Monday, May 29, 2023

மழையின் நினைவு by Veena Shankar



 மழையின் நினைவு


எனக்கு ஆறு குழந்தைகள். பள்ளிக்கூடம் விட்டு என் பிள்ளைகள் நான்கு மணிக்கு திரும்பி விட்டாலும் படிக்க உட்காருவது என்னவோ மாலை ஆறு மணிக்கு தான். பாரதியார் சொன்னது போல மாலையில் வந்ததும் விளையாடச் செல்லும் அவர்கள், அரை மணி நேர ஓய்வுக்கு பிறகு சுவாமி முன் அமர்ந்து பக்தி பாடல்கள் பாடிய பிறகு அன்றைய வீட்டு பாடத்தை எழுதவும் படிக்கவும் ஆரம்பிப்பார்கள்.


அன்றும் அப்படித்தான். . அந்த மாலை வேளையில் அவர்கள் பாடம் படிக்க உட்கார, மேகங்கள் திரண்டு, மின்னல் கண்களைப் பறிக்க, குளிர் காற்று வீச , மழைக்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட சரியாக ஏழு மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது.


இயற்கைக்கு என்றும் நாம் அடிமைதான். அதன் ஆக்ரோஷத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. அன்றைய மழை சாதாரண மழை அல்ல. பேய் மழை போல கொட்ட ஆரம்பித்தது. வீட்டிற்கு வெளியே நிற்பதும் வீட்டிற்குள்ளே இருப்பதும் ஒன்றாகவே இருந்தது . சாதாரண மழையன்றால் என் பிள்ளைகளை அடக்கி வைத்திருக்க முடியாது . மழையில் நனைவதும் ஆட்டம் போடுவதும் அவர்களுக்கும் எனக்கும் நிறைய பிடிக்கும். 


மழையை முதலில் பிள்ளைகள் ரசிக்க, கூடவே நானும் அதில் மயங்கினேன் என்பதுதான் உண்மை.


அந்த பேய் மழைக்கு கூரை வீடு மட்டுமல்ல காரைவிடும் ஆட்டம் கண்டது. மழை 

ஆரம்பிப்பதற்கு முன்னரே வீட்டிலிருந்து சில பல பாத்திரங்களை நான் அடுக்கி வைத்து காத்திருந்தேன் . மழை வந்ததும் வீட்டில் ஆங்காங்கே ஒழுகும் இடங்களில் அண்டாவையும் அதனைச் சுற்றி சின்ன பாத்திரங்களையும் வரிசையில் வைக்க வீட்டில் வேறுபட்ட ஓசைகள் ஒலித்து அங்கே ஜலதரங்க இசை அரங்கேறியது. வீடு புள்ளிகள் வைத்த கோலமாய் மாறியது. இது காணாதென்று வீட்டிற்கு வெளியே விழும் மழை தண்ணீரை சேமிக்கும் பொருட்டு ஒரு துண்டை மட்டும் தலையில் கட்டிக்கொண்டு குடங்களை அடுக்கி வைத்து தண்ணீர் பிடித்தவையும் மறக்க முடியாது .  


 அவ்வளவாக மின்சார வசதியில்லாததால் ஒற்றை மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி அதனை சுற்றி நாங்கள் அமர்ந்து, ரசித்து அவரவருக்கு தெரிந்த பாடல்களை பாடியும் அன்றைய மழையை கொண்டாடினோம் 


அப்படி அன்றைய மழையை ரசித்து கழித்த நினைவுகளை பாட்டி கோமதியம்மாள் தன் பேரப்பிள்ளைகளுடன் பகிர , "பாட்டி! நீங்க ஏன் பாட்டு பாடினீங்க? அலைபேசியில் பாட்டு போட்டு விட்டால் அது பாடி இருக்குமே?" என அறியாமல் ஒரு பேரப்பிள்ளை கேட்க, "அந்த காலத்தில் அது இல்லையேப்பா" என்று பதில் தந்தாள் பாட்டி. அவள் பதில் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு பேத்தி "மழை தண்ணீர் வீட்டில் விழாதபடி மேலே ஏதாவது போட்டு மூடி இருக்கலாமே அல்லது புது வீடு கட்டி இருக்கலாமே ?" என்று கேட்க, அதற்குள் அடுத்த பேரன்" பாட்டி! நீங்க யுபிஎஸ் போட்டால் வீட்டில் கரண்ட் போகாது. மெழுகுவர்த்தியும் வேண்டாமே! ஏன் நீங்கள் அதை செய்யவில்லை?" என்று கேட்க " அந்த காலத்தில் எங்களுக்கு தார்பாய் வாங்க கூட வசதி இல்லை. அதுவும் யுபிஎஸ் வசதி இல்லை . ஒரு சிறிய மஞ்சள் குண்டு விளக்கு மட்டுமே வீட்டில் எரியும் . மின்விசிறியும் கிடையாது." என்று சொல்லி பாட்டி தன் பேரப் பிள்ளைகளை அணைக்க. அன்றைய தினத்திற்குகான ஷூட்டிங் முடிந்ததாக இயக்குனர் சொல்ல, ஹே ! என்று குதூகுலத்துடன் ஓடிய பிள்ளைகள் தத்தம் அலைபேசியை எடுத்து விளையாட சென்றனர். பாட்டி மட்டும் தனிமரமாகவா நின்றாள்? அவளும் தன் அலைபேசி எடுத்து காதில் ஹெட்போன் மாட்டிகொண்டு பேஸ்புக்கில் நுழைந்தாள்.


மழையின் நினைவுகளை பற்றி அறியாத இக்கால குழந்தைகளுக்கு பாட்டி கோமதியம்மாள் சொல்லும் விதமாக கொண்டு செல்லப்பட்டது தொலைக்காட்சியின் "மழைத்துளி" நிகழ்ச்சி.


மழையின் நினைவுகள் மறாது. மறக்கவும் முடியாது

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...