திருவாளர்களின் நாள்
காலையிலிருந்தே சிடு சிடு என்றிருந்தாள் நந்தினி. காரணம் தெரியாமல் முழித்தேன். நான் எந்த கேள்வி கேட்டாலும் பதில் முறைப்பும், " டப்" என்றே சத்தமே பதிலானது. இருந்தாலும் என் காலை தேவை பூர்த்தியாக வேண்டி ஏதும் பேசவில்லை நான். அவளுடைய அவசரமும் புரிந்தது. வேலைக்கு போகவில்லை என்றாலும் காலை நேரம் பரபரப்பானது தானே? ஏதோ இனிப்பு செய்கிறாள் என்று அதன் நெய் மணம் உணர்த்தியது. சரி பலாப்பழம் பழுத்தால் தெரியத்தானே போகிறது என்ற இறுமாப்பில் இருந்தேன் நான். ஆனாலும் படபடப்பை அறிய ஆவல் கொண்டு மெதுவாக நெருங்கினேன் அவளை, காலை வேளையிலேயே பதில் ஏதானலும் பரவாயில்லை என்ற மனத்தோடு.
"என்ன இன்று விசேடம் " என்று கேட்டவுடன், "இன்னிக்கி கல்யாண நாள்" என்று பதில் வந்தது கொஞ்சம் புன்முறுவலோடு. அப்போதாவது சுதாரித்தேனா, "யாருக்கு" என்று நான் மீண்டும் கேட்க, "நந்தினிக்கு" என்று முறைப்போடு பதில் வந்தது. "இருக்காதே! அவளுக்கு காதலர் தினத்தன்று தானே கல்யாணம். நான் கூட அவள் கல்யாணத்திற்கு போயிருந்தேனே. ரொம்ப தடபுடலாக நடந்த கல்யாணமுன்னு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பேசிக்கிட்டாங்களே!" என்று நான் என் நினைவலைகளை வருட, நந்தினியின் கையிலிருந்த பாத்திரம் என் உடல் முழுவதுமாக வருடியது. "அப்போ நடந்த நந்தினியின் கல்யாணம் ஞாபகம் இருக்கு, ஐந்து வருடத்திற்கு முன் நடந்த கல்யாணம் நினைவில்லையா? யார் அந்த நந்தினி? " என்ற கோபத்தோடு அவள் கத்த, அந்த நந்தினி என் ஒண்ணு விட்ட அத்தை பெண் என்பதை நான் என் நந்தினிக்கு உணர்த்த பாடாதபாடு பட்டுவிட்டேன். "ஆமா. அவா கல்யாணம் நினைவிருக்கு , நம் கல்யாண நாள் நினைவில்லையாம்" என்று என் மோவாயில் குத்தினாள் என் நந்தினி.
போன மாதம் இரண்டு பட்டு புடவைகள் திருமண நாளுக்காக நல்லியில் வாங்கியது இப்போது ஞாபகம் வந்து தொலைந்தது. மீண்டும் நந்தினியை இல்லை இல்லை என் செல்லத்தை நெருங்கினேன், என் திருமண நாளை அன்றைய காப்பியோடு ஆரம்பித்து கொண்டாட, நந்தினி அனுமதி கொடுப்பாளோ? என்ற சந்தேகத்தோடும் ஏக்கத்தோடூம்.

No comments:
Post a Comment