சொன்னர்.
அவள் பேச, அவள் ஊமையல்ல என்பதை அரவிந்த் தெரிந்து கொண்டான். அவர்களின் பேச்சு பரிமாற்றத்தின் ஊடே சுமி, தான் ஒரு உண்மையை சொல்லப் போவதாக அரவிந்திடம் சொல்ல, என்ன உண்மையாக இருக்குமோ என்று மனதில் குழப்பத்துடன் அரவிந்த் இருந்தான். காதல் தோல்வியா? அல்லது காதலனை கை பிடிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாளா? என மனம் பதைபதைத்தது அரவிந்துக்கு. இருந்தாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டவன் சுமியை பார்த்து என்ன என்று கேட்பது போல் பார்க்க அவளும் தொடர்ந்தாள்.
தான் அழகு என்று பல பேர் சொன்னாலும் அந்த அழகோடு சேர்ந்தது தான் தன் கூந்தலும். ஆனால் தன்னுடைய கூந்தல் நிஜம் அல்ல என்றும் டைபாய்டு காய்ச்சல் வந்த போது கூந்தல் உதிர்ந்து விட்டது என்றும் எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் தன்னுடைய கூந்தலை வளர்க்கவே முடியவில்லை. அதனால் ஆங்காங்கே சொட்டை தோய்ந்த தலையுடன் திரிந்து மற்றவர்களுக்கு அருவெறுப்பாக தெரிந்திருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்த போது இதற்கான தீர்வாக ஹேர் பிளான்டேஷன் செய்யுமிடத்திற்கு சென்று பல ஆயிரங்கள் செலவழித்தும் ஏமாற்றம் தந்ததாகவும் இருந்த சொற்ப முடியையும் அங்கே இழந்ததால் வேறு வழியில்லாமல் செயற்கை கூந்தலை அணிந்து கொள்வதாகவும் அவள் கூந்தல் அழகில் மயங்கி அவளை பிடித்து இருக்கிறது என்று அரவிந்த் நினைத்தால் அவனுக்கு அது ஏமாற்றத்தை அளிக்குமே என்று நினைத்தே தான் அவனிடம் உண்மையை சொன்னதாகவும் இதுதான் என் கூந்தல் என்று அதை கழட்ட , சுமி வேண்டாம் . அது அப்படியே இருக்கட்டும் என்று மறுத்தான் அரவிந்த் அவளுடைய அழகை ரசித்தவாறு.
பெண் பார்க்கும் படலம் முடிந்து இரு வீட்டாரும் எதிரணியின் பதிலுக்காக காத்திருந்தனர்.
சுமி, தான் உண்மையை மாப்பிள்ளையிடம் சொன்னதாக அவள் பெற்றோரிடம் தெரிவிக்க மேலும் கீழும் குதித்தனர். "எத்தனை தடவை சொல்றது உன்கிட்ட? இதை சொல்ல வேண்டாம் என்று. இப்படி உண்மையை சொல்லி சொல்லியே உனக்கு திருமண சம்பந்தங்கள் கைவிட்டு போனது உனக்கு தெரியும் தானே? பிறகு ஏன் மறுபடியும் அப்படி செய்தாய்? " என்று அவளை வார்த்தையால் வறுத்து எடுத்தனர் பெற்றோர் .
"இந்த பிரச்சனைக்காக தானே நாம் திருச்சியை விட்டு சென்னைக்கு மாற்றல் ஆகி வந்தோம். அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் உனக்கு கூந்தல் இல்லை என்று முன்பே தெரிந்து விட்டதால் உன்னை பெண் பார்க்க யாரும் வரவே இல்லை . இன்றாவது உண்மையை மறைத்து பேசியிருக்கலாமே?" என்று சொல்ல, அதை அவள் காதில் வாங்கிகொண்டதாக தெரியவில்லை.
அரவிந்திற்கு எல்லா உண்மையும் தெரிந்தால் அதனை மீறி அவன் தன்னை விரும்பினால் மட்டுமே திருமணம் செய்வதாக சொன்னாள் சுமி. அந்நேரம் அலைபேசியின் மணி ஒலிக்க, அரவிந்தின் வீட்டாரிடம் இருந்து சுமியை திருமணம் செய்ய அரவிந்த் ஒப்புக்கொண்டதாக சொல்லவும் வானத்தில் பறப்பது போல சுமியும் உணர்ந்தாள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு இனிதே நடந்தேறியது.
ஏனோ ஒரு குற்ற உணர்ச்சி குடி கொண்டது அரவிந்தனின் மனதில். திருமண தினத்தன்று அவன் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். அதற்காக அவனுடைய பெற்றோர் எவ்வளவு முறை அவனை தேற்றி இருப்பார்கள் என்று தெரியாது.
முதல் இரவு அறையில் தம்பதியர் தனித்திருக்க, அந்த உண்மையை போட்டு உடைத்தான் அரவிந்த். தன்னுடைய விக்கினை கையில் எடுத்தபடியே சுமியை பார்க்க, ஒரு கணம் சுமியும் அதிர்ந்தாள். அவளுக்கு இருந்த தைரியம் தனக்கில்லை என்றும் தனக்கும் அவளை போலவே மோசாமான நிகழ்வு நடந்ததாகவும் தானும் தன் முடியை அதில் இழந்ததாகவும் தன் பெற்றோர் உண்மையை சொன்னால் உயிரை மாய்த்து கொள்வதாக சொன்னதால் உண்மையை மறுத்ததாகவும் அவளுக்கும் இதே நிலை என்பதை தன் பெற்றோரிடம் அவன் இன்று வரை கூறவில்லை என்று சொல்லி அவள் கையை பிடித்து மன்னிப்பு கேட்டான்.
தம்பதியர் இருவருக்கும் ஒரே நிலை என்பதால் அவர்களிடையே சச்சரவு வராமல் தடுக்கும் என்பதும் உண்மை தானே? சுமி தன்னை மிகுந்த அதிர்ஷடசாலியாக நினைத்தாள். திருமணத்திற்கு முன்பே அரவிந்த் தனக்கு உறுதுணையாக இருக்கிறானே என்று பெருமை கொண்டாள். பிறகு யாருக்கு கிடைக்கும் இவ்வாழ்வு?
மனபொருத்ததில் அமையும் திருமணத்தை விட சூழ்நிலையினால் அமைவதும் சிறப்போ?
கூந்தல்
நீண்ட கருங்கூந்தல் கொள்ள ஆசை தான், ஆனால் ஆங்கே என்னையறியாமல் குடி கொள்ளும் உயிர்களிடம் மட்டுமே வெறுப்பு
காணிக்கையாக கொடுத்தாலும் சிறப்பு தான் போட்டியில் தோல்வியை ஒப்புக்கொண்டு அளித்தாலும் சரி தான்
கூந்தல் வளர்ப்பில் மட்டுமே ஆண்கள் பெண்களிடம் முழு நேரம் வாதம்/ விவாதம் செய்யாமல் இருப்பதும் உண்மை தான்
அது இல்லோதோரின் தவிப்பிற்கு வடிகாலே செயற்கை கூந்தலும் செயற்கை கூந்தல் வளர்ப்பும்
பெண் பார்க்கும் நேரத்திலும் ஆணின் கண் தேடும் ஓர் இடம் கூந்தலே
தோற்றத்தின் முழுமையும் கூந்தலே அது அளவில் சிறிதானலும்
உனக்கு வர்ணம் பூசி அழகு பார்ப்பதும் நான் தானே வடிவமைப்பதும் நான் தானே
வெறுப்போரி டம் வளர்வதும் ஏங்குவோரிடம் சளைப்பதும் ஏனோ
இருந்தாலும் கஷ்டம் இல்லையென்றாலும் கஷ்டம்

No comments:
Post a Comment